Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

வலியோடு வாழும் கலையரசி

துடிப்பும் மிடுக்குமாய்
புழுதிபறக்க
சிறுமியாய் ஓடிவிளையாடித்திரிந்தவள்
அண்ணாவெனத்தோளில்
தாவியேறி கூடவந்தவள்
திரண்டெளும் அலைகளிலும்
கையைப்பிடித்தவாறு எதிர்த்து நின்றவள்

கரையில் பொறுக்கிய
சிப்பி சோதிகளை
மடித்துக்கட்டிய என் சாறத்துள் சேர்ப்பாள்
தண்ணீர் அள்ளிவர
சிறுகுடத்தொடு நடப்பாள்
கிணற்றடியில்
தாகத்தொடு நிற்கும்
பசுக்களிற்கே முதல் இறைப்பாள்
மனிதஈரம் ஊறிய பிஞ்சுநெஞ்சம்
போரின் ரணத்தால்
விறைத்துக்கிடக்கிறாள்
சடுதியாக வலிவந்து
வீழ்ந்து துடிப்பதாய் சொல்கிறார்கள்

இரண்டு தசாப்தங்கள்

விசுவமடுக்
காட்டைப் பெயர்த்து
பசுந்தரையாய் நிமிர்த்திய தந்தை
கூனல் விழுந்தும்
கொப்பறாத்தேங்காய் பிளக்கிறார்
காலையிளந்து
தாய் கைத்தடியொடு இருக்கிறார்

கலையரசி
இன்னமும் சிறுமியாய் அருகில் வருகிறாள்
கையைப்பிடித்து
தலையைத்தடவி அண்ணா என்கிறாள்
கண்முன்னே பறிக்கப்பட்ட
கணவனைப் பற்றியதோ
பச்சிழம் குழந்தையை இழந்த தவிப்பையோ
எதுவும் சொல்லவுமில்லை
கண்ணீர் விடவுமில்லை
யுத்தத்தைப்பற்றிப் பேசவுமில்லை

அவளது மௌனம்
யுத்தத்தை வெற்றிகொண்டதாய்
மார்தட்டுபவர்களை
சுக்குநூறாய் உடைத்துப்போடுகிறது
கலையரசிகள்
வலியோடு வாழும் வாழ்வு
ஓர் இனத்தின் அடையாளமாய்
சாட்சியாய்
ஏழைக்குடும்பங்களை வீசி எறிந்திருக்கிறது

போர்நினைவாய்
எழுப்பப்படுகின்ற இராணுவச்சின்னங்களும்
புலிகள் வாழ்ந்த பதுங்கு நிலவறைகளும்
காட்சிப்பொருட்களாய்
சுற்றுலாவிற்கு விடப்படுகிறது
யுத்தவலியோடு போரிடும்
கலையரசிகள் வாழ்வு
சிங்களமக்களிடம் திட்டமிட்டே மறைக்கப்படுகிறது

-30/07/2012