Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக மாணவர் போராட்டம்

பல்கலைக்கழக விவகாரங்களில் அரசாங்கம் இராணுவத்தை தலையிடச் செய்வதாகக் கூறி அதனைக் கண்டித்து இலங்கையின் தலைநகர் கொழும்பில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இலங்கை தேசிய மாணவர் அமைப்பைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக அந்தப் போராட்டத்தை நடத்தினார்கள்.

அதன்போது தமது போராட்டம் குறித்து மாணவர்களால் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

தமது போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த தேசிய மாணவர் சங்கத்தின் செயலாளரான அசங்க புலேகொட அவர்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்களை அடுத்து இலங்கை பல்கலைக்கழகங்களை இராணுவ மயப்படுத்த இலங்கை அரசாங்கம் முயல்வதாகக் குற்றஞ்சாட்டினார்.

இதனால் பல்கலைக்கழக மட்டத்தில் இருக்கும் ஜனநாயக நிலைமைகள் பாதிக்கப்படும் என்றும், அதனை மக்களுக்கு தெளிவுபடுத்தவே தாம் போராட்டம் நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்