Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சக்கிலியர்கள் மனிதர்கள் அல்ல, தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சாதிவெறி!!!

சக்கிலியர்கள் என்று இந்துசாதி அமைப்பு என்னும் கொடிய பேய்களினால் அழைக்கப்படும் துப்புரவுத் தொழிலாளர்கள் வழமையான மனிதர்கள் அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த திருகோணமலை நகரசபை உபதலைவரான சேனாதிராஜா ஸ்ரீஸ்கந்தராஜா என்ற சாதிவெறி பிடித்த நாய் ஒன்று ஊளையிட்டிருக்கிறது. இந்த இருபத்தொராம் நூற்றாண்டிலும் ஒரு மனிதன் தன் சக மனிதர்களை தமக்கு சமமில்லாதவர்கள், வழமையான மனிதர்கள் அல்ல என்று சொல்லும் கொடுமை, இழிவு, காட்டுமிராண்டித்தனம் நடந்திருக்கிறது. அதுவும் தமிழ்மக்களிற்காக போராடுவதற்காகவே அவதாரம் எடுத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இந்த நாய் தன் சக தமிழ் மக்களைப் பார்த்து இப்படிக் குரைத்திருக்கிறது.

மனிதக் கழிவுகளை துப்புரவு செய்ய அந்த தொழிலாளர்கள் வேண்டும். ஆனால் அவர்களிற்கு நிரந்தரப்பணி என்ற உத்தரவாதம் கிடையாது, சம்பள உயர்வு கிடையாது. அவர்களின் மேற்பார்வையாளர்கள் எப்பொழுதும் உயர்சாதியினர் தான். எவ்வளவு படித்திருந்தாலும் அந்த தொழிலாளர்களின் பிள்ளைகள் மேற்பார்வையாளர்களாக வர சாதி வெறியர்கள் அனுமதிப்பதில்லை. இவற்றை எதிர்த்து திருகோணமலை நகர துப்பரவு தொழிலாளர்களான அந்த மக்கள் போராடுகிறார்கள். ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் போராடினால் சாதி வெறி பிடித்த நாய்களினால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும். அய்யா, நயினார் என்று கூனிக் குறுகி நிற்காமல் தொழிற்சங்கம் அமைத்து உரிமைகளிற்காக குரல் உயர்த்தினால் ஆண்டைகளினால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும். கீழ்வெண்மணியில் கோபாலகிருஸ்ணநாயுடு ஒடுக்கப்பட்ட மக்களை தீயிட்டு கொன்றான். இவன் ஏழைகள் ஒடுக்கப்பட்டவர்கள் மனிதர்கள் அல்ல என்கிறான்.

"அடங்காத் தமிழன்" சுந்தரலிங்கம் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலில் பூசாரி துரைசாமியோடு சேர்ந்து போர்க்கோலம் பூண்டார். ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணியை, ஈழத்தமிழர்களிற்காக தொடங்கி முதன்முதலில் தமிழீழம் கேட்ட செல்லப்பா சுந்தரலிங்கம் மாவிட்டபுரத்தில் களம் கண்டது கொதிக்கும் எண்ணெயிலும், கொழுந்து விட்டு எரியும் நெருப்பிலும் தமிழ் மக்களை கொன்று குவித்த சிங்கள இனவெறிக் காடையர்களை எதிர்த்து அல்ல. சிங்கள இனவெறியர்களின் ஏவல் நாய்களான இலங்கை இராணுவத்தையோ, இலங்கை காவல்துறையை எதிர்த்தோ அல்ல. ஆலயங்களில் வழிபட வழி விட வேண்டும் என்று கேட்டு வந்த தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த தமிழ் மக்களை எதிர்த்து தான் இந்த ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி வீரசிகாமணி போர் தொடுத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முந்தைய அவதாரங்களான தமிழ்க் காங்கிரசுக் கட்சி, தமிழரசுக் கட்சி என்னும் வலதுசாரி மக்கள் விரோதக் கும்பல்களின் வரலாறு முழுவதும் வெள்ளாள சாதிவெறியின் வரலாறாகவே இருந்து வந்திருக்கிறது. 1958 இல் இலங்கையில் இனக்கலவரம் முழுத்தமிழ் மக்களிற்கும் எதிராக சிங்கள தேசியவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டது. தமிழ் மக்கள் சிங்கள இனவாதிகளால் அடிமைப்படுத்தப்பட்ட அதே நேரத்தில் தமிழ்மக்களின் ஒரு பகுதி தமிழ்மக்கள் சைவவெள்ளாள சாதி வெறியர்களால் ஒடுக்கப்பட்டார்கள். தமிழ்க்காங்கிரசுக் கட்சியினர், தமிழரசுக் கட்சியினர் தமது வெள்ளாள சாதி பாசத்தால், மேல்தட்டு வர்க்கப் பாசத்தால் வெள்ளாள சாதி வெறியர்களுடன் சேர்ந்து நின்றனர்.

"சங்கானைக்கென் வணக்கம் சரித்திரத்தில் உன் நாமம் மங்காது, யாழகத்து மண்ணிற் பலகாலம் செங்குருதிக் கடல் குடித்துச் செழித்த மதத்துக்குள் வெங்கொடுமைச் சாக்காடாய் வீற்றிருந்த சாதியினைச் சங்காரம் செய்யத் தழைத்தெழுந்து நிற்கின்ற சங்கானைக்கென் வணக்கம்" என்று அறுபதுகளில் பொதுவுடமைக் கட்சியின் தோழர்கள் செங்கொடி ஏந்தி சாதி வெறிக்கு எதிராக சங்கானையில் போராடியதை கவிஞர் சுபத்திரன் வணங்கி கவிதை பாடினார். ஆனால் "தமிழர் தளபதி" அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் "அது சங்கானைப் போராட்டம் அல்ல சங்காய் போராட்டம்" என்று மாவோயிச கட்சியின் போராட்டத்தை சாதி வெறியர்களுடன் சேர்ந்து எதிர்த்தார். 2012 இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பச் சேர்ந்த வவுனியா நகரசபைத் தலைவரினால் துப்புரவுத் தொழிலாளர்கள் “வெளியே போங்கடா சக்கிலிய நாயளே” என இழிவு படுத்தப்பட்டனர்.

இன்றை வரைக்கும் இந்தக் கட்சிகளின் தலைவர்கள் வெள்ளாளர்கள் தான். இனக்கலவரங்களிற்கு பின்பு பெரும்பாலான வெள்ளாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால் இடைச்சாதிகள், ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை வீதம் அதிகரித்தாலும் அன்றைய சம்பந்தன் முதல் இன்றைய சுமத்திரன் வரை தமிழர் தலைமைகள் வெள்ளாளர்களே. சைவக் கோவில்களில் பூசை செய்வது அய்யர்மார்களின் பிறப்புரிமை, ஆதிக்கம் செய்வது வெள்ளாளர்களின் பிறப்புரிமை. போப்பு வெள்ளையினத்தவராக மட்டுமே இருப்பது போல தமிழ்க் கத்தோலிக்க பிசப்புகள் ஊர்காவற்துறை கரம்பன் வெள்ளாளர்களாக மட்டுமே இருப்பார்கள். (வெள்ளாளர் அல்லாத தற்போதைய பிசப்பான இம்மானுவேல் தோமஸ் சவுந்தரநாயகம் மட்டுமே இவ்வளவு நீண்ட காலத்தின் ஒரேயொரு விதிவிலக்கு). புரட்டஸ்தாந்து சபைகளான அங்கிலிக்கன், தென்னிந்திய திருச்சபை, மெதடிஸ்ட் சபைகள் இன்று வரைக்கும் வெள்ளாளரை விட்டு பிரிவதுமில்லை, வெள்ளாளரை விட்டு விலகுவதுமில்லை.

இந்த சாதிவெறிக் கொடுமைகளை, உயர்சாதி ஆதிக்கத்தை இடதுசாரிகளே தொடர்ந்து எதிர்த்து வருகின்றார்கள். இன்று நாம் இவற்றைப் பற்றி பேசும் போது சாதியைப் பற்றி பேசி தமிழர்களைப் பிரிக்கிறார்கள் என்று சில குள்ள நரிகள் ஊளையிடுகின்றன. சாதித்துவேசம் காட்டுபவன் மக்களைப் பிரிப்பதில்லையாம், அந்தக் கொடுமைகளை எதிர்ப்பவர்கள் தான் பிரிக்கிறார்களாம் என்று தமிழர் ஒற்றுமை, தமிழ்த்தேசியம் என்ற முகமூடிகளை போட்டுக் கொண்டு இந்த சாதிவெறி நரிகள் ஊளையிடுகின்றன. மானிப்பாய் மருதடியில் வண்ணார் சமுகத்தவர்களிற்கு அநீதி இழைக்கப்பட்டது. இதைப் பற்றி எவனும் வாயே திறக்கவில்லை.

மருதடிப்பிள்ளையார் கோயில் சாதிக்கொடுமையைப் பற்றி எழுதிய போது அது உண்மைதான் ஆனால் அது தனிமனிதர்கள் விட்ட தவறு என்று சிலர் விஞ்ஞான விளக்கம் கொடுத்தனர். கோயில் கொடி மரத்தை ஒளித்தவன் தனது சொந்தப் பிரச்சனைக்காக, தனிப்பட்ட பகைக்காக கொடி மரத்தை ஒளிக்கவில்லை. அவனிற்கு அந்தக் கோவிலில் திருவிழாச் செய்யும் மற்றவர்கள் எவருடனும் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஏனெனில் அவர்கள் எல்லோரும் வெள்ளாளர்கள். அவன் கொடி மரத்தை ஒளித்ததிற்கு ஒரே ஒரு காரணம் தான் அது வெள்ளாள சாதிவெறி. திருகோணமலை நகரசபைக்காரனிற்கு துப்பரவுத் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லை. கொடி மரக்கள்ளனிற்கு சலவைத் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லை.

இவை எல்லாம் இந்த சுத்த சன்மார்க்க உத்தமபுத்திரர்களிற்கு தெரியவில்லையாம். அவர்கள் சொல்கிறார்கள் நீங்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசினால் அது இலங்கை அரசிற்கு சாதகமாக போய்விடும். பிறகு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் ஆணியே புடுங்க முடியாமல் போய்விடுமாம். இன்று வரைக்கும் அந்த தொழிலாளர்களின் உரிமைகளிற்கான போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் மறுமொழி சொல்லவில்லை?. சாதிக்கொழுப்பில் தொழிலாளர்களை மனிதர்களாக மதிக்காத நகரசபை உறுப்பினரை ஏன் விசாரணை செய்யவில்லை?.

எண்பத்து மூன்றுக் கலவரத்திற்கு பின்பு அராஜகம், ஜனநாயக மறுப்பு என்று தமிழ் மக்களின் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட ஆயுதங்களின் மேல் காதல் கொண்ட மனநோயாளிகளைக் கேள்விகள் கேட்ட ஜனநாயக, முற்போக்கு சக்திகளின் மீதும் இன்று போலவே அன்று, தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். குரல்வளை நெரித்து கொலை செய்தார்கள். முப்பது வருடங்களும் மூச்சடங்கிய மனிதர்களுமாக தமிழ் மக்களின் வாழ்வு இருண்டு போனது. வறுமை, இன ஒடுக்குமுறை, சாதி, சமயம், பிரதேசவாதம் என மக்களை அடிமைப்படுத்தும் எல்லாவித ஒடுக்கு முறைகளிற்கும் எதிராக ஒடுக்கப்படும் எல்லா மக்களுடனும் இணைந்து போராடுவோம். வெங்கொடுமைச் சாக்காடாய் வீற்றிருந்த சாதிப்பொய்களும், புனைவுகளும் போராட்ட நெருப்பில் எரிந்து சாம்பலாகும்.