Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரான்ஸில் விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர் கொலை

விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாட்டாளர் என்று கூறப்படும் நடராஜா மதிதரன் ( பரிதி) என்பவர் பிரான்ஸின் பாரிஸ் நகரில் 8 ஆம் திகதி வியாழக்கிழமை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

2006 ஆம் ஆண்டு பிரான்ஸில் விடுதலைப்புலிகள் அமைப்பின் வேறு இரு செயற்பாட்டாளர்களான நாதன் மற்றும் கஜன் ஆகியோர் கொலைசெய்யப்பட்டு, அது குறித்த விசாரணைகள் இன்னும் பூர்த்தியாகாமல் இருக்கும் நிலையில் இந்த கொலை தற்போது அங்கு நடந்திருக்கிறது.

வியாழக்கிழமை மாலை தனது அலுவலகத்தில் இருந்து மதிதரன் வேறு சிலருடன் வெளியே வந்த போது அவரை இனந்தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆயினும் கொலையைச் செய்தவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒரு வருடத்துக்கு முன்பாகவும் மதிதரன் இதே இடத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகியது இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளியாக செயற்பட்டு வந்த இவர், 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரான்ஸ் வந்து அங்கு அரசியல் மற்றும் நிதி திரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் 2007 இல் கைது செய்யப்பட்ட அவர் 2010 ஆம் ஆண்டு சில நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.