மைத்திரி அரசு தருவதாக கூறிய ஜனநாயகத்தை தேடி, "மக்கள் கூட்டம்"!
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
19 Mar 2015
- Hits: 931
கடந்த மகிந்த ஆட்சியில் மக்களிற்கு மறுக்கப்பட்ட ஜனநாயகத்தை நிலை நாட்டுவதே தனது முதல் பணி என உறுதி வழங்கியதனால் அனைத்து இன மக்களின் பெரும் ஆதரவுடன் மைத்திரி ஜனாதிபதி ஆக்கப்பட்டார். ஜனநாயகத்தை உறுதி செய்வதற்க்கான 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினை இல்லாது ஒழித்தல் என பல குறிக்கோள்களை முன் வைத்தனர்.
இப்போது ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படமாட்டாது சில அதிகார குறைப்புகள் மட்டும் தான் என கூறுவதுடன் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு என்ன நடந்தது என்பது கேள்விக்குறியாக மாறிப்போயுள்ளது.
இன்று நாட்டில் பழைய ஆட்சிமுறையே தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. தோற்றம் மாறியிருக்கிறது. உள்ளடக்கம் மாறவில்லை. நடிகர்கள் மாறியுள்ளனரே ஒழிய நாடகத்தின் கதை மாறவில்லை. வசனங்கள் மாறியுள்ளதே தவிர நாடகத்தின் கரு மாறவில்லை.
இவர்கள் தருவதாக கூறிய ஜனநாயகம் மக்களுக்கல்ல மாறாக நாட்டை சூறையாடி கொழுக்க விரும்பும் இன்னொரு ஆளும் வர்க்க குழுவுக்கானதே என்பது ஒவ்வொரு நாள் நிகழ்வுகளிலும், அந்நிய ஏகாதிபத்தியங்களுடன் போடும் ஒப்பந்தங்களிலும் இருந்து தெள்ளத் தெளிவாகின்றது.
இதனை அம்பலப்படுத்தியும் உண்மையான மக்களுக்கான ஜனநாயகம் எப்படி இருக்கும் எனவும் தெளிவுபடுத்த எதிர்வரும் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பிலியந்தலையில், இடதுசாரிய முன்னணியில் உள்ள கட்சிகளின் ஆதரவுடன் முன்னிலை சோசலிச கட்சி மக்கள் கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளது. இந்நிகழ்வில் ஜனநாயகத்தை நேசிக்கின்ற அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கவும்.