Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"அபகரித்த காணிகளை திருப்பிக்கொடு" - யாழில் சம உரிமை இயக்கம் பிரச்சாரம்

யாழ். பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று (04/07/2016) காலை முதல் யுத்தப் பாதிப்புகளுக்கு இழப்பீடுகளை வழங்குமாறும், இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குமாறும், அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி, சமவுரிமை இயக்கத்தினர் கையெழுத்து வேட்டையை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு அநேகமான மக்கள் கையெழுத்திட்டு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

நாடு தழுவிய ரீதியில் மூவின மக்களையும் ஒன்றிணைத்து சமவுரிமை இயக்கம் கடந்த 2010 முதல் யுத்த அவலத்திற்கு ஆளான தமிழ் மக்களிற்க்கு நீதியை வேண்டி பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

"இராணுவ முகாம்களை மட்டுப்படுத்து", "மக்களின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து இராணுவத்தை வெளியேற்று", "அபகரித்த காணிகளை திருப்பிக்கொடு", "அரசியல் கைதிகளை விடுதலை செய்" போன்ற பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

குறித்த கையெழுத்து பெறும் செயற்பாடானது நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள அதேவேளை, இன்று யாழ் பேருந்து நிலையம், யாழ் பல்கலைக்கழகம், மருதனார்மடம், சுன்னாகம், பருத்தித்துறை போன்ற இடங்களில் கையெழுத்து பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நாளை கிளிநொச்சி, முல்லைத்தீவு நகரங்களில் கையெழுத்து பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் யாழ் நகரப்பகுதிகளில் சமவுரிமை இயக்கம் மேற்குறித்த கோரிக்கைகளை முன்வைத்து பரவலாக சுவரொட்டிகளை ஒட்டியிருந்தது.