Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மாணவர் போராட்டம் பற்றி!!! (பகுதி 2)

இலங்கையில் வர்க்கப் போராட்டத்தினை வளர்த்தெடுப்பதும் ஒரு போராட்டம் தான். வர்க்கப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு தடையாக இனவாதம், மதவாதம், சாதியவாதம், பிரதேசவாதம் சமூகத்தில் ஆழவூடுவி இருக்கின்றது. கடந்த காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி இனத்துவ சிந்தனையை முன்வைத்தே தேர்தல் அரசியல் நடத்தப்படுகின்றது. ஜனநாயக மறுப்பை திசைதிருப்புவதற்கு இனவாதத்தினை பயன்படுத்தும் இனவெறி அரசாங்கமும், இராணுவ பிரசன்னதைக் கொண்ட பிரதேசத்தில் சிறு எதிர்ப்பபையும் காட்டாது வாழு என்று அறிவுறுத்தும் தரகுவர்க்கமும் இலங்கையில் இருக்கின்றது.

இலங்கையில் வர்க்கப் போராட்டத்தினை தொடர்வதற்கான போராட்டம் பற்றிய பிரச்சனையில் தத்துவத்திற்கும் கோட்பாட்டிற்கும் உள்ள மாறுபாடுகளை புரிந்து கொள்ளல் அவசியமாகும். இங்கு விவாதிக்கும் சில தனிநபர்கள் கட்சி, முன்னணி, வெகுஜன அமைப்புப் பற்றிய சமூக விஞ்ஞான வறுமைக்குள் உள்ளாகியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இரண்டிற்கான பிரச்சனைகளை விமர்சிக்கும் போக்கிலும், செயல்வடிவத்திலும் உள்ள மாறுபட்ட நிலையில் நடைமுறையில் இருந்து விலகி வசைபாடுதல் என்ற அரைநிலபிரபுத்துவ தூய்மைவாதம் சிந்தனையில் வெளிப்பாடுகள் ஆகும். நடைமுறையில் இருந்து விலகி தூய்மைவாதம் பேசும் பேர்வழிகள் இன்று தரகுவர்க்கத்தவர்களின் அரசியல் அறிஞர்கள் ஆகின்றார்கள். தரகு குறுந்தேசியத்திற்கு அரசியல் பாத்திரம் கொடுக்கும் செயற்பாடுகளை முன்னிறுத்துகின்ற போது தாமும் தன்னார்வ நிலைக்குள் நின்று விமர்சிக்கும் யுக்தியைக் கைக்கொள்கின்றார்கள்.

இன்றைய தரகு வர்க்கங்களின் அரசியல் அன்னிய உதவியுடன் தனது சொந்த மூலதனத்தை பாதுகாக்க போராடுகின்றது. இங்கு திறந்த பொருளாதாரம் என்பது அவசியமாகின்றது. திறந்த பொருளாதாரத்தின் பிரதிநிதியாக இருக்கும் சக்திகளை பாதுகாப்பதும் உலக நிதிநிறுவனங்களின் கோரிக்கையாகின்றது. இதில் தமிழ் குறுந்தேசியம் இப்போ கைகோர்த்திருக்கும் அணிகள் முன்னையப் போலவே தனது பிடியைக் கொண்டுள்ளது.

கடந்த காலப் போராட்டங்களும் அனுபவமும்:

போராட்டங்களை ஆய்வு செய்வதற்கும் நாம் வேறு எங்கும் செல்லத்தேவையில்லை. இலங்கையில் நடைபெற்ற போராட்டங்களை ஆய்வு செய்தாலே நிறைய அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இலங்கையில் 1966களில் இருந்து பல போராட்டங்களை சந்தித்து வந்துள்ளோம். இன்றைய சந்ததியினர் பலருக்கு 1971- 2009 இடைப்பட்ட காலத்தில் நடைபெற்றுள்ளது. சுமார் 300000 மேலான மக்களை இந்த போராட்டங்கள் காவு கொண்டிருக்கின்றது. போராட்டங்கள் பின்னே உள்ள ஒற்றுமை ஒன்றிருக்கின்றது. அந்தப் போராட்டங்களின் பின்னால் மக்கள் அணிதிரட்டப்படவில்லை. முள்ளிவாய்க்காலின் பின்னரான சமூகத்தினை முழுமையாக ஆய்வு செய்யாது. முன்னரே தீர்மானித்தவற்றை மனனம் செய்வதும், பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுவார்கள், ஒப்புவிக்கின்றனர்.

1. தனிநபர் தூற்றல்

2. தனிநபர் சுயபுராணம்

3. புலிகளைத் திட்டித் தீர்ப்பது

தமிழ் பகுதிகளில் பல பகிஸ்கரிப்புப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இது குறிப்பாக 1981க்குப் பின்னர் மாணவர்களை தெருவிற்கு கொண்டு வரும் வேலையை ஏதோ ஒரு இயக்கம் பின்புலமாக இருந்திருக்கின்றது. இவ்வாறான போராட்டங்களில் பெரும்பான்மையான மாணவர்கள் முதலில் தயங்கினாலும் பின்னர் மெதுமெதுவாக பங்குபற்றினார்கள்.

இயக்கங்கள் ஆயுதக் கவர்ச்சியில் கவனம் செலுத்திய போது பாடசாலை மாணவர்களே தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்தியும் உள்ளார்கள். நடைபெற்ற போராட்டங்கள் சிலவற்றை பிரபல இயக்கங்கள் தம்மால் ஒழுங்குபடுத்தியதாக பிரச்சாரம் செய்த நிகழ்வுகளும் நடைபெற்றிருக்கின்றது. இவ்வகையான போராட்டங்களுக்குப் பின்னால் இயக்கங்களின் அனுதாபிகள் இருந்திருக்கின்றார்கள். ஆனால் எந்த முக்கிய அமைப்புக்களும் நேரிடையாக போராட்டத்தினை ஒழுங்குபடுத்தவில்லை. போராட்ட இயக்கங்கள் மிக மும்முரமாக தமது படைகளுக்கு ஆட்களை சேர்த்துக் கொண்டிருந்த போது தன்னெழுச்சியான போராட்டங்களை நடத்தும் வல்லமை அன்றைய மாணவர்களுக்கு இருந்திருக்கின்றது.

விஜிதரன் போராட்டம்:

விஜிதரன் கடத்தப்பட்ட பின்னர் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் போராட்டத்தில் குதித்திருந்தார்கள். இந்தப் போராட்டமென்து இயக்கங்களை முழுமையாக தடைசெய்ய முன்னர் இடம் பெற்ற போராட்டமாகும். இந்த போராட்டத்தின் பின்னால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாணவர் அணி இருந்திருந்தது. இவர்கள் இயக்கங்களின் கடமையை செயற்படுத்துபவர்களாக இருந்திருக்கின்றார்கள். ஏன் சுரேஸ் பிரேமச்சந்திரன் விஜிதரன் போராட்டத்தை தாமே நடத்தியதாக பிரச்சாரம் செய்ய முற்ப்பட்டதாகவும், முடியடிக்கப்பட்டதாகவும் கருத்துக்கள் இருக்கின்றது.

விஜிதரன் போராட்டத்திற்கும் தன்னெழுச்சிக்கும் சம்பந்தமில்லை. புலிகள் முழுமையாக தமிழ் பிரதேசமெங்கும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவில்லை. அப்போ ரெலோவைத் தவிர மற்றைய இயக்கங்கள் தடைசெய்யப்படாத காலம். எனினும் புலிகள் தமது பாசீசப் பிடியை அழுத்தமாக தொடர்ந்த கால கட்டத்தில் நடைபெற்ற போராட்டமாகும். விஜிதரன் போராட்டம் என்பது புலிகளின் பாசிசத்தின் வளர்ச்சிப் போக்கில் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று, ஆனால் இது தன்னெழுச்சியான போராட்டம் அல்ல.

“மாணவர்களின் மாவீரர் தின நிகழ்வானது திட்டமிட்ட ஒன்றல்ல. அது எந்த வெளிச்சக்திகளாலும் தூண்டப்பட்டது அல்ல. குறிப்பாக முன்னிலை சோசலிசக் கட்சிக்கோ அல்லது புதிய ஜனநாயக மக்கள் முன்னணிக்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை.”

மாவீரர் தினமும் மாணவரும்:

முள்ளிவாய்க்கால் கொடுத்த வடுவிற்கும் மீறி மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தன்னெழுச்சிக்குப் பின்னால் பெரிய அரசியல் பலம் கொண்ட அமைப்புக்கள் அங்கு இருக்கவில்லை, இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த மாணவர்களின் போராட்டத்தின் பின்னால் சமூகத்தின் மீது தொடுக்கப்பட்ட அழுத்தம் தூண்டுதலாக இருந்திருக்கின்றது. இன்றைய இயங்கு சக்திகளை ஆட்சியாளர்களும், அவர்களின் அடிவருடிகளும் சிதைக்கின்றார்கள். திறந்தவெளிச் சிறையில் வாழ்கின்ற நிலையில் சிறிய போராட்டங்கள் கூட வரவேற்கப்பட வேண்டும். அது தவறான அரசியல் பாதையைக் கொண்ட தலைமைத்துவத்தினால் நடாத்தப் பட்டிருந்தாலும் அது நீதியான போராட்டம் என்றால் அது ஆதரிக்கப்பட வேண்டும்.

ஒரு அடக்குமுறைச் சூழலில் இருந்து தமது உறவுகளை நினைவுகூர்ந்த காரணத்தினால் மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் நினைவுகளில் இருந்து மக்கள் வெளியே வருவது இலகுவானதல்ல. இதனைப் புரிந்து கொள்ளாது செவ்வாய்க்கிரகத்தில் இருந்து இறங்கிய மாந்தர்களாக இன்றைய ஆய்வாளர்கள் இருக்கின்றார்கள்.

யாழ் மாணவர்களுக்காக மற்றைய பிரதேச மாணவர்களும் போராட்டத்தில் குதித்தார்கள். இந்தப் போராட்டத்தினை

1. கொச்சைப்படுத்தினார்கள்

2. தணிக்கை செய்தார்கள்

3. வெளிச் சக்திகளுடன் முடிச்சுப் போட்டுக் காட்டிக் கொடுத்தார்கள்.

இது ஒன்றும் சிறுபிள்ளை வேளான்மை வீடு வந்து சேராது என்று போராட்டத்தினை கனிப்பிட்ட ஆய்வாய்வாளர்கள். இலங்கையின் நிலவரத்தை சரியாக புரிந்து கொள்ளாதார துர்ப்பாக்கிய நிலைதான் தென்பட்டது.

தன்னெழுச்சிக்கும், தன்னியல்பிற்கும் உட்பட்ட போராட்டங்களை இராணுவத்திற்கு அடிபடிந்து போ என்ற சிந்தனை மோலான்மை கொண்ட விமர்சனப் போக்கும் சில விமர்சகர்களிடம் காணமுடிந்தது.

போராட்ட திசைவழியை ஆய்வு செய்வது, அல்ல விமர்சிப்பது என்பதினை தனிநபர் மீதான காழ்ப்புணர்வை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.

முடிவாக:

ஆனால் தனிநபர்களின் நடைமுறையில் பரீட்சிக்கப்படாத கோட்பாடுகளைக் கொண்ட விமர்சனம் என்பதும், தனிமனிதர்கள் நோக்கிய நகர்வு என்பது ஒரு அமைப்பின் செயற்பாடுகளில் இருந்து பின்னடைவை ஏற்படுத்துபவையாகும். ஆனால் இன்றைய தனிமனிதர்கள் விசமத்தனமான கருத்துக்களை விதைத்துக் கொண்டு ஒரு அமைப்பை தம்பின்னால் நகர்த்த முற்படும் விசமப் போக்கிற்கு ஒரு அமைப்பு பலிக்கடாவாக முடியாது. தனிமனிதர்கள் தமது பாத்திரத்தை முக்கியத்துவமானதாகவும், தமது பாத்திரத்தை அதிகப்படுத்தும் அல்லது முதன்மைப்படுத்தும் மேதாவித்தன விமர்சனப் போக்கும் நடைமுறையில் தென்படுகின்றது.

ஒரு அமைப்பு தான் போக வேண்டிய இலக்கையும், பாதையையும் வகுக்கும் முன்னர் சமூக அமைப்பை ஆய்வுசெய்கின்றது. அந்த ஆய்வின் அடிப்படையில் இருந்து யுத்த- அரசியல் தந்திரோபாயத்தைத வகுக்கின்றது. இந்த அடிப்படையில் ஒரு அமைப்பு செயற்பட்டுச் செல்லும். தான் போகின்ற பாதையில் ஏற்படுகின்ற அனுபவங்களை படிப்பினையாக பெற்றுக் செல்கின்றது. விமர்சனங்களை உள்வாங்குகின்றது, தன்மை திருத்திக் கொள்கின்றது. இறுதியாக நடைமுறையே சரியானவற்றை தீர்மானிக்கின்றது.

முன்னைய பதிவு

மாணவர் கைதும் போராட்டங்களும்!!!