Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

லால்கர் பழங்குடி மக்களின் போராட்டங்கள்

மேற்கு வங்கத்தின் லால்கர் பகுதி இன்று இந்தியாவின்  “பயங்கரவாத ஒழிப்பு”  யுத்தத்தின் மையமாக ஆகியுள்ளது.  ஆந்திராவில் மையங் கொண்டிருந்த மாவோயிஸ்ட் புயல்,  இன்று லால்கரில் சுழன்றடிப்பதனால், அங்கு வைத்தே மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை வேரறுத்துவிடவேண்டும் என்பது, இந்திய ஆளும்தரப்பின் தீராத வேட்கையாகியுள்ளது.

இந்திய தரப்பின் விருப்பம் என்றில்லாமல், ஆளும்தரப்பு எனச் சொல்வதற்கும் காரணமுண்டு. இந்த ஒரு விடயத்தில் தான் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும்,  மேற்குவங்க ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் அரசிற்கு முழு அளவிலான ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக பா.ஜ.க. சிதம்பரத்தை தலைமேல் வைத்துக் கொண்டாடுகின்றார்கள். பயங்கரவாதத்தை தீர்க்கமான நடைமுறைகளினூடே ஒழிக்க முயல்வதற்காக, அண்மையில் தம்மீதான நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்தி 76 பொலீசாரை தாக்கி மாவோயிஸட்டுக்கள்  கொன்ற சம்பவத்திற்காக  பொறுப்பேற்று  சிதம்பரம் அமைச்சர்ப் பதவியை ராஜினாமா செய்ய வந்தபோது, பா.ஜ.க. அந்தக் கதையே எழக் கூடாது எனறு செல்லக் கண்டிப்பு செய்திருந்தார்கள்.

லூல்கர் பகுதியில் மாவோயிஸட்டுக்களின் பலம் அதிகரித்த நிலையில், அவர்கள் அதனை தமது தளப்பிரதேசம் எனப் பிரகடனப்படுத்திய நிலையில், ஆளுந்தரப்பு கருவறுப்பு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது. உண்மையில் இது மாவோயிஸ்டஸடுக்கள் ஆயுதப் போராட்ட வழியில் இந்தியாவில் பாட்டாளிவர்க்க ஆட்சியை ஏற்படுத்தும் ஆரம்பத் தளப்பிரதேச விவகாரமா? இல்லை. கறையான் புற்றெடுக்க பாம்பு குடியேறி ஏற்படுத்திய ஓர் பிச்சினைதான் இது.

லால்கர் பகுதி கனிவளம் மிக்கது. அதனை பல்தேசக் கம்பனிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்றுள்ளது அரசு. அதனை எடுக்கும் பொருட்டு அங்குவாழும் பழங்குடி மக்களை வெளியேற்ற வேண்டியிருந்தது. காலாகாலமாய் அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் வெளியேற்றத்தை மறுத்து தொடர்ச்சியாகப் போராடினர். ஓவ்வோர் பழங்குடி மக்களும் தமது பகுதியைப் பாதுகாக்கப் போராடத் தொடங்கியதில், அதன் வளர்ச்சியடைந்த நிலையானது, அப்பிராந்தியம் பூராவிலும் உள்ள அனைத்துப் பழங்குடி மக்கள் பிரிவினரையும் ஒன்றுபட்ட போராட்டத்தின்பால் ஒன்றுபட வைத்தது.

அந்தப் போராட்டங்கள் ஒப்பீட்டு ரீதியில் எளிமையானவை. எமது பரிமாண்டப் போராட்ட வெளியீடுகளில் “பலநூறு பேரழிவு ஸ்கோர்ப் பெறுபேறு”  போன்றதல்ல. இவ்வகையில் இப்போராட்டம் எளிமையானதாயினும்,  ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் எதிரியால் எளிதில் உள்ளே நுழைந்துவிட முடியாமல் போய்விட்டது. எப்படி நுழைவது என்ற தெரியாமல் ஆயுதப்படை கைகளைப் பிசைந்து கொண்டிருக்கவேண்டிய நிலையேற்பட்டது.

சிலவருடங்களின் முன்னர் நர்மதை ஆற்றுக்குக் குறுக்காக அணைகட்ட எடுத்த முயற்சியின்போது, காடழிப்பு ஒன்று அவசியப்பட்டது. அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் அதற்கு இடமளிக்க மறுத்துப் போராடினர். மீறி காட்டழிப்பிற்கு ஆயுதப்படை உதவியுடன் முயலப்பட்டபோது பழங்குடிப் பெண்கள் ஒவ்வொரு மரங்களையும் சுற்றி கைகோர்த்து வளைத்து நின்றுகொண்டார்கள். அவர்களை  தாக்கி அப்புறப்படுத்தாமல் மரங்களை வெட்ட முடியாத நிலையேற்பட்டது. பெண்களின் இவ்வுறுதியான போராட்ட நிகழ்விற்கு சூழல்பாதுகாப்பு இயக்கங்களும் தம் ஆதரவைத் தெரிவித்தது மாத்திரமல்லாமல்,  அதை உலகிற்கும் அம்பலப்படுத்தினர்.  இதனால் ஒன்றுமே செய்யமுடியாமல் காடழிப்போர் பின்வாங்கினர்.

அவ்வாறே தான் லால்கரிலும் பல்வேறு பழங்குடி மக்கள் ஒன்றுபட்டு போராடியபோது, அதிகாரத்தரப்பின் ஆயுதங்களால் ஒன்றுமே பண்ணமுடியாமற் போய்விட்டது. பொலீசாரது  அத்து மீறல்களை அந்த மக்கள் எதிர் கொண்டு, அவ்வப்போது எதிர் கொள்கின்ற பொலீசார்களை தோப்புக்கரணங்கள் போட வைப்பது போன்ற போரட்டங்களுக்கு ஊடாகவே காவல் நிலையங்களை நீக்கவைத்தது வரையான மக்கள் போராட்டங்கள் உறுதியாக இருந்தது.

இந் நிலையில் தான் மாவோயிஸ்ட்டுக்கள் நுழைந்தனர். முன்னதாக ஆந்திராவில் ஆயுதப்படைகளின் அழித்தொழிப்பிற்கு முகங் கொடுக்கமுடியாது திணறியவர்கள், இங்கு பிவேசித்தபோது பெருவிருந்து கிடைத்த கொணடாட்டத்திற்கு உள்ளாயினர். தமது தளப்பிரதேசம் என்றனர். மாக்சிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பிறரை அழித்தொழித்தனர். அவர்களுடன் தொடர்புடையோருக்கு செருப்புமாலை அணிவித்து, அவமதிப்பு ஊர்வலம் நடாத்தினர். அழித்தொழிப்பு எதிரியுடன் கதைத்த பழங்குடி மக்களைக் கொன்று, எச்சரிப்பதுவரை  போனது. எந்தமக்களுக்கு இதெல்லாம் எனப்பட்டதோ, அந்த மக்களுக்கு எதிராகவே ஆயுதங்கனைத் திருப்பி, வெறும் பயங்கரவாதச் செயற்பாடு எனும் நிலைக்க தரமிறங்கியது.

இத்தகைய சூழலை வாய்ப்பாக்கிக் கொண்டு தான் இன்று மிக இலகுவாய் இராணுவம் உள்நுழைந்துள்ளது. முப்பது வருடங்கள் மார்க்சிஸ்ட்டுக்களின் ஆட்சியில் கூட இப்பிரச்சினையை தீர்க்கப்படவில்லை. அத்துடன் மார்க்சிஸ்ட் – மாவோயிஸ்ட் மோதல் தீரும் முன் காங்கிரஸ்ற்கு அரசியல் தீனியாகின்றது. அத்துடன்  மேற்கு வங்கம் இந்த மோசமான எதிரியிடம் பறிபோகும் நிலைக்கு உள்ளாகியுள்ளது. இப் பழங்குடி மக்களின் அரசியல் பொருளாதார வாழ்வு,  சட்டியில் இருந்து நெருப்புககுள் விழுந்த கதையாகியுள்ளது  துயரம்.