Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

சனல் 4-அரச கைக்கூலியாம்! பிரபாகர "இருப்பாளர்"களின் உளவுக் கண்டுபிடிப்பு!

லண்டனைச் சேர்ந்த சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்திடம் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த பரபரப்பான வீடியோவும் கிடைத்துள்ளதாக டெய்லி மெயில் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மிகக் கொடூரமான முறையில் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.


பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மிக மிக நெருக்கமான முறையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும், அது தொடர்பான வீடியோ காட்சியை புதன்கிழமையன்று (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை)ஒளிபரப்பப் போவதாக சனல் 4 நிறுவனம் அறிவித்துள்ளது.
 

 

இதனால் பிரபாகர போதகர்கள், சீடர்களால்; சனல்-4-ம் மகிந்தாவின் கைக்கூலியாக தமிழ் மக்களின் எதிரியாக-துரோகியாக ஆக்கப்பட்டுள்ளது.

இதற்கு வலிந்து சிரமப்பட்டு பல காரணங்களைச் சொல்கின்றார்கள். "ஈழப் போர் முடிந்த ஓரிரு நாட்களில் இதுதான் பிரபாகரன் பிணம் என்று கூறி ஒரு வீடியோக் காட்சியையும் புகைப்படங்களையும் இலங்கை இராணுவம் வெளியிட்டது. நந்திக் கடல் பகுதியிலிருந்து பிரபாகரன் உடல் மீட்கப்பட்டதாகவும் அது கூறியது. அந்தப் படத்தில் பிரபாகரன் என்று கூறப்பட்டவரின் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்தது. மேலும் அந்தப் படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன".

"முதலில் சீருடை அணிந்த நிலையில் பிரபாகரன் உடல் என்று காட்டினர். பின்னர் உடைகள் இல்லாமல் ஒரு உடலைக் காட்டினர். பிறகு சேறு படிந்த நிலையில் ஒரு உடலைக் காட்டினர். மேலும் பிரபாகரன் மரணச் சான்றிதழையும் இதுவரை இலங்கை அரசு இந்தியாவுக்கு கொடுக்கவில்லை. இதனால் பிரபாகரன் உண்மையில் உயிரிழந்து விட்டாரா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எங்குமே இல்லை. இந்த நிலையில் சனல் 4  வீடியோக் காட்சிகள் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா.! " எனக் கேட்கின்றனர்.

 "தமிழரின் திரண்ட பலத்தை சிதைப்பதற்கு மகிந்தவின் கைக்கூலிகள் சதி!! சனல்4 இன் புதிய போர்குற்ற ஆவணப்படத்தின் மூலம் அரங்கேற்ற முயற்சி!! உலகத் தமிழர்களே எச்சரிக்கை!!!.....என விளிக்கின்றனர்.

" புலம்பெயர் தேசங்களில் பல்வேறுபட்ட போராட்டங்களை நடாத்தி சிங்கள ஆட்சிக்கு பெரும் சவாலாக விளங்கும் எம்மவர்களை மீண்டும் மூலையில் முடக்க போட்ட திட்டம் தொடர்பாக எமக்கு தகவல்கள் கிடைத்திருந்தன".


"இதற்குள்தான் அந்த சதி முயற்சியின் கரு உறங்கிக் கிடப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்களது நீதி தேடிய நெடிய பயணத்தில் எதிர்பாராது வந்திணைந்த பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கிவரும் சனல் 4 தொலைக்காட்சியும்" …….இப்படிக் கொதிக்கின்றார்கள்!


மேற் சொல்கின்ற எக்கச்சக்கமான "துப்பு"த் துலக்கல்களுக்கூடாக சனல்-4-ன் மீது கண்டுபிடித்துள்ள (உளவு) கண்டு பிடிப்புகளுக்கூடாக நிறுவ முற்படும் விடயத்தின் பிரதான மூலம் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்பதேயாகும்.


பிரபாகரனின் 12-வயதுப் பாலகன் சாகடிக்கப்பட்டதைப் பற்றிய சனல்-4_ன் தகவல்கள் யாவும் நூறு வீதம் சரி. வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை கொன்றது சரி, பல்லாயிரக்கணக்கில் மக்கள் பலியாகியதின் கணிப்பு சரி பிரபாகரனின் விடயத்தில்தான் மகிந்தச் சதியெனும் சறுக்கல் வருகின்றதோ?


இன்றைய தேசிய-சர்வதேசியத்தின் நியாயமான கருத்தியல் சார்பின் ஏகப் பெரும்பாண்மையான கணிப்பு இந்நூற்றண்டின் மிகப்பெரும் மனிதப்படுகொலைகளுக்கு   "இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச அவரது தம்பி கோத்தபாய ராஜபக்ச அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோர் தான் நேரடிப் பொறுப்பாவார்கள். சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன" என்பதேயாகும்! இந்நிலைக்கு இப்பேர்ப்பட்ட ஊடகங்களின் ஊடகவியவாளர்களின் பெரும் பங்கும் ஓர் காரணியாகும். இந்நிலையில் மகிந்த கைக்கூலிகள் யார்? நீங்களா? இவ் ஊடகங்களா?

அகிலன் 13/03/2012