Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பாரிஸில் இடம் பெற்ற வசந்தத்தை தேடுகிறோம் கலைவிழா சொல்லும் செய்தி

இனம், மதம், மொழி கடந்து பரிஸில் "வசந்தத்தை தேடுகிறோம்" கலைவிழா, இலங்கை வரலாற்றில் நடைபெற்ற முதல் நிகழ்வாகும். இந்த நிகழ்வானது முன்மாதிரியான புதிய கலை பரிணாமங்களுடன், சமூக உள்ளடக்கத்துடன் புதிய வரலாற்றுக்குள் தன் காலடி எடுத்து வைத்திருக்கின்றது. 

இனவாதம், மதவாதம், சாதியவாதம் கொண்ட சமூகத்தில் இருந்தும், அரசியல் ரீதியாக இதற்கு எதிராக இருந்த இனவாத பிரச்சாரங்களை மீறி, தனி மனிதனை முதன்மைப்படுத்தும்  அரசியல் காழ்ப்புகளை அடிப்படையாக கொண்ட எதிர் பிரச்சாரங்களையும் கடந்து, ஒரு பெருவிழாவாக மாறியது. கலை நிகழ்ச்சிகளிலும், நிகழ்வுகளின் கலந்து கொண்டவர்களை இடையில் தடுத்து நிறுத்திய போதும், அந்த தடைகளை கடந்து இந்த நிகழ்வு 19.10.2014 நடந்தேறியது.  நிகழ்வு கொண்டு இருக்க கூடிய சொந்தக் குறைபாடுகளை கடந்தும், சோர்வற்ற நிகழ்வாக, தன் நோக்கையும் முதன்மையாக்கி கொண்டு தன்னை ஒளிர வைத்தது. 

நிகழ்சிக்கு வந்து கொண்டு இருந்தவர்களையும் வெளியேறிக் கொண்டு இருந்தவர்களைக் கடந்து, 7 மணி நேரமாக 400 மேற்பட்டவர்கள் பல்வேறு சமூக எதிர்பார்ப்புகளுடன் அரங்கில் நிறைந்து காணப்பட்டனர். இந்த வகையில் குறைந்தது 600 பேர் கலந்து கொண்ட, சமூக நிகழ்வாகியது. 

நோர்வே, டென்மார்க், அவுஸ்திரேலிய, பிரிட்டன், சுவிஸ், இத்தாலி, ஒல்லாந்து என்று பல்வேறு நாடுகளில் இருந்து பலர் இந்த விழாவில் கலந்து கொண்டதுடன், நிகழ்வுகளையும் கூட நடத்தி இருந்தனர்.        

பல்வேறு சமூக தரப்புகளும், நிகழ்ச்சி சார்ந்த தொழில் நுட்பவியலார்களின் சுய பங்களிப்புடன் கூடிய முழுமையான நிகழ்வாக, தம்மை ஈடுபடுத்திக் கொண்டதன் மூலம் நிகழ்வை வெற்றிகரமாக மாற்றினர் என்றால் மிகையாகாது.           

மக்களைச் சார்ந்த செயற்பாட்டுக்கு கிடைத்த இந்த அனுபவமும் வெற்றியும், அரசியல் உணர்வாக, சமூக நோக்கு கொண்ட நடைமுறையாக தன்னை மாற்றிச் செல்லக் கோருகின்றது. அனைவரையும் முன்னேறிய மக்களைச் சார்ந்த புதிய புள்ளியில் இணைந்து பயணிக்க இந்த வெற்றிகரமான கலை விழா அழைப்பு விடுத்துள்ளது.