Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

2வது தேசிய மாநாடு வாழ்த்து உரை - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

தோழர்கள் அனைவருக்கம் புரட்சிகர வணக்கங்கள்!

இலங்கை நாடு, பிராந்தியத்தில் உள்ள மற்றைய நாடுகளோடு ஒப்பிடுகையில் பெருவாரியான போராட்டங்களை நடாத்திய மக்களின் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு தேசமாகும்.

சமூக நீதிக்கான, முதலாளித்துவத்திற்கு எதிரான, சாதி மதவாத பாகுபாடுகளுக்கு எதிரான, சமத்துவத்துக்கான, இன ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை பல்வேறு காலகட்டங்களில் நடாத்திய,  தெற்கிலும் வடகிழக்கிலும் ஆயுதப் போராட்டங்களை நடாத்திய இரத்தம் சிந்திய மக்களை வரலாற்றில் கண்ட ஒரு நாடு.

எத்தனையோ அழிவுகளும் மனித அவலங்களும் நேரிட்டபோதும் தொடர்ந்து முன்னெழுந்து வரும் போராட்டங்களை முன்னின்று நடாத்தும் அரசியல் சூழல் எழுந்த வண்ணமும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமுமே உள்ளது.

கடந்தகால போராட்ட அனுபவங்களில் பெற்றுக்கொண்ட வெற்றியாகட்டும் தோல்வியாகட்டும் அவற்றையெல்லாம் கற்றுக்கொண்டும் சீர் செய்து கொண்டும் முன்னேற வேண்டிய தேவை அனைத்துப் போராடும் புரட்சிகர சக்திகளுக்கும் முன்னால் இருக்கின்ற கடமையாகும். இன மத சாதிப் பாகுபாடுகளை புகுத்தி மக்களைப் பிளந்து வைத்துக் கொண்டு அதன் மூலம் நவதாராளவாத பொருளாதார சுரண்டல் கொள்ளையை நடாத்துகின்ற, கடந்தகால மற்றும் இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்ட சக்திகளில், இடதுசாரிய புரட்சிகர அரசியல் பாதையில் இன்று போராட்டங்களை பரந்துபட்டு முன்னெடுக்கும் கட்சியாக முன்னிலை சோசலிசக்கட்சி இருக்கின்றது. தனது கடந்த காலத்துடன் விமர்சனம் செய்து கொண்டு புதிதாக உருவாகிய ஒரு சிறிய கட்சியாக இருந்தாலும், அது சரியான பாதையில் நடைமுறைகளைப் கொண்ட போராடும் மக்களுக்கான ஒரு பெரும் சக்தியாக பரிணமிக்க கூடிய நம்பிக்கையை தருகின்றது. 

பெரும்பாலும் கட்சியின் உருவாக்கம் தொடக்கம் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினராகிய நாம்க ட்சியின் பல்வேறுபட்ட போராட்டங்களோடு எம்மை இணைத்துக் கொண்டும் பல தளங்களில் ஆதரவு சக்தியாக இணைத்துக் கொண்டவர்கள்.

கட்சி தனது இரண்டாவது காங்கிரசை நடாத்திக்கொண்டிருக்கின்ற இன்றைய நாளில் புதிய ஜனநாயக முன்னணி புரட்சிகரமான நடைமுறைப் போராட்டங்களினூடு வளர்ந்து வருகின்ற தோழமைச் சக்தியாக நின்று தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

மக்களின் போராட்ட வலிமையை ஒருங்கு சேர்த்துக்கொண்டு அனைத்துவித இன மத சாதீய பால் ஒடுக்குமுறைகளையும் தாண்டி முதலாளித்துவ முறைமையினை மாற்றியமைக்க்கின்ற அரசியல் வழியிலான ஒரு புரட்சிகர போராட்டத்தில் முன்னிலை சோசலிசக்கட்சி முன்னேறும் என்கின்ற நம்பிக்கையோடு புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தோழர்கள் சார்பில் வாழ்த்துக்கள்.

வணக்கம்