Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

கேகாலையில் தோழர் குமாரின் விடுதலை கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

இன்று 11/11/2015 செவ்வாய் கேகாலை நகரத்தில்; தோழர் குமார் குணரத்தினத்தை உடனடியா விடுதலை செய்யக்கோரியும், அவரது அரசியல் உரிமையினை அங்கீகரிக்க கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கு பற்றி குமாரின் விடுதலைக்காகவும், அவரின் அரசியல் செய்யும் உரிமைக்காகவும் குரல் கொடுத்தனர்.

குமார் குணரத்தினம் உயிராபத்து காரணமாக கடந்த அரசாங்க காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஒருவர். இலங்கையில் பிறந்து கல்வி கற்று, பல்கலைக்கழக கல்வியை மேற்க்கொண்ட இலங்கை பிரஜை. அத்துடன் மிக நீண்டகாலமாக அரசியலில் ஈடுபட்டு முன்னணி செயற்பாட்டாளராக செயற்பட்டுக் கொண்டடிருப்பவர்.

மைத்திரி - ரணில் "நல்லாட்சி அரசு" பதவி ஏற்றதும் கடந்த ஆட்சியில் அரசியல் காரணங்கள் காரணமாக உயிராபத்தில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்தவர்களை மீள வந்து செயற்படுமாறு அழைத்திருந்தது அனைவரும் தெரிந்ததே.

அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் காலத்தில்; கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாட்டிற்குள் திருப்பி வந்தவர் தான் தோழர் குமார். நாட்டிற்குள் வந்து இலங்கை பிரஜைக்கு விண்ணப்பித்து ஒரு விண்ணப்பத்தையும் அனுப்பி இருந்தார். அதற்கு பதில் அளிக்காது காலம் கடத்தி வந்தது குடிவரவுக்கு பொறுப்பான அமைச்சு. இன்று அவரை கைது செய்து, நாடு கடத்தும் முயற்சியில் இந்த நல்லாட்சி அரசு முனைப்புடன் செயலாற்றுகின்றது. நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் என்று கூறுவது இந்த அரசின் நண்பர்களிற்கு மட்டும் போல தெரிகின்றது.

எந்த அரசும் ஜனநாயகத்தையும், மக்கள் உரிமைகளையும் தட்டில் வைத்து எடுத்து செல்லுமாறு இன்றைய உலகில் அழைப்பது கிடையாது. உலகெங்கும் மக்கள் தங்களின் உரிமைகளிற்க்காகவும், ஜனநாயகத்தை  நிலை நிறுத்தவும் பல போராட்டங்களை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றனர். இலங்கையும் இதற்கு விதி விலக்கல்ல.

கல்வியை, தனியார் மயமாக்கலுக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் முதல் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டங்கள் வரை இதனை எமக்கு நன்கு உணர்த்தி இருக்கின்றது.

தோழர் குமாரின் ஜனநாயக மற்றும் அரசியல் உரிமைக்கான போராட்டம் தொடர்ச்சியாக நாடுதளுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சியின் பேச்சாளர் புபுது ஜெயகொட அறிவித்துள்ளார்.