Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் சமூகத்தின் பொது வெட்கம்!


இது தமிழினத்தின் பொது வெட்டுமுகம். இலங்கை மக்கள் தொகையில், குறைந்தபட்சம் 5லட்சம் ஆண்கள் காணமல் போயுள்ளார்கள். கிழக்கிலோ 49ஆயிரம் விதவைகள். இதில் அரைவாசிப் பேர் 25வயதுக்கு உட்பட் டவர்கள். இதில் 12ஆயிரம் பேர் 3குழந்தைகளின் தாயாக இருக்கின்றனர். இது ஓர் அரச புள்ளி விபரம். போர் குற்றத்தின் முழு வெட்டுமுகத்தையும் இது எடுத்துக் காட்டுகின்றது. ஓர் இனத்தின் அழிவையும், சிதைவையும் தெளிவாகத் தோலுரித்துக் காட்டுகின்றது.

பேரினவாதம் ஒர் இனத்தின் உரிமையை மறுத்து, அவர் களை பிணக்காடாக்கியுள்ளது. புலிகள் தம் பங்குக்கு அதற்கு உதவினர். அரசின் இந்தப் போர்க் குற்றம், இன்று குரூரமான குற்றமாகக்கூட இனம் காணமுடியாத வண்ணம் போயுள்ளது. புலிப் பாசிசத்தின்பின் அரசு தன்னைத்தானே ஒளித்து வைத்துக்கொண்டே, பாரிய இனவழிப்பை நடத் தியது. இளம் தலைமுறையை திட்டமிட்டுக் கொன்று குவித்தது.

 

புலிகள் என்ற பாசிச இயக்கம் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அந்நியமாகிய, குழந்தைகள் முதல் இளம் தலை முறையினரின் சமூக அறியாமையில்தான் ஒரு மாபிய இயக்கமாக இதன் வரலாற்றில் நீடித்தது. இந்த வரலாற்றுப் பின்னனியில் திருமணம் செய்தவர்கள், இயக்கத்தில் இணைத்தல் என்பது அறவேயற்று இருந்தது.

இந்த பின்னணியில் பெண்கள் யாரால் விதவைகளாக்கப் பட்டனர் என்ற கேள்வியும், இந்த ஆண்கள் யார் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. அரச பயங்கரவாதத்துக்கு எதிராகவும், புலியின் கட்டாய பயிற்சிக்கும் அதன் ஜனநாயகமற்ற அரசியலுக்கு எதிராகவும், குடும்ப வாழ்க் கைக்குள் இறங்கி தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயன்ற அப்பாவிப் பொதுமக்கள். அவர்கள் தமிழன் என்ற ஒரே காரணத்தினால் இந்த அரசு கொன்று குவித்துள்ளதை இந்தப் புள்ளிவிபரம் எடுத்துக் காட்டுகின்றது. இதில் ஒரு சிறிய பகுதியைத்தான் புலிகள் கொன்றனர்.

இனப் படுகொலைகள் மூலம் ஒர் இனத்தின் அழிவும், விதைவைகள் மூலம் இனவிருத்தியற்ற நிலையும், இனத்தின் சிதைவுமே இன்றைய எதார்த்தமாகும்.

 

விதவையாக்கப்பட்டவர்களின் அவலம்

ஆணாதிக்க சமூகத்தில், ஆண்களற்ற பெண்களின் விதவைக் கோலம் அவர்களை உயிருடன் கொன்று வருகின்றது. உளவியல் சிதைவால் மனநோய்க்குள்ளாகின்றனர்.

ஆண்களால் மேலாதிக்கம் செய்யப்பட்ட ஆணாதிக்க சமூகத்தில், ஆணின் உழைப்பில் பெருமளவு குடும்பங்கள் தங்கியிருந்தன. ஆண்களைக் கொன்றதன் மூலம், பெண்கள் தங்கள் அடிப்படையான வாழ்வை இழந்தனர். அத்துடன் யுத்த ப+மியில், வாழ்வின் ஆதாரங்கள் எதுவுமற்ற நிலையில், அவை அழித்தொழிக்கப்பட்டது. இந்த நிலையில், பெண்கள் நடுத்தெருவிற்கு விரட்டப்பட்டனர். சிறு குழந்தைகளுடன், தாய்மையின் இயலாமையுடன் அவர்கள் உணர்வுகள் சிதைக்கப்பட்டன. பெண்மை நாசமாக்கப் பட்டன.

வாழ்வதற்குத் தேவையான பொருளை வாங்கக் காசில்லை. வாழ்வின் ஆதாரப் பொருட்கள் உலகச் சந்தை விலையில்தான் இலங்கையில் வாங்கமுடியும். இந்த நிலையில் அந்தப் பெண்களின் அவல வாழ்வை இது தன் பங்குக்கு பறித்ததுடன் அவர்களை பாதாளத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது.

பொருளாதார சுயமற்ற இவர்களின் யுத்த வடுக்களையும், உலகமயமாக்கல் மூலம் சுரண்டும் கொள்ளைக் காரர்களுக்கு மலிவாக சுரண்டும் கூலிகளாக மாறியுள்ளனர். விதவைகள் மறுவாழ்வு என்று வேடம் போட்டுக்கொண்டு, அவர்கள் உழைப்பை கொள்ளையடிக்க முண்டியடித்துக் கொண்டு முதலிடுகின்றனர்.

அரசு சாரத தன்னார்வ நிறுவனங்கள் பெயரில், ஏகாதி பத்தியம் வழங்கும் நிதியில் இயங்கும் அமைப்புக்களும், பெண்கள் அமைப்புக்களும், விதவைகளின் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஏற்ப என்னென்னவோ வேலைகள் பார்க்கி ன்றனர்.

மறுவாழ்வின் பெயரில் அந்த விதவைகளைச் சுரண்டுவது, அதற்கு உதவுவது தான் தன்னார்வப் பெண்கள் அமைப்புகளின் சுறுசுறுப்பான பணியாக உள்ளது. இதை செய்வதற்காகவே, ஏகாதிபத்தியம் அவர்களுக்குப் பணம் கொடுக்கின்றது. ஆண்களைக் கொன்று விட்டு, பெண்களை விதவையாக்கி, அவர்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச சுயத்தையும் அழித்தவர்கள், இன்று அவர்கள் உழைப்பை சுரண்டுவதையே மறுவாழ்வு என்கின்றனர். அந்த விதவைக ளின், உழைப்பை திருடுவதையே, அவர்களிள் மறுவாழ்வு என்கின்றனர்.

மற்றொரு தளத்தில் இந்தப் பெண்கள் ஆணாதிக்க அமைப்பில் விதவைகளாக்கப்பட்டனர். இந்த நிலையில், அந்த பெண்களின் பாலியல் உணர்வுகள் நிராகரிக்கப் படுகின்றது. மறுமணத்தை மறுத்து, விதவைகளாகவே வாழ்வதுதான் தமிழ்க்; கலாச்சாரம் என்று ஆணாதிக்க இந்து சமூக அமைப்பில், பெண்களின் பாலியல் உணர்வுகள் சிதைக்கப்படுகின்றது. பெண்களின் பாலியல் உணர்வுகளை, விபச்சாரம் செய்து வாழ்வது அல்லது முறைகேடான பாலியல் நடத்தைகள் மூலம் இதற்கு தீர்வு காணச் சொல்லுகின்றது ஆணாதிக்கத் தமிழ்க் கலச்சாரம். இதனுள் ஓர் அங்கமாக ஆணாதிக்க ஆண்களின், வைப்பாட்டிகளாக பெண்ணை வாழக்கோருகின்றது.

பெண் தான் சார்ந்து வாழ்ந்த ஆணைக் கொன்று, அவளிள் சுயத்தை அழித்தவர்கள், பெண் மீதான ஆணாதிக்க அத்து மீறலைச் செய்யும் சூழலை இன்று இலகுவாக்கியுள்ளனர். அதுவும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்த சமூகத்தில் பெண்களின் மீதான அத்துமீறல்கள், மோசடிகள் என்;பன சமூகத்தின் பொதுத் தெரிவாகி விடுகின்றது. இது விதவைப் பெண்கள் இன்று எதிர்கொள்ளும் மற்றறொரு பாரிய ஆணாதிக்க வன்முறையாகும்.

குழந்தைகள் வளர்ப்பு, பெண்ணாக தன் உடல் சுயத்தைப் பாதுகாத்தல், பாலியல் தேவையை பூர்த்தி செய்ய முடியாத உணர்வு சார்ந்த கலாச்சார நெருக்கடிகள், உழைப்பை சூறையாடலை எதிர் கொள்ளல், தம் குடும்ப நினைவுகள், தம் கணவனுக்கு நடந்ததுக்கு எந்தவித நீதியும் விசாரணையுமற்ற விரக்தி..., இந்த விதவைப் பெண்களின் பின்னுள்ள பாரிய அவலங்களாகும்.

சமூகம் இதற்கு தீர்வு காண முடியாத வண்ணம், வக்கற்றுக் கிடக்கின்றது. மாறாக மறுவாழ்வு, இணக்க அரசியல், எதிர் அரசியல், தன்னார்வ உதவி என்ற எல்லைக்குள் சமூகத்தை நாறடிக்கின்றனர். சமூகம் தன் அதிகாரத்தில் இதைத் தீர்வு காணும் வண்ணம் சமூக விழிப்புணர்வையும், சமூகத்தின் சுயமான சமூகத் திரட்சியையும், நீட்சியையும்; மறுத்து இன்று அரசியல் செய்துவருன்றனர். இதைத்தான் பெண்ணியத்தின் பெயராலும் செய்கின்றனர். இந்த வக்கிரத்துக்குள்தான் விதவைகள், மற்றும் சனத்தொகையில் காணாமல் போன ஆண்கள் பற்றிய புள்ளிவிபரத் தரவுகள் மிதந்து நிற்கின்றது. கூடவே மகளிரின் நூற்றாண்டும் கடந்து விடுகிறது.


இரயாகரன்

முன்னணி (இதழ் -1)