Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 11

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 11

 

டிராட்ஸ்கியை “அவர் தன் இயல்பில் ஒரு சதிகாரர்” என்றார் லெனின்

ஸ்டாலின் காலத்தில் முதலாளித்துவ மீட்சியை சதிகள் மூலமாக டிராட்ஸ்கி நடத்த முயன்றான். இந்த முயற்சியில் டிராட்ஸ்கி தன்னை எதிர்க் குழுவின் “கதாநாயகனாக” காட்டிய போது, ஸ்டாலின் அது குறித்து அவர் ஒரு கதாநாயகன் என்பதை விட ஒரு நடிகரைத்தான் பிரதிபலிக்கிறார், ஒரு நடிகரை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு கதாநாயகரோடு ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது” எனறார். இதைப் போன்றே இரண்டாம் அகில காலத்தில் பெர்ன்டைன் காவுஸ்கி ஒரு “காதநாயகராக” மார்க்ஸ்சை திரிந்தது மட்டுமின்றி “வெல்ல முடியாத அசகாய சூரராக” ஆட்டம் போட்டதை எடுத்துக் காட்டினர். டிராட்ஸ்கியோ ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஒழித்து, அதனிடத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அல்லாத முதலாளித்துவ ஜனநாயகத்தை மாற்றீடாக்கிய, ஒரு முதலாளித்துவ சர்வாதிகாரத்தையே நிறுவ விரும்பினர். இதற்காக சோவியத்யூனியனின் பாட்டாளி வர்க்கத்தை எதிர்த்து செயல்பட்ட அனைத்து எதிர்ப்பு குழுக்களுடன், ஒருங்கிணைந்த ஒரு கூட்டுச் சதிகளை உருவாக்கினான். இதை சிலர் அப்பாவிகள் மாதிரி மறுத்தபடி, ஸ்டாலினைத் தூற்றுகின்றனர். டிராட்ஸ்கிகளின் 1936-1937 வழக்கு தொடர்பாக கொப்பச்சேவ் 1988 இல் கூறும் போது, இவ் வழக்குக்கு முந்திய விசாரனை சோசலிச சட்ட வரம்புகளை முற்றிலும் மீறிய முறையில் உண்மைகளைத் திரித்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் துன்புறுத்தி சட்டபூர்வமற்ற முறையில் குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்தும் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது என்பது நிறுவப்பட்டுள்ளது” என்றான். இப்படிச் சொன்ன கோர்ப்பச்சேவ் யாருடன் நின்று, எதைச் செய்தான் என்பது உலகறிந்தது.

 

மறுபக்கத்தில் நடந்த உண்மை என்ன? அன்று நடந்த பகிரங்க விசாரனையின் போது பலர் பகிரங்கமாகவே தாம் ஒரு மாற்று அரசு அமைக்க முயன்றதை ஒப்புக் கொண்டதுடன், அவர்கள் தத்தம் நிலையை “மார்க்சியம்” என்றனர். ஆனால் இது வலிந்து உருவாக்கப்பட்ட பொய் என்று, ஸ்டாலினை தூற்றுவோர் மிக திட்டமிட்ட வகையில் அவதூறை பரப்பி வருகின்றனர். ஆனால் இந்த சதிகளில் நேரடியாக ஈடுபட்டவர்கள், 2000ம் ஆண்டு உயிருடன் சிலர் வாழ்ந்தார்கள். அவர்கள் இந்த சதி பற்றி கருத்து வெளியிட்டுள்ளனர். தாம் ஸ்டாலினின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ஆட்சியை கவிழ்க்க முயன்றதை ஒப்புக் கொண்டதுடன், அதை “மார்க்சியமாகவும்” வர்க்கப் போராட்டமாகவும் கூறியதுடன், பெருமைப்படவே அறிவித்தனர். இது அன்றைய விசாரனைகள் சரியானவை உண்மையானவை என்பதை, தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இன்று டிராட்ஸ்கிய பத்திரிகைகள் கூட, தாம் அன்று ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க முயன்றதை பெருமையுடன் வேறு பீற்றுகின்றனர். பின் எப்படி விசாரனை தவறாகும்? அன்று இரகசிய, மற்றும் கட்சியின் அனைத்து ஜனநாயக வழியையும் பயன்படுத்தி ஸ்டாலினை அழிக்க, தாம் ஒரு கூட்டுத்திட்டத்தை உருவாக்கியதை ஒப்புக் கொள்ளுகின்றனர். இப்படி உண்மை இருக்க,  ஸ்டாலின் தூற்றப்படுகின்றார். ஏனெனின் இதை ஸ்டாலின் முறியடித்தார் என்பதால் தான். முதலாளித்துவ ஜனநாயகத்தின் கபடங்களின் மேல் குந்தியிருந்தபடி தூற்றுவது தொடர்கின்றது.

இவர்களின் “மார்க்சிய” அரசியல் என்ன? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், அதன் வர்க்க அடிப்படையையும்  மறுக்கின்றனர். பாட்டாளி வர்க்க ஆட்சி என்பதையே வெறுக்கின்றனர். புரட்சிக்கு பிந்திய சமூகத்தில் வர்க்கப் போராட்டம் தொடர்வதை மறுக்கின்றனர். கட்சியினுள் இருந்து தான், எதிர்புரட்சி உருவாகும் என்பதை மறுக்கின்றனர். ஒரு கட்சியின் இயங்கியல் தன்மையை, அதன் வர்க்க அடிப்படையை மறுத்து நிற்கின்றனர். பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை பெறும் போது, மற்றொரு வர்க்கத்துக்கு எதிராக கையாளும் ஒடுக்குமுறையை மறுத்து நிற்கின்றனர். முதலாளித்துவ ஜனநாயகத்தின் செல்ல வளர்ப்பு நாய்களாக மாறி, மார்க்சியத்தின் அடிப்படை உள்ளடகத்தையே திரித்துக் காட்டித்தான் ஸ்டாலினை தூற்றுகின்றனர்.

உண்மையில் எதிர்ப்புரட்சியில் இறங்கிய டிராட்ஸ்கியும் மற்றவர்களும், எதன் மீதும் ஒரு சரியான வர்க்கக் கோட்பாட்டை முன்வைக்கவில்லை. மாறாக முதலாளித்துவ மீட்சியையே, ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க நடைமுறைக்கு மாற்றாக முன்வைத்தனர். லெனின் கட்சியின் தலைமைகளில் உருவாகும் சதிகார கும்பல்கள் பற்றி சொந்த அனுபவத்தில் இருந்து கூறும் போது அவர் தன் இயல்பில் ஒரு சதிகாரர், அதே வேளையில் கோட்பாட்டாளன் என்ற முறையில் ஒரு அனாமதேயம்” என்றார். இது டிராட்ஸ்கிக்கு மிக சிறப்பாக பொருந்துகின்றது. டிராட்ஸ்கியம் கோட்பாட்டு ரீதியில் வெறும் அனாமதேயம். டிராட்ஸ்கிய அவதூறுகள் மீது எழுப்பும் எந்த தத்துவ விவாதத்துக்கும், கேள்விக்கும் பதிலளிக்க வக்கற்றவர்களாக டிராட்ஸ்கிகள் உள்ளனர். இதை நாம் அவர்களுக்கு எதிரான விவாதங்களின் போது பதிலளிக்க வக்கற்ற தன்மையை, கூர்மையாக அவதானிக்கும் யாரலும் இனம் காணமுடியும். மாறாக அவதூற்றை அரசியலாக கொண்ட ஒரு சதிகார கோட்பாட்டை தத்துவ ஆதாரமாக கொண்டவர்கள். லெனின் சுட்டிக் காட்டுவது போல் சந்தர்ப்பவாதம், கோஷ்டி பூசல்களை உருவாக்கி, மிகவும் வெட்கமற்ற முறையில் பெரும்பாலான தொழிலாளர்களின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்கும்” ஒரு சதிகார கும்பலாக உருவானவர்கள். இந்த கும்பல் ஒரு சமுதாயத்தில் ஒரு வர்க்கத்தை பிரதிபலித்தது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நீடித்த சோவியத்தில், இந்த கும்பல் எதிர்புரட்சி வர்க்கத்தின் பிரதிநிதியாக இருந்தது. டிராட்ஸ்கிய சதிகார கும்பல் சோவியத் பற்றிய தன் மதிப்பீட்டில், தலைமையை மட்டுமே எதிர்த்தனர். இது தான் அவர்களின் “மார்க்சிய”த்தின் எல்லை. சமுதாயம் சோசலிச சமுதாய அமைப்பில் இருந்தாக கூறி, அதை எதிர்க்கவில்லை. உண்மையில் இது ஒரு சோசலிச அமைப்பில் டிராட்ஸ்கிய தலைமையிலான ஒரு சந்தர்ப்பவாதமே. லெனின் கூறுவது போல் சந்தர்ப்பவாதம் என்பது ஒரு விபத்தோ, தனிப்பட்ட நபர்கள் செய்கிற பாவமோ, தவறோ, துரோகமோ அல்ல, மாறாக அது ஒரு முழு வரலாற்று சகாப்ததின் சமூக உற்பத்தி” இது டிராட்ஸ்கி, டிட்டோ, குருச்சேவ், தெங்சியோபிங் என்று ஒரு நீண்ட எதிர்புரட்சி குழுவுக்கு பொருந்துகின்றது. யூகோஸ்லாவிய சோவியத் என இந்த நாடுகளில் முதலாளித்துவ மீட்சி நடந்த போது, அதை டிராட்ஸ்கியம் மறுத்தது அதை தொழிலாள வர்க்க ஆட்சி தான் என்றது. இதையே நாம் ஆதாரமாக பார்த்தோம். சோசலிச அமைப்பு அங்கு தொடர்வதாக பறைசாற்றியது. தலைமையை மாற்றினால் எல்லாம் சரி என்று சந்தர்ப்பவாத சதிகார கும்பலாக, ஆட்சி கவிழ்ப்பை பற்றி பேசியது. இங்கு கோட்பாட்டு ரீதியில் வக்கற்ற அநாமதேயமாக திகழ்ந்தனர்.

இந்த மாதிரி உருவாகும், புதிதாக உருவாகும் எல்லாத் திரிபுவாதிகளையும் பற்றி லெனின் யதார்த்தத்தில் அவர்கள் முதலாளி வாக்கத்தின் ஒரு அரசியல் பிரிவு… தொழிலாளி வர்க்க இயக்கத்தில் அதன் செல்வாக்கை பரப்புகின்றவர்களும், அதன் ஏஜெண்டுகளும் ஆவர்” என்று கட்சியின் மேல் மட்டங்களில் செயல்படும் எதிர்புரட்சி குழுக்களை அம்பலம் செய்கின்றார். டிராட்ஸ்கியம் மார்க்சியத்தை மறுத்து வந்தது என்பது திடீரென நிகழவில்லை. மாறாக டிராட்ஸ்கி உயிருடன் வாழ்ந்த வரலாறு முழுக்க, அங்குமிங்குமாக தனது குறுகிய நோக்கத்துக்காக தாவியதும், மார்க்சியத்தின் எழுச்சிகளின் போது சரியான நிலைக்குள் புகுந்து கொள்வதும், முரண்பாடுகளில் மூன்றாவது அணியை கண்டறிவதும் அதில் ஒட்டிக் கொள்வதும், பலமான இயக்கத்தின் பின்னால் ஒட்டிக் கொள்வதும், எங்கும் எப்போதும் இரகசிய குழுக்களை உருவாக்குவதும், சதிப்பாணியில் ஜனநாயக மத்தியத்துவதுக்கு மாறாக செயல்படுவது என்று, எல்லா சந்தர்ப்பவாத வழிகளிலும் செயல்பட்ட ஒரு சதிகாரன்.  கோட்பாடு அற்ற ஒரு சந்தர்ப்பவாத அநாமதேயமாகவே எப்போதும் அவன் வாழ்ந்து வந்தவன்.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10