Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இதோ எசமானர்களே மனிதம் புதைக்கப்பட்ட புத்தகம் !

மகிந்தவின் கையில் இருப்பது
அவலத்தின் அடையாளமா?
கொன்று புதைக்கப்பட்டவர்கள்
அலறியது
வெடியோசை இடியில் அமுக்கப்பட்டுள்ளதா?

 

இதோ எசமானர்களே
ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தேசங்களில்
படைநகர்வுகளுக்குள்
நசுங்கிப்போனது மனித உயிர்களல்ல
உங்கள் மொழியில் பயங்கரவாதமே
ஈழவரலாறும் அழித்து முடிக்கப்பட்டிருக்கிறது
ஏற்றுக்கொள்ளுங்கள்
வேவுபார்த்த தொழில்நுட்பமும்
கொட்டிச்சிதறிய
கொத்துக் குண்டுகட்கும் உரிமையாளர்களே
மக்கள் எவரும் பலியிடப்படவில்லை
மீட்கப்பட்டிருக்கிறார்கள்
புத்தபெருமானின் உருவச்சிலை
யுத்தத்தால் மனம்நொந்தவர்களை ஆற்றுவதற்காய்
எல்லாத்தெருக்களிலும் நிறுவப்படுகிறது
அநியாயமாக
எந்தத் தமிழுயிரும் இழக்கப்படவில்லை
நல்லிணக்க ஆய்வறிக்கை தயார்செய்யப்பட்டுள்ளது

மனிதஉரிமை சட்டங்ளை இயற்றுபவர்களும்
மீறுபவர்களுமான எசமானர்களே
இதோ
புதிய உத்திகளை கற்றுக்கொள்ளுங்கள்
மகிந்த சகோதரர்களுடன் கைகோர்த்துக்கொள்ளுங்கள்.
-கங்கா

18/12/2011