Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தொண்டைமானில் தொடங்கி மனோ கணேசன் வரையான மலையக மக்களின் எதிரிகள்

ஊரான ஊர் இழந்தேன்

ஒத்தப்பனை தோப்பிழந்தேன்

பேரான கண்டியிலே

பெத்த தாயே நா மறந்தேன்

சி.கே. வேலுப்பிள்ளை அவர்கள் தொகுத்த "மலைநாட்டு மக்கள் பாடல்கள்" என்னும் தொகுப்பில் தமிழ்நாட்டில் இருந்து இலங்கையின் மலைகளிற்கு வயிற்றுப்பசி தீர்க்க வந்து வாழ்விழந்த ஒரு தோட்டத்தொழிலாளியின் துயரம் இவ்வாறு நாட்டார்பாடலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. "இந்தியாவில் அப்போது கடும் பஞ்சமும், வரட்சியும் நிலவியதால் அங்கிருந்த மக்களை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வரக்கூடியதாக இருந்தது.

இந்நிலைமைகளைப் பயன்படுத்தி பிரிட்டிசார் தென்னியாவிலிருந்து  "மலிவான கூலிகளை" வரவழைப்பதற்கு பல வஞ்சகமான உபாயங்களை கையாண்டனர். தமிழ் தரகர்களை இப்பணிக்கு அவர்கள் பயன்படுத்தினர். இத்தரகர்கள் தென்னிந்தியர்களை ஆசை காட்டி ஏமாற்றி அழைத்து வந்தனர்". (க.மோகன்ராஜ், இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்).

தமிழ்நாட்டின் ஏழை மக்களை 1840 களில் "தமிழ்த்தரகர்கள்" பிரித்தானிய காலனித்துவவாதிகளின் எலும்புத்துண்டுகளிற்காக ஏமாற்றி அனுப்பி வைத்தனர். இன்று 2016 இலும் அவர்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். பிரித்தானிய காலனித்துவாதிகளிற்கு கால் கழுவிய தரகர்களின் இடத்தில் இலங்கையின் மக்கள் விரோத, இனவெறியர்களிற்கு சேவகம் செய்யும் மலையகத்தமிழ் தொழிற்சங்கவாதிகள், அரசியல்வாதிகள் என்னும் ஒட்டுண்ணிகள் மலையக மக்களை ஏமாற்றி வயிறு பிழைக்கிறார்கள்.

மலையக தோட்டத்தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைப்பதற்கு தோட்டத்துரைமார்களும், பிரித்தானிய காலனித்துவ அரசும் அனுமதிக்கவிலை. நடேச ஐயர் என்னும் முற்போக்குவாதி, அக்காலத்தில் இடதுசாரிக் கட்சியாக இருந்த இலங்கை தொழிலாளர் கட்சியின் ஆதரவாளர் தொழிலாளர்களை அணி சேர்த்து தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களின் மூலம் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை வென்றெடுத்தனர். ஆனால் மலையக மக்களின் போராட்டங்களினாலும், நடேச ஐயரின் உழைப்பினாலும் கிடைத்த தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைகளை வலதுசாரிகள் கைப்பற்றிக் கொண்டனர். அநகாரிக தர்மபாலா, டி.எஸ் சேனநாயக்கா, கன்னங்காரா போன்றோர் முன்னெடுத்த இந்திய எதிர்ப்பு வாதத்திற்கு எதிராக மலையக மக்கள் மத்தியில் இந்தியர் - இலங்கையர் தேசியவாதத்தை முன் வைத்து பெரி. சுந்தரம் தலைமையிலான இலங்கை - இந்தியர் காங்கிரஸ் தொழிற்சங்கம் என்னும் பிற்போக்குவாதிகள் மலையக மக்களை காட்டிக் கொடுக்கும் அரசியலை தொடக்கி வைத்தனர்.

தோட்டத்தொழிலாளர்கள் மிக மோசமாக சுரண்டப்படுவதை எதிர்த்து சமசமாசக் கட்சி, இலங்கை தொழிலாளர் கட்சி போன்ற இடதுசாரிக்கட்சிகள் தீவிரமாகப் போராடின. "ஐரோப்பிய தோட்டத்துரைமாருக்கு வாக்குரிமை அளிப்பதில் அவர்களிற்கு (இலங்கை அரசிற்கு) எத்தகைய ஆட்சேபமும் இல்லை. சொத்துடையோரும், மக்களைச் சுரண்டுபவரும் வாக்குரிமை பெறுகின்றனர். ஏழைத் தொழிலாளிக்கோ வாக்குரிமை மறுக்கப்படுகிறது. இந்தியத் தொழிலாளரும், இந்நாட்டிலுள்ள அதிகளவு மக்களான விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒரே வகையானவர்கள். இந்தியராயினும், இலங்கையினராயினும் போராட்டம் முதலாளி வர்க்கத்திற்கு எதிரானதே" என்று சமசமாசக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கலாநிதி என். எம். பெரரா அரச கவுன்சிலில் பேசினார். (குமாரி ஜெயவர்த்தனா, மலையகத் தமிழ் மக்கள்).

இவ்வாறு இலங்கையின் இடதுசாரிகள் இலங்கையின் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு முதலாளித்துவத்திற்கும், இனவாதத்திற்கு எதிராக போராட வேண்டியதன் தேவை குறித்து பேசியும், போராட்டங்களை முன்னெடுத்தும் வந்த போது இந்திய வம்சாவழியைச் சேர்ந்த வணிகர்கள், தோட்ட உரிமையாளர்கள் என்னும் பிழைப்புவாதிகள், அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமான தேசியவாதத்தை முன்னெடுத்து மலையக தோட்டத் தொழிலாளர்களை இலங்கையின் உழைக்கும் மக்களுடன் இணையவிடாமல் தடுத்தனர்.

தோட்டத்தொழிலாளர்களை "இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைகளாக" பிரித்தானியர்கள் சுரண்டிய போது அவர்களின் கைக்கூலிகளாக "கங்காணிகள்" என்னும் பதவியில் இருந்து ஏழைத் தொழிலாளர்களின் உழைப்பையும், ஊதியத்தையும் களவெடுத்து சேர்த்த பணத்திலேயே இந்த தேசியவாதிகள் தோட்ட உரிமையாளர்கள் ஆகினார்கள். "தோட்டத்துரையிடமிருந்து பெரிய கங்காணியே தனது தொழிலாளர் கோஸ்டிக்குரிய சம்பளத்தை வாங்குவார். அப்பொழுது தோட்டத்தொழிலாளரிடையே நூறு வீதம் கல்வியறிவின்மை நிலவியது. இவர்களது எழுத்தறிவின்மையைப் பயன்படுத்தி, "வெள்ளைக் கம்பளி" வாங்கிய கணக்கு, "கறுப்புக் கம்பளி" வாங்கிய கணக்கு என்று கள்ளக் கணக்கெழுதி சம்பளத்தொகை முழுவதையும் பெரிய கங்காணி அபகரித்துக் கொள்ளுவார். என்றுமே தொழிலாளியால் கடனில் இருந்து மீள முடியாது". (க. மோகன்ராஜ், இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்). இப்படி தன் சக இந்திய தமிழ் தொழிலாளியை சுரண்டிய தன்னினம் தின்னி கங்காணிகள், பின்பு தொழிற்சங்கங்கள் மூலம் பணமும், பதவியும் பெறலாம் என்ற நிலை வந்த போது இந்தியத் தேசியம், மலையகத் தமிழ் என்று பாசமலர்களாகி தேசியக்காரர்கள் வேசம் போட்டனர்.

மலையக தமிழ் மக்களை தான் இறக்கும் வரை ஏமாற்றி பிழைப்பு நடத்திய செளமியமூர்த்தி தொண்டைமானின் தந்தை, கறுப்பையா தொண்டைமான் இப்படி கங்காணியாக இருந்து தோட்ட உரிமையாளர் ஆனவர். ஒரு தோட்ட உரிமையாளனான தொண்டைமான், ஏழைத் தோட்ட தொழிலாளர்களின் தலைவனாக இருந்த கொடுமை பல லட்சம் மலையக மக்களின் வாழ்வை மீள முடியா அவலத்தில் தள்ளியது. "காங்கிரசின் தலைமையை அதனைக் கைப்பற்றிய காலம் முதல் விடாப்பிடியாக தன் கைக்குள்ளேயே வைத்துள்ள தொண்டமானின் சாகசம் சாதித்துவேசம், பணத்திமிர் ஆகிய இரண்டின் அடிப்படையிலேயே வேரூன்றி ஓங்கியது." என்று இரா. சிவலிங்கம் அவர்கள் சி.வி.வேலுப்பிள்ளையின் "நாடற்றவர் கதை" நூலிற்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

ஏழை மலையக தோட்டத்தொழிலாளர்களிடம் தொழிற்சங்க சந்தாப்பணம் என்று கொள்ளையடித்த பணமும், அவர்கள் போட்ட வாக்குப்பிச்சையிலே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பெற்றது போதாதென்று மலையக மக்களை டி.எஸ்.சேனநாயக்காவுடன் சேர்ந்து நாடற்றவர்களாக்கியவனும், கடைந்தெடுத்த இனவாதியும், தமிழ் மக்களை இனக்கலவரத்தில் கொன்றவனுமாகிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனா போட்ட மந்திரிப் பதவி என்னும் எலும்புத்துண்டிற்கு வாலாட்டும் அளவிற்கு தொண்டமானின் துரோக அரசியல் தொடர்ந்தது.

மலையக மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவதை செந்தில் தொண்டமான், மனோ கணேசன் என்று இன்றைய அரசியல்வாதிகள் அப்படியே தொடர்கிறார்கள். இவர்கள் தொண்டமான் போலவே மக்கள் விரோத ஐக்கிய தேசியக் கட்சியுடனும், சுதந்திரக் கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து மலையக மக்களின் ஏழ்மையைப் போக்குவார்களாம்; பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்களாம். ஆனால் இவர்கள் மந்திரிகளாகிறார்களே தவிர மலையக மக்கள் மாறா வறுமையில் தான் இன்றைக்கும் வாழ்கிறார்கள்.

"தோட்டத்தொழிலாளர்கள் இங்குள்ள ஏனைய மக்கள் போன்று சாதாரண வீடுகளில் வாழவில்லை. "லயன்" எனப்படும் அறைகளிலேயே அன்று தொட்டு இன்று வரை வாழ்ந்து வருகிறார்கள். மேற்படி "லயன்களில்" 10 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்ட ஒரு அறையும்; 5 அடி அகலம் கொண்ட ஒரு வராந்தாவும் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும்". (இரா. சிவச்சந்திரன், மலையகத் தமிழ் மக்கள்). மனித வாழ்க்கைக்கு உதவாத இந்த லயன்களில் வாழும் மக்கள் பல்வேறு உடலியல், உளவியல் தாக்கங்களிற்கு உட்பட்டுள்ளனர். பல லயன்கள் இடிந்து விழக்கூடிய நிலையில் காணப்படுகின்றன. மழைக்காலங்களில் ஏற்படும் மண் சரிவின் காரணமாக பலர் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. (புதிய ஜனநாயகக் கட்சி அறிக்கை, மலையக மக்களும் எதிர்காலமும், 1992).

இட நெருக்கடி, சுகாதாரக் குறைபாடுகள் மட்டுமல்ல மண் சரிவினால் ஏற்படும் மரணங்களுடனுடன் தான் மலையக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் வெள்ளத்திலும், மண் சரிவிலும் அவதிப்பட்ட மலையக தோட்டத் தொழிலாளி ஒருவர் அங்கு வந்த மாகாணசபை உறுப்பினர்களிடம் "பாதுகாப்பான வீடு கிடைக்க வழி செய்யுங்கள்" என்று கேட்டார். "அரசாங்கத்திடம் பேசிக் கொண்டிருக்கிறோம்" என்ற வழக்கமான மறுமொழி வந்தது. அந்த தொழிலாளி எதிர்த்துப் பேசிய போது "எதிர்த்து பேசாதே, உன்னால் கட்டித் தர முடியுமா" என்று ஒரு கைத்தடி ஊளையிட்டது. "நாய்களே, வீடுகள் கட்டித் தருவோம்" என்று நீங்கள் தானே தொழிலாளர்களிடம் வாக்குப்பிச்சை கேட்டீர்கள்.

நேற்று காலையில் ஒரு தமிழ் ஊடக நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் ஒரு விஷயம் சொன்னார். “யாழ்ப்பாணம் போய் நேற்றுதான் கொழும்பு வந்தேன். அங்கே ஒரு செய்தி பிரபலமாக வலம் வருகிறது” என்றார். “பீடிகை போதும். செய்தியைத்தான் சொல்லுங்கள்” என்றேன். “இந்த நல்லாட்சியிலும் நாம் எதிர்பார்த்தவை எதிர்பார்த்த வேகத்தில் நடக்கவில்லை. மக்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. அரசுக்கு அழுத்தம் தந்து வேகத்தை அதிகரிக்க மக்களை அணி திரட்டி ஜனநாயக போராட்டம் நடத்த வேண்டும் என ஜனவரியில் இருந்து கட்சிக்குள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். ஒன்றும் நடந்தபாடில்லை. மக்கள் போராட்டம் என்று வெறும் வாய்ப்பாட்டு பாட இனி அச்சமாக இருக்கிறது. ஏனென்றால் பாருங்கள். அரசுக்குள் அமைச்சராக இருந்து கொண்டே மனோ கணேசன், தன் ஏனைய சகபாடிகளையும் இழுத்துக்கொண்டு வந்து தலைநகர் கொழும்பில் பகிரங்க போராட்டம் நடத்தி விட்டார். அவர் செய்தது உண்மையில் தான் அங்கம் வகிக்கும் அரசாங்கத்துக்கு அழுத்தம் தரும் நடவடிக்கைதான். என்ன சொன்னாலும் அதுதான் உண்மை. ஆனால், உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் நாம்தான் என்று சொல்லிக்கொண்டு, நாம் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் சும்மாவே இருக்கின்றோம்” என்று ஒரு பிரபல தமிழ்த்தலைவர் யாழ்ப்பாணத்தில் குறைப்பட்டு நொந்துக்கொண்டாராம். “இதை என்னிடம் சொல்லாதீர்கள் பிரதர். ஒருவேளை போராட்டம் வேண்டாம் என்றுகூட அவர்கள் நினைக்கலாம். அதுபற்றி நான் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால், முடியுமானால் உங்கள் பத்திரிக்கையில் இதை எழுதுங்கள்” என்றேன். “ஏனென்றால், அங்கே உள்ளவர்களுக்கு புரியாவிட்டாலும்கூட பரவாயில்லை. இங்கே உள்ள ஒருசில கண்ணிருந்தும் பார்வை இல்லாத குருடர்களுக்கும், காதிருந்தும் செவிப்புலன் இல்லாத செவிடர்களுக்கும், வாய் இருந்தும் பேசத்தெரியாத ஊமைகளுக்கும், மூளை இருந்தும் சிந்திக்க தெரியாத முட்டாள்களுக்கும், இதயம் இருந்தும் நல்லெண்ணம் இல்லாத காழ்ப்புணர்ச்சிக்காரர்களுக்கும் புரியட்டும்” என்றேன்.

இது வடிவேலு தனக்குத் தானே "பீ கேர்புல்" சொன்னது மாதிரி அண்ணன் மனோ கணேசன் தனக்குத் தானே "நீ தலைவண்டா" என்று சொல்லிக் கொண்ட பதிவு. மலையக மக்களை மிக மோசமாக சுரண்டிக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும், சுதந்திரக் கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து கொண்டு அவர் போராட்டம் நடத்துகிறாராம். அவர்கள் எப்படியான அயோக்கியர்கள் என்பதும், மக்கள் விரோதிகள் என்பதும் தெரியாதது போல் கதை விடும் அண்ணன் எல்லாம் நல்லெண்ணம் இல்லாதவர்களைப் பற்றி பேசும் கொடுமையை என்னவென்று சொல்ல!.

கூனி அடிச்ச மலை

கோப்பிக் கன்று போட்ட மலை

அண்ணனைத் தோத்த மலை

அந்தா தெரியுதடி

யாரிடம் சொல்கிறாள் இவள்? அல்லது யாரிடம் முறையிடுகிறாள், காலத்திடமா அல்லது தனது இளைய தலைமுறையிடமா? (சி.வி. வேலுப்பிள்ளை, மலைநாட்டு மக்கள் பாடல்கள்). அந்த தங்கை தனது தமையனை மலைகளிடம் பறி கொடுத்தாள். மலையக மக்கள் தமது வாழ்க்கையை தலைமுறை, தலைமுறையாக முதலாளிகளிடமும், இனவாதிகளிடமும், தன்னினம் தின்னிகளான மலையக அரசியல்வாதிகளிடமும் பறி கொடுத்து வருகிறார்கள். தொண்டமான்களை புறந்தள்ளி நடேச ஐயர் போன்ற போராளிகள் முன் வந்து போராட வேண்டும்.