Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

நெற்களஞ்சியசாலையில் பாடசாலை! மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டம்

altபோதிய இடவசதியற்ற நிலையில் வேறு கட்டடமொன்றில் இயங்கிவரும் கிண்ணியா T.B.ஜாயா வித்யாலயத்தின் மாணவிகளும் அவர்களது பெற்றோரும் நேற்று (18) காலை ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

சுனாமியினால் பாதிக்கப்பட்ட T.B.ஜாயா வித்தியாலயம் கடந்த 19வருடங்களாக நெற்களஞ்சியசாலை கட்டடமொன்றில் அடிப்படை வசதிகளின்றி இயங்கி வருகின்றது.

இந்நிலையில், அருகில் உள்ள வைத்தியசாலையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் இதன் காரணமாக மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டினர்.

தரம் 11வரையான வகுப்புகளைக் கொண்ட T.B.ஜாயா வித்தியாலயத்தில் சுமார் 800ற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

இவர்களுக்கு இடவசதியுடைய மூன்று மாடிக் கட்டடமொன்றை அமைத்துக்கொடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்ட போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளரிடம் செய்தியாளர்கள் வினவியபோது, T.B.ஜாயா வித்தியாலயத்திற்கு என வேறு பகுதியில் பகுதியளவில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தின் பணிகளை இந்த வருடத்திற்குள் பூர்த்திசெய்வதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இணங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலுமொரு புதிய கட்டடத்தை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான நிதியை அடுத்த வருட பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்குவதற்கும் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் உறுதியளித்ததாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.