Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜே.வி.பி அரசியலும் தொடரும் பிளவுகளும் - ஒரு அரசியல் பார்வை

ஜே.வி.பி முன்னாள் தலைவரும், இன்று அக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளராக இருந்த சோமவன்ச அமரசிங்க, அக் கட்சியில் இருந்து விலகி புதியதொரு கட்சியை ஆரம்பிக்கப் போவதாக அண்மையில் அறிவித்ததுடன், தனிநபர் அரசியல் கேலிக்கூத்துக்களையும் நடத்திவருகின்றார்.

இவர் 2001ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஜே.வி.பியின் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்தவர். அதன் பின்னரான அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான கட்சி, இன்று "கட்சிக்கொள்கைக்கு முரணாக" செல்வதாக கூறியே சோமவன்ச வெளியேறினார்.  

ஜே.வி.பியில் இருந்து 2005 களில் விமல் வீரவன்சா புதிய கட்சியைத் தொடங்கியதும், 2010 இல் முன்னிலை சோசலிசக்கட்சி தோன்றியதும், 2015 இல் சோமவன்ச விலகி புதிய கட்சியைத் தொடங்க இருப்பதான அறிவிப்பும், கடந்த 10 ஆண்டுகளின் அடுத்தடுத்து தொடர் நிகழ்வுகளாகும். ஜே.வி.பியின் தொடர்ச்சியான வர்க்க விரோத அரசியலின் பொது அரசியல் வெளிப்பாடாகும். அதேநேரம் புதிய கட்சிகளின் தோற்றமானது வர்க்க அரசியலை நோக்கியும், அதில் இருந்து விலகியும் செல்லும் இரு நேர் எதிரான அரசியல் பிளவுகளை அடிப்படையாகக் கொண்டு நடந்தேறியது. 

ஜே.வி.பி யில் இருந்து பிரிந்து உருவான கட்சிகளையும், ஜே.வி.பி யின் அரசியலையும், அரசியல்ரீதியான வேறுபாட்டையும் அரசியல்ரீதியாக புரிந்து கொள்வது அவசியமானதாகும். 

குறிப்பாக கடந்தகாலத்தில் குறுகிய இனவாத சகதிக்குள் வாழ்ந்த தமிழ் முஸ்லிம் மக்கள், இடதுசாரிய அரசியல் இருந்து தங்களைக் குறுக்கிக் கொண்டு, தனிமைப்பட்ட பார்வைக்குள் முடங்கிக் கொண்டே அனைத்தையும் அணுகினர். இதைக்கடந்து ஜே.வி.பியை அரசியல் ரீதியாக புரிந்து கொள்வது, சமூகம் பற்றிய பொது அக்கறை உள்ளவர்களுக்கு அவசியமானது. 

ஜே.வி.பியின் வர்க்க அரசியலும், அதன் அரசியல் போக்குகளும் 

1965 களில் தோன்றிய ஜே.வி.பி இயக்கமானது, 1971, 1989-1990 இரு ஆயுதக் கிளர்ச்சிகளை நடத்தியது. பல பத்தாயிரம் பேரை தியாகம் செய்த அந்தப் போராட்டமானது, வர்க்க விடுதலையை முன்வைத்தது. 

ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கான வர்க்க விடுதலையை பெற்றுத்தரும் இயக்கமாக தன்னை முன்னிறுத்திக் கொண்ட அதேநேரம், உழைக்கும் மக்களில் இருந்து விலகிய தனிக்குழுவாக தன்னை தகவமைத்துக் கொண்டது. 

1971 இல் கட்சி ரீதியாக ஒருங்கிணைந்த ஒரு கட்சிக் கொள்கைக்கு பதில், உதிரியான வர்க்க கொள்கைகளைக் கொண்டிருந்த நிலையிலேயே ஆயுதப் போராட்டத்தில் இறங்கியது. அதேநேரம் அந்த இயக்கத்தின் பொது அரசியல் வழிமுறையானது, மக்கள் திரள் வர்க்கப் பாதையில் இருந்து விலகிச் செல்வதாக இருந்தது. குட்டிபூர்சுவா வர்க்கத் தன்மை கொண்ட, இடது தேசியவாத சீர்திருத்தவாத இயக்கமாக பரிணமித்தது. 

1970 களின் பின்னான இலங்கை இடதுசாரிய இயக்கத்தில், ஜே.வி.பி மட்டுமே மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து செயல்பூர்வமாக இயங்கும் ஒரு கட்சியாக முன்னிலை வகித்தது. குட்டிபூர்சுவா தேசியவாதத்தையே இடதுசாரிய கொள்கையாய் கொண்டிருந்த அதே நேரம், தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து தனிமைப்பட்டும், உழைக்கும் சிங்கள மக்கள் மத்தியில் இருந்தும் தன்னை குறுக்கிக் கொண்டது.

1989-1990 இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியின் போதும் கூட கடந்தகால அரசியல் வழிமுறையானது பெரிதும் மாற்றமின்றி, தனிநபர்களை அழிக்கும் தனிநபர் பயங்கரவாதத்தை அரசியல் - இராணுவ யுத்ததந்திரமாக முன்தள்ளியது. இதன் மூலம் உழைக்கும் மக்களில் இருந்து மேலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட இயக்கம், அவர்களுக்காக தாங்கள் போராடி விடுதலை பெற்றுத் தருவதையே வர்க்க விடுதலை என்று நம்பியது.     

ஜே.வி.பியானது ஆரம்பம் முதலே தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு எதிராக முதலாளித்துவம் முன்தள்ளிய இனவொடுக்குமுறையையும், அனைத்து இனவாதங்களையும் எதிர்த்துப் போராடும் வர்க்கக் கட்சியாக தன்னை முன்னிறுத்தி இருக்கவில்லை. 

1980 களில் இனமுரண்பாடும், யுத்தமும் முதன்மை பெற்று வந்த வரலாற்றுப் போக்கில், இனவொடுக்குமுறையும் இனவாதமும் முதன்மையான சிந்தனைமுறையாக சமூகத்தில் இழையோடியது. ஜே.வி.பியானது தனக்கென்று வர்க்க வழியை கொண்டு இதற்கு எதிராக அணிதிரள்வதை கைவிட்டு, இனவாதத்தை மறைமுகமாக ஆதரிக்கும் அரசியல் வழியைத் தேர்ந்தெடுத்தது. படிப்படியாக பழைய சீரழிந்த இடதுசாரிய கட்சி வழியில் தேர்தல் கட்சியாகவும், பாராளுமன்ற சீர்திருத்தவாதக் கட்சியாகவும், கூட்டணிக் கொள்கையை முதன்மையாக கொண்ட கட்சியாகவும் சீரழிந்ததுடன், அது இயங்கிய இனவாத இனவொடுக்குமுறை அரசியல் பாதையில் தன்னை இணைத்துக் கொண்டது. அரசுடன் இணைந்து முதலாளித்துவ இனவாதத்தை பலப்படுத்தி அதை பாதுகாக்கும் கட்சியாக தன்னை மாற்றியது. புலியை முன்னிறுத்தி அதை அழிப்பதை ஆதரிக்கும், அரசின் நவதாராள முதலாளித்துவ இனவாதக் கொள்கையை தனது அரசியல் வழிமுறையாக முன்தள்ளியது. 2000 இன் பின்பாக இனவாத அரசுடன் இணைந்து கொண்டு, அரசின் இனவாதப் போக்கை ஆதரிக்கும் திசையில் பயணித்தது. 

கட்சி விமல்வீரவன்ச முன்னிறுத்திய பாராளுமன்ற அரசியல் மூலம் இனவாத அரசியலை முன்தள்ளியது. இதன் மூலம் ஜே.வி.பியின் முன்னணி செயற்பாட்டாளராக விமல்வீரவன்ச மாறினார். முதலாளித்துவ இனவொடுக்குமுறையை முதன்மையாக்கி அதைப் பிரச்சாரம் செய்யும் கட்சியாக, ஜே.வி.பி தன்னை வெளிப்படுத்தியது. கட்சி, அரசின் இனவொடுக்குமுறை அடிப்படையிலான யுத்தக் கொள்கையை ஆதரித்தது மட்டுமல்ல, யுத்தத்துக்கு ஆள்திரட்டும் எல்லை வரை சென்றதன் மூலம், கட்சியானது வலதுசாரிய பாதையில் பயணித்தது. 

இந்த வலதுசாரிய அரசியல் வழிமுறைக்கு எதிராக கட்சிக்குள் இடது தன்மையுடன் கூடிய போராட்டங்கள், இறுதியில் விமல்வீரவன்சவை தனிக்கட்சியாக வெளியேறுமாறு வைத்தது. விமல்வீரவன்சவின புதிய கட்சி தனிநபரை முதன்மைப்படுத்தி இடதுசாரிய அரசியலையே கைவிட்டு, அரசுடன் இணைந்து மக்களை ஓடுக்கும் வர்க்கவிரோத முதலாளித்துவ கட்சியானது.   

ஜே.வி.பி கட்சியானது விமல்வீரவன்சவின் வலதுசாரிய கொள்கைக்கு எதிரான இடது தேசியவாத பூர்சுவா கொள்கையை முன்வைத்து மீண்ட போதும், வலதுசாரிய திசைவிலகல்களுக்கு காரணமான கடசிக் கொள்கையை மாற்றுவதை மறுதளித்தது. கொள்கை சரியானது, தனிநபர்கள் தான் வலதுசாரிய பாதைக்கு விலகியதான அரசியல் மதிப்பீட்டுக்கு எதிரான, வர்க்கக் கட்சிக்குரிய வர்க்க அரசியலை முன்வைத்து உட்கட்சி போராட்டங்கள் கட்சிக்குள் தொடங்கியது. 

வர்க்கப் போராட்டம் பற்றிய விவாதம் கட்சிக்குள் தொடங்கியது. தமிழ் முஸ்லிம் மக்களில் இருந்து விலகிய கட்சியின் இனவொடுக்குமுறையிலான கொள்கையை எதிர்த்தும், அனைத்து இனவாதத்தையும் எதிர்த்தும் போராடாத அதன் இனவாதக் கொள்கையையும் எதிர்த்தும்,  உழைக்கும் மக்களில் இருந்து விலகிய ஜே.வி.பியின் வர்க்க விரோத முதலாளித்துவ  அரசியலை எதிர்த்தும், உட்கட்சி விவாதம் கட்சிக்குள் முதன்மை பெற்றது. இறுதியில் கட்சி அதை அனுமதிக்க மறுத்தும், விவாதத்தை நடத்திய தலைமையை கட்சியில் இருந்து ஒதுக்கியும் விலக்கிய நிலையிலும், வர்க்கக் கட்சியாக முன்னிலை சோசலிசக் கட்சி 2011 இல் ஜே.வி.பியில் இருந்து வெளியேறியது. 

இதன் மூலம் முன்னிலை சோசலிசக் கட்சி 1960 களுக்கு பின்பாக, இலங்கையின் வர்க்கப் போராட்டம் பற்றியும், மக்கள் திரள் பாதையை முன்வைக்கும் வர்க்கக் கட்சியாக வெளிவந்தது. அதை தனது அரசியலை நடைமுறைகள் மூலம் வெளிப்படுத்தும் வண்ணம்,  வர்க்க கட்சியாக இயங்குவதை முன்னிறுத்தி வருகின்றது. வர்க்கப் போராட்டத்தை நடைமுறையில் இழந்து போன கடந்த இடது வரலாற்றுப் போக்கில் இருந்து, முன்னிலை சோசலிசக் கட்சி இன்று தன்னை வேறுபடுத்தி வருகின்றது. 

ஜே.வி.பிக்குள் நடந்த உட்கட்சிப் போராட்டமானது, ஜே.வி.பி வலது பிரிவை பலப்படுத்தியது. முன்னிலை சோசலிசக் கட்சியாக உண்மையான வர்க்க சக்திகள் வெளியேற, இடது தேசியவாத சக்திகள் தனிமைப்பட்டு போனது. சோமவன்சவின் தேசியவாத குட்டிபூர்சுவா இடது தலைமைத்துவதுக்குப் பதில், வலதுசாரிய அநுரகுமார திஸாநாயக்கவை தலைமைத்துவத்தை 2014இல் உருவாக்கியது. ஜே.வி.பியின் அரசியல் வழிமுறையையே வலதுசாரியமாக மாற்றி அமைத்தது. 

ஜே.வி.பியின் வலதுசாரிய போக்குக்கு எதிராகவே, இன்று சோமவன்ச கட்சியில் இருந்து விலகுவதற்கான அரசியல் காரணமாகும். அதேநேரம் புதிய கட்சி பற்றி அறிவித்தலும் வெளியாகி இருக்கின்றது. இந்த அறிவித்தல் வர்க்கப் போராட்டத்தை அல்ல, பழைய   இடது குட்டிபூர்சுவா தேசியவாதத்தையே மீள முன்வைக்கின்ற தனிநபர்வாதக் கட்சிக் கொள்கையாகும்.  

இதைத்தான் சோமவன்ச "கட்சிக்கொள்கைக்கு முரணாக" கட்சி செல்வதாகக் கூறியுள்ளார். 

இங்கு விமல்வீரவன்ச, சோமவன்சா அரசியல் பாதையானது, 2011 முன்னிலை சோசலிசக் கட்சி முன்வைத்த வர்க்க அரசியலை நிராகரிக்கின்றதும், குட்டிபூர்சுவா தேசியவாதத்தை முன்னெடுக்கும் வலது - இடது பிரிவுகளாகும். இலங்கையில் உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரான, குட்டிபூர்சுவா தேசியவாத கொள்கையைக் கொண்டவையாகும்.

அதேநேரம் இங்கு விமல்வீரவன்ச, சோமவன்ச ஜே.வி.பியில் இருந்து தனிநபர்களாக தங்களை மையப்படுத்தி வெளியேறிய நிகழ்வுக்கும் மாறாக, கட்சியின் பிளவாக முன்னிலை சோசலிசக் கட்சி ஒரு வர்க்கக் கட்சியாக தோன்றியது மட்டுமின்றி, அதை இன்று நடைமுறை போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றது.     

முடிவாக

வர்க்க அரசியலை முன்வைக்காத இடதுசாரிய அரசியலையும், வர்க்க நடைமுறையைக் கொண்டிராத கட்சிகளையும், அரசியல் ரீதியாக இனம் கண்டு கொண்டு போராடுவதே இன்றைய வரலாற்றின் தெரிவாக இருக்க முடியும். அரசியல் போலிகளையும், புரட்டுகளையும், பிரமுகர்த்தனத்தையும், சீர்திருத்தவாதத்தையும் கடந்து, மக்கள் திரள் வர்க்க அரசியல் பாதையில் பயணிப்பதே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலாகும். இது மட்டுமே சமூகம் பற்றி உண்மையாகவும் நேர்மையாகவும் நடைமுறையில் வாழ விரும்புகின்றவர்கள் முன்னுள்ள, ஒரேயொரு அரசியல் தெரிவாக இருக்க முடியும்.