Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பல்கலைக்கழக மாணவர்களின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்!

பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டமைக்கும் அவர்கள் மீதான தாக்குதலுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று மேற்கொண்டனர். பதாகைகளையும் கோசங்களையும் எழுப்பிய வண்ணம் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நான்கு வருடகால சுகாதார பட்டப்படிப்பை மூன்று வருடமாக குறைத்தமை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்பாக செய்த ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் போது பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.அத்துடன் இவர்கள் பொலிஸாரினால் தாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று பல்கலைக்கழகத்திற்கு முன்பிருந்து பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டம் ஆனது விஜயராம சந்தியினூடாக ஹங்வெல வீதி வரையில் மேற்கொண்டிருந்தனர். இதன் போது வீதியை மறித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டதனால் விஜயராம வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.

மேலும் "சுதந்திர கல்வியையும் சுதந்திரத்தையும் வென்றெடுக்க ஒன்றிணைவோம்", "மாணவர்கள் மீதான அடக்கு முறையை நிறுத்து", "மாணவர்களின் உரிமையினை தடுக்காதே" எனும் பதாகைகளையும் கோஷங்களையும் எழுப்பிய வண்ணம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.