Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

டில்ருக்ஸன் மரணம் இரண்டாவது சிறைப் படுகொலை




அண்மையில் வவுனியாச் சிறையிலும் பின் மகரச் சிறையிலும் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டு ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான டில்ருக்ஸன் கடந்த ஏழாம் திகதி அன்று மரணமடைந்தார். அவரது மரணம் இரண்டாவது சிறைப் படுகொலையாகும். இப் படுகொலையை எமது எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது. இப் படுகொலைகளுக்கு மக்கள் அணி அணியாகத் திரண்டு நீதி நியாயம் கேட்பதே சரியான வழிமுறையாகும்.

 


இவ்வாறு புதிய ஜனநாயக மாக்சிசக் லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மேலும் அவ் அறிக்கையில், வவுனியாச் சிறையிலும் பின் மகரச் சிறைக்குக் கொண்டு சென்றும் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல்களை அதிகாரிகளும் அதிரடிப்படையினரும் தமிழ் அரசியல் கைதிகள் மீது மேற்கொண்டனர். அவர்களில் நிமலரூபன் என்ற இளைஞன் ஏற்கனவே கொல்லப்பட்டார். அவரது சடலத்தை இரண்டு வாரங்களுக்குப் பின்பே நீதிமன்றம் மூலம் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இப்போது அத்தாக்குதலில் படுகாயமடைந்து கோமா நிலையில் வைத்தியசாலையில் காவலில் வைக்கப்பட்டிருந்த டில்ருக்ஸன் என்ற மற்றொரு தமிழ் அரசியல் கைதியான இளைஞன் மரண மடைந்துள்ளார். இது இரண்டாவது சிறைச்சாலைப் படுகொலையாகும். 'பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்பதற்கு இணங்கவே சிறைப் படுகொலைகள் இடம்பெற்ற வருகின்றன. சிறைக் கைதிகளுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் யாவும் கால்களில் போட்டு மிதிக்கப்பட்ட நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல்களும் படுகொலைகளும் தொடரப்பட்டு வருகின்றன. இது போன்ற சிறைப்படுகொலை அபாயத்தை தொடர்ந்தம் அரசியல் கைதிகள் எதிர்நோக்கியபடியே இருந்து வருகின்றனர். எனவே சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் மக்கள் இயக்கத்தை மென்மேலும் முன்னெடுத்து விரிவுபடுத்துவதன் மூலமே சிறைத் தாக்குதல்களையும் படுகொலைகளையும் தடுத்த நிறுத்த முடியும் எனக் கட்சி வழியுறுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  டில்ருக்ஸன் படுகொலையைக் கண்டித்தும் அரசியல் கைதிகளை விடுதலை செய்க் கோரியும் ஏதிர்வரும் 15ம் திகதி யாழ்நகரில் நடைபெறவிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் அழைப்பின் பெயரிலான கவனயீர்ப்புப் போரட்டத்திற்கு எமது கட்சி பூரண ஆதரவைத் தெரிவித்து அதில் பங்குகொள்கின்றது. அத்துடன் இப்போரட்டத்தில் நீதி நியாயம் கோரும் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறது.

புதிய ஜனநாயக மாக்சிசக் லெனினிசக் கட்சி
10.08.2012