Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தோழர் பிரேம்குமார் குணரத்னம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது!

தோழர் பிரேம்குமார் குணரத்னம், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அத்துடன், முன்னிலை சோஷலிசக் கட்சியின் மகளிர் பிரிவின் தலைவியான திமுது ஆடிகலவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் நான்கு உயர் அதிகாரிகள் தலைமையில் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எனினும், கைதுசெய்யப்பட்ட இவர்கள் பொலிஸ் தலைமையகத்தின் நான்காம் மாடிக்கோ, 5ஆம் மாடிக்கோ இதுவரை அழைத்து வரப்படவில்லையெனவும், இவர்கள் இரகசியமான இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னிலை சோஷலிசக் கட்சியின் முதலாவது மாநாடு சுகததாச விளையாட்டு அரங்கில் எதிர்வரும் ஏப்ரல் 09ஆம் திகதி காலை 10மணிக்கு நடைபெறவுள்ளது.இதுகுறித்த கட்சியின் கலந்துரையாடல் ஒன்று நேற்றிரவு கொழும்பு புறநகர் பகுதியான தலவத்துகொடவில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் பின்னர் இவர்கள் இருவரும் வெளியேறியுள்ளனர்.இந்த நிலையில் இவர்கள் இன்று காலை கிரிபத்கொடப் பிரதேசத்தில் நடைபெறவிருந்த கலந்துரையாடலில் கலந்துகொள்வதாகவும் இருந்தது. எனினும், இவர்கள் இருவரும் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து எதுவித தகவல்களையும் வழங்கவில்லை என கட்சியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னரே இவர்கள் இருவரும் கடத்தப்பட்டுள்ள தகவல் கசிந்துள்ளது. எனினும், பின்னர் இவர்கள் இருவரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினராலும், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினாலும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ளது.

கைதுசெய்ய வந்த அதிகாரிகளின் பெயர்களையும், விபரங்களையும் நாம் வெளியிடுவதற்குத் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எவ்வாறாயினும், தோழர் பிரேம்குமார் குணரத்னம் அவர்களை இரகசியமாக கடத்தி கொலை செய்வதற்கே திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

lankaviews.com