Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

புலிகளின் தலைமையை காட்டிக்கொடுத்தவர் யார்?

புலம்பெயர் தமிழர்கள் தமது தோல்வி மனப்பான்மையை இலங்கையிலிருக்கும் தமிழர்க்கும் பரப்புகின்றார்கள். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் இனி போராட்ட தேவையில்லை. புலம்பெயர் தமிழர்களிடம் தான் போராட்டம் களமாறியிருப்பதாக கூறிக் கொள்வதன் ஊடாக, ஒரு போராட்டச் சக்தி சொந்த மண்ணில் சொந்தக் காலில் நிற்கத் தேவையில்லை என பிரச்சாரம் செய்கின்றார்கள். இவைகள் தான் அரசியல் மோசடி, அன்னியச் சக்திகளை நம்பி பிழைக்கும் அரசியல் அயோக்கியத்தனம்.

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தினை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய வரலாற்றுக் கடமையை எவரும் மறுதலித்து விடவில்லை.

தமிழ் மக்களின் போராட்டம் தளம் மாறியிருப்பதாக கூறிக் கொள்ளும் பித்தலாட்டத்திற்கு நாம் அனைவரும் முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. முள்ளிவாய்க்காலுக்கு வழிகாட்டி, அழிவை ஏற்படுத்தியவர்களின் கயமை அரசியல் போக்கிற்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. ஆனால், தமிழ் மக்களின் போராட்டம் உழைக்கும் மக்களின் உரிமையை உறுதிப்படுத்தும் போராட்டத்தின் நிபந்தனையின் கீழ் தொடரப்பட வேண்டும்.

1. சொந்தக் காலில், சொந்த தளத்தில் இருந்து

2. அனைத்து தேசிய இனங்களின் ஐக்கியத்தின் மூலம் போராட்டம் முன்னேற வேண்டும்.

மனித குலவிடுதலையின் தொடர்ச்சி:

இலங்கையில் நடைபெற்ற போராட்டம் என்பது, ஒரு இனத்தைச் சார்ந்த தமிழ் குறுந்தேசிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், ஒடுக்கிய பேரினவாத ஆளும் வர்க்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் முடிவடைந்தது. ஆனால் எந்தக் கோரிக்கைக்காக போராடினார்களோ, அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை. முற்போக்குப் பாத்திரம் வகிக்க வேண்டிய தமிழ் மக்களின் போராட்டமானது அன்னியச் சக்திகளிடம் சரணடைந்து, போராட்டத்தின் தலைவியை அன்னியச் சக்திகளிடம் வழங்கியதினால் இறுதியில் அன்னியச் சக்திகளினால் இல்லாதொழிக்கப்பட்டது. குறுந்தேசியவாதிகளின் உரிமைக்கான அந்தப் போராட்டம் பாதிவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வெற்றி மமதை கொண்ட இனவெறி தலைவிரித்தாடுகின்றது.

வடக்கு- கிழக்குப் பகுதிகளில் இராணுவ ஆட்சியையும், இராணுவம் சார்வுற்பத்திiயும் மேற்கொண்டுள்ளது. பாசீச அரசு உள்ளுர் முதலாளித்துவ ஆட்சி நிர்வாகங்களை அழித்து மையப்படுத்துகின்றது.

இன்று போர்க்குற்றம் என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்றும், ஐ.நா பிரேரணை என்றும் கூறிக் கொண்டு தத்தம் உப நிறுவனங்கள் ஊடாக பிரச்சாரம் செய்யும் பெரும் நாடுகளே முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு காரணமாகும்.

வளர்ந்த நாடுகளின் அரசியல் நலனுக்காக பலிக்கடாவாகும் சிறிய நாடுகளின் ஆட்சியார்கள் வெறும் காகிதப் புலிகளே. ஆட்சியில் இருந்தாலும் பொருளாதார நலனுக்கு காவடி தூக்குபவர்கள் தான்.

மேற்கு தேசங்கள் உண்மையில் பொருளாதார நலனுக்காக தன்னார்வ அமைப்புக்களை உருவாக்கி, தமக்குத் தேவையான அடிவரிடிகளை விலைக்கு வாங்கி விடுகின்றது. ஆட்சி மாற்றத்தைக் கோரி இலங்கையில் சரத் பொன்சேக்கா, ரணில் என இனவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படும் தமிழ் தலைமைகள். மக்களுக்கான அரசியல் செய்யாது தேர்தல் அரசியலை தமிழ்க் கட்சிகள் மேற்கொள்கின்றன.

இனவாதிகளுடன், பிராந்திய வல்லரசுகளுடன், மேற்கு வல்லரசுகளுடன் இணைந்து செயற்படுவதன் ஊடாக தமிழ் மக்களின் உரிமை பெற்றுவிடலாம் என்று நம்புகின்றனர். மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதாகவே தமிழ் அமைப்புகள் செயற்படுகின்றன. இன்று ஜெயலலிதாவின் ஊடாக

• இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்கு செல்லும் வரையிலும்.

• தமிழர்களுக்கு சமவுரிமை கிடைக்கும் வரையிலும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும்.

• போர்க்குற்றம் புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்த வேண்டும்.

• அமெரிக்காவுடனும் மற்றைய நாடுகளுடனும் சேர்ந்து ஐ.நா சபையில் செயற்பட வேண்டும் என்றும், சிறிலங்கா அரசிற்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கோரிக்கைகளின் பின்னால் உள்ள அமெரிக்க சார்பு நிலையைக் கவனிப்பதில்லை. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்ததாக பத்திரிகைகள் செய்தி வெளியிருககின்றன.

இங்கு நாம் யார் பக்கம் என்ற கருத்து வருகின்றது. ஆம் நாம் மக்கள் பக்கம் இவர்கள் தீர்மானம் கொண்டு இப்போ வருகின்றார்கள். இந்த சர்வதேச சமூகம் தான் அன்று முள்ளிவாய்க்காலும், அழிவிற்கும் வித்திட்டவர்கள். நாம் இப்போ ஓநாயிடம் நீதி கேட்கின்றோம். இந்த ஓநாய்கள் தம்மிடம் வந்து சரணடையுமாறு தமது கருத்தியலை தமது நிறுவனங்கள் ஊடாக அரசியல் நகர்வுகளைச் செய்கின்றார்கள். மேற்கு மூலதனம் தமது பொருளாதார நலனை சீன முதலாளிகளுக்கு எதிராகவும், தமது சந்தையையும், மலிந்த கனிமவளங்களையும் பாதுகாக்கின்றார்கள்.

மேற்கு மூலதனம் வழிநடத்தும் போராட்டங்கள்:

ஏகாதிபத்தியங்கள் தமது சுரண்டலை மேற்கொள்ள சி.ஐ.ஏ, மொசாட் தலைமையில் பல சதிகளை உலகில் நடத்தியுள்ளன, நடத்திக் கொண்டு இருக்கின்றன. சதிகளும், ஆட்சிக் கவிழ்ப்புக்களும், எதிர்ப்புரட்சிக் குழுக்களும் காலத்திற்கு காலம் உருவாக்கப்படுகின்றன. இன்று அரபுவசந்தம், அன்று மேற்கு ஜேர்மன், இத்தாலிய புரட்சிகர அணியில் கூட இவ்வாறான எதிர்ப்புரட்சி நபர்களை ஊடுருவச் செய்து தனது புரட்சிகர அமைப்பை சிதைவுக்கு உள்ளாக்கியிருக்கின்றது. அதேவேளை இவ்வாறான நபர்களின் ஊடுருவல் ஊடாக ஏதோ புரட்சிகர அமைப்புக்களை ஏகாதிபத்தியம் உருவாக்குகின்றன என்ற மனப்பிரமையை குட்டி முதலாளித்துவ வர்க்க ஆய்வாளர்கள், புத்திஜீவிகள், இடதுசாரிகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது. இவ்வாறான ஆழ்மனவுணர்வுச் கருத்தியல் தாக்குதலில்கள் ஊடாக ஏகாதிபத்தியங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.

நம்பிக்கையீனத்தை ஊட்டுவதில் முதலில் பலியாவது குட்டி முதலாளிய வர்க்கத்தவர்களே. இவர்களே சமூகத்தின் முன்னணிப் படையாக இருப்பவர்கள். இவர்களே எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள், இவர்கள் தாம் கொண்ட அறிவைக் கொண்டு சமூகத்திற்கு கருத்துச் சொல்லும் வல்லமை படைத்தவர்கள். இவ்வாறு கருத்துச் செல்லும் ஆழுமை படைத்தவர்கள். எவ்வாறு, எந்தக் கருத்தை சமூகத்துக்கு கொடுக்கின்றார்கள் என்பது முக்கியமானதாகும். சமூகத்திற்கு கொடுக்கும் கருத்துக்கள் அடிப்படையில் ஒரு சமூகத்தின் நிலையும், அது எந்தச் பொருளாதாரச் சிந்தனையில் மறுவுற்பத்தி செய்யப்படுகின்றது என்பதில் இருந்து நோக்கப்பட வேண்டும்.

இவ்வாறாக கருத்தியல் மேலான்மையில் இருந்து வெற்றிக் கொள்ள வேண்டிய தேவை சமூக முன்னோடிகளுக்கு இருக்கின்றது. இந்தச் சமூக பொருளாதார அமைப்பின் நலனின் கொண்ட பிரச்சார வடிவங்களை காலத்திற்கு காலம் உருவாக்கிக் கொள்கின்றது. இவர்கள் எதுக்கு எடுத்தாலும் கடந்த காலத்தைக் காட்டியே போராட்டங்களை மழுங்கடிப்பவர்களாக உள்ளார்கள். இவர்களின் அகவுணர்வின் வெளிப்பாடுகள் சமூகத்தின் வெளிப்பாடுகளுக்கு பாதமாகவே அமைந்து விடுகின்றது. அகவுணர்வின் நிர்பந்தத்திற்கு ஆழாகிய ஆய்வாளர்கள், சமூகத்தினை இயங்குகின்ற பொருளாதார அமைப்பின் சிந்தனையின் உள்ளே மனிதர்களின் சிந்தனையை அமுழ்த்தி விடுகின்றனர். ஏனெனில் தனிமனிதர்களின் உணர்வுகள் பொருளாதார அமைப்பின் வெளிப்பாடுகளே. இதனை கருத்தில் கொள்ளாது தமது சிந்தனையை முதன்மைப்படுத்துபவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறான அகநிலைவாதிகள் தமது சிந்தனை மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக எந்தச் (அரை நிலபிரபுத்துவ சிந்தனையின்) அவர்கள் வளர்ப்பிற்கு உள்ளாகியவர்களோ அதில் உள்ள சிந்தனா வடிவங்களில் உள்ள தந்திரங்களைப் (அரை நிலபிரபுத்துவ சிந்தனைக்குட்பட்ட தூய்மைவாதம்) பயன்படுத்தி மனிதர்களின் செயற்பாடுகளை மழுங்கடித்து விடுவார்கள்.

இவ்வாறாக மழுங்கடிக்கும் போக்கை ஏகாதிபத்தியங்கள் நேரிடையாக இவர்களிடம் குத்தகைக்கு விடுவதில்லை. ஏனெனில் ஏகாதிபத்திய நலன் கொண்ட கருத்தியல்களை சமூகத்தில் விதைக்கின்றது. இதனையே ஏதோ தம்மிடம் குத்தகைக்கு விட்டது மாதிரி சிரமேற்கொண்டு தன்னியல்பாக செயற்படுவார்கள். தன்னியல்பாக செயற்படும் முறைமைமைய பாதுகாத்துக் கொள்வதற்காகவும், மூடிமறைப்பதற்கும் சமூகத் தன்மையை பயன்படுத்திக் கொள்வார்கள். படித்த குட்டி முதலாளிவர்க்கத்தின் ஆழ்மனச் சிந்தனை என்பது எப்பவும் புரட்சிகரமாக இருக்க வேண்டியதில்லை. இவர்கள் தமது இருப்புக்காகவும், இருப்பியலின் தேவைகருதியும் படைப்புக்களை, சிந்தனைகளை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.

பாலச்சந்திரனின் படத்தைப் பகிர்தல்:

இன்று சிங்கள இனத்தின் உள்ள முற்போக்குச் சக்திகள் தமிழ் மக்களின் பிரச்சினையை புரிந்து கொள்ள முற்பட்டுள்ளார்கள். மாணவர்கள் கைது செய்யப்பட்டபின்னர் பல பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பாலச்சந்திரன் என்ற குழந்தையை வைத்து அன்னிய சக்திகளும், இனவெதிர்ப்பாளர்களும் அரசியல் செய்கின்றார்கள். ஒரு பகுதி இந்தச் சமூகத்தின் அவலத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றார்கள். சிறிலங்கா ஆட்சியாளர்கள் இந்தச் சிறுவனுக்கு அநீதி இழைத்ததாக தம்மிடையே கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்றார்கள்.

இன்று சிறுவன் பாலச்சந்திரனுக்கு நடந்த கொடுமையை தமது நண்பர்களிடையே முகப்புத்தகத்தில் பகிரும் நிலமையையும் நாம் அவதானித்தில் கொள்ள வேண்டும். இது நல்ல ஆரோக்கியமான விடயமாகும். சமூகத்தின் உள்ள பிரதிநிதிகள் முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்று அறிய முற்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறான சிறு செயற்பாடுகள் ஐக்கியப்பட்ட போராட்டத்தை நோக்கி வளர்த்துக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பமாகும். நாம் மக்களின் உண்மையான விடுதலை நோக்கி செல்லவேண்டிய பாதை இன்னும் இருக்கின்றது.

ஆனால் அன்னியச் சக்திகள், அன்னிய சக்திகளை நம்பியிருப்பவர்கள் சிங்கள மக்களிடம் அநீதியை கொண்டு செல்வதில் கவனம் செலுத்தாது. மேற்கு ஏகாதிபத்தியங்களை நோக்கிய கவனத்தை செலுத்துகின்றனர்.

வீரம் விழைந்த மண்:

முள்ளிவாய்க்காலில் போராடி புலிகளின் தலைமை என்பது, இறுதிக் காலத்தில் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் முகவர்களின் வழிநடத்தலில் தான் பின்தான் சென்றிருக்க வேண்டும் என்ற ஐயப்பாடு இருந்து வந்துள்ளது. இந்த ஐயப்பாட்டினை நிரூபிக்கும் வகையில் தான் போராட்டக் களம் என்பது போராடும் தேசத்தில் அல்லாது புலம்பெயர்ந்த தேசத்தில் கைமாறியுள்ளதாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

ஆம், தவறுகளுக்கு அப்பால் இறுவரை போராடிய தலைமையையும், வீர தேசபக்தர் படையையும் இழந்து நிற்கின்றனது உழைக்கும் வர்க்கத்தின் முன்னணிப்படை. துயர்கள் ஆயிரம் வந்திருந்த போதும் மரணித்த போராளிகளுக்கு எம் செவ்வணக்கம். அவர்கள் எதிர்த்துப் போராடியது சுரண்டும் வர்க்கச் சிந்தனையில் உருவாகிய ஒரு சிறு கள்வனையே. பெரும் கள்வனாகிய ஏகாதிபத்தியத்தினை எதிர்த்துப் போராட வேண்டும் என்று போராடிய மாவீரர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. ஏனெனில் பிரிந்தாளும் தந்தித்தாளும் தந்திரத்திற்கும், உணர்ச்சிக்கும் உட்பட்டதே எம் அன்றையச் செயற்பாடுகள்.

தொடர்ச்சியாக விட்டுக் கொடுப்புக்களுக்கும் அப்பால் செல்ல வேண்டிய போராட்டம் வலதுசாரி மேற்குலசார் தமிழ் குட்டி முதலாளிய சக்திகளின் வழிநடத்தலாம் முற்றுப் புள்ளியாக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பிரபாகரனின் போர்க்குணாம்சம் எல்லோரும் கேள்விப் பட்டதே. ஆனால் தனிப்பட்ட பிரபாகரினின் போர்க்குணத்தையே கேள்விக்குள்ளாக்கும் முள்ளிவாக்கால் சரணாகதிக்கு தூபமிட்ட மேற்குலசார் புத்திஜீவிகளையும், மேற்குலக அடிவரிடிகளையும் இனம்காண வேண்டிய தேவை இருக்கின்றது.

1. பிரபாகரன் என்பவரின் போர்க்குணம்

2. சர்வதேசச் சதிகளுக்கு உட்படுத்திய கயவர்கள் யார்?

இன்றைய பிரச்சனை சர்வதேச சதிக்கு உட்படுத்திய கயவர்களை (தேசத்தினைப் பற்றிய உண்மையான கனவுகளுடன் வாழ்பவர்கள்) தேசபக்தர்களுக்கும், மக்களுக்கும் அம்பலப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமை இருக்கின்றது. பிரபாகரனையும், போராடிய தேசபக்த சிறுவர்களையும் முள்ளிவாய்க்கால் என்ற கொலைக்களத்திற்கு வித்திட்ட கொலைபாதகர்கள் யார்??

கொலை பாதகர்கள் யார் என்று மறைப்பதற்காக உருவாக்கப்பட்ட பரப்புரைதான் போராடும் தளம் என்பது புலம்பெயர்ந்த மேற்குல தேசங்கள் என்பதாகும். இந்த பரப்புரையின் காரணகர்தாக்களை கண்டறிய வேண்டியது தேசபக்தர்களினதும், மக்களினதும் கடமையாகும்.

இவர்களே வெள்வேறு நாடுகளில் குறிப்பிட்ட பிரமுகர்களுக்கு (உதாரணமாக tamils for labour) கட்சிவேலை செய்து கனவான் அரசியலைச் செய்கின்றனர். ஆகவே இவர்களின் பின்னால் இலங்கை தமிழ் மக்களின் சுயாதிபத்தினை அடகுவைக்கும் கனவான் அரசியலாகும்.

தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் கொண்றவர்களிடம் தான் இன்று நியாயம் கேட்கின்றோம். இவை கூட தமிழ் மக்களின் இறைமையை அன்னிய தேசங்களிடம் தாரைவார்ப்பதாகும்.

புலம்பெயர் தேசங்களில் இருந்து எம்மை வழிநடத்தியவர்கள், இன்று பணம் படைத்த சொத்துக்களை பாதுகாக்கும் நபர்களும் மக்களின் விடுதலைக்காக போராடப்போவதில்லை. அவர்கள் தமது சொத்துக்களை, தமது இருப்பை மையமாகக் கொண்டு தான் போராடப் போகின்றார்கள். வயிறுபசிக்காத இவர்களிடம் நீங்கள் மக்களுக்காக போராடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

தமிழ், சிங்கள இனவெறியை தூண்டிவிட்டு மனிதர்களை பிரிந்து இந்த பொருளாதார அமைப்பை பாதுகாப்பவர்களாகவும், தமது சொத்துக்களை பெருகுபவர்களாகும்.

மூன்றாவது பாதைதேவை:

இன்று ரணில், சரத் போன்றவர்களுடன் சந்தர்ப்பவாதக் கூட்டு வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக் கொள்ள முடியாது. முதலாளித்துவ அடிவருடிகளான சரத், ரணில் போன்றவர்கள் முன்னர் இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்கள். இவர்கள் உடனான சந்தர்ப்பவாதக் கூட்டானது தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வையும் தந்து விடப்போவதில்லை.

இவர்களை எல்லாம் அன்னியப்படுத்தி அனைத்து இனங்களும் உரிமையுடனும் வாழும் சமூகத்தை நோக்கி பயணிக்கும் போராட்டமே இன்று தேவையானதாகும். பதவிக்கான தேர்தல் பாதையல்ல.

இன்று இலங்கை முழுவதும் அன்னியச் சக்திகளின் ஆழுமையின் கீழ் தான் இருக்கின்றது. இன்று எந்த மக்களும் சுயநிர்ணம் உடையவர்களாக இல்லை. அனைத்து மக்களின் உரிமையை பெற்றுக் கொள்ள வேண்டிய போராட்ட தந்திரோபாயத்தை வகுக்க வேண்டும். போராடி இழந்த இழப்புக்களுக்கு ஒரு உண்மையான மதிப்புக் கொடுக்கப்பட வேண்டிய தீர்வை நோக்கி தொடர்ச்சியாகப் போராட வேண்டியிருக்கின்றது. இந்தப் போராட்டம் அன்னிய சக்திகளின் தயவில் நம்பியல்ல. அது சொந்த மக்களின் தயவில் இருந்து அமையப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் விடுதலை மீதும், அவர்களின் உரிமையின் மீதும், அவர்களின் இருப்பின் மீதும், அதற்காகத் தம்மை இழந்து ஈகமான போராளிகள் மீதும் அளவு கடந்த பாசம் கொண்டவர்களாகிய நீங்கள், தொடரும் போராட்டத்தில் புதிய பாதையில் பயணிக்க முயற்சிக்க வேண்டும். அதற்கான தேடலை நோக்கி நகர வேண்டிய தேவை இருக்கின்றது.