Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சாதி வெறி பிடித்த சாதிக் கிறுக்கர்களே, தமிழ் தலைவர்கள்

ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த எந்த வெள்ளாளனாவது, மயானத்தின் அருகில் குடியிருக்கின்றானா எனின் இல்லை. மயானத்தை குடியிருப்புக்கு மத்தியில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுபவன் யார் என்றால், ஒடுக்கும் வெள்ளாளச் சிந்தனைமுறையை வாழ்க்கை முறையாகக் கொண்டவர்களே.

பகுத்தறிவுபூர்வமாக அணுகினால், எவராவது மயானத்துக்கு அருகில் குடியிருக்க விரும்புவார்களா எனின் இல்லை. அப்படியிருக்க சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மயானத்துக்கு அருகிலேயே குடியிருக்க விரும்புவதாக கூறுபவர்கள், சாதி வெறிபிடித்த கிறுக்கர்களாக மட்டும்தான் இருக்க முடியும். அப்படி அவர்கள் குடியிருக்க விரும்புவதாக கூறி, தங்கள் சாதி அதிகாரம் மூலம் அதை தடை செய்வது என்பது, சாதி வெறிபிடித்த வெள்ளாளியச் சாதியச் சிந்தனையால் மட்டுமே முடியும்.

 

மயானத்தின் அருகில் ஒரு மனிதன் குடியிருக்கின்றான் என்றால், அவன் கிறுக்கனாக இருக்க வேண்டும் அல்லது கிராமத்தில் குடியிருக்க முடியாத வன்முறையால் நிர்ப்பந்திக்கப்பட்டவனாக இருக்கவேண்டும்;. இதுதான் உண்மையாக இருக்க முடியும். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மயானத்தின் அருகில் குடியிருப்பதற்கு காரணம், சாதி ஒடுக்குமுறையாகத் தானே இருக்க முடியும்? அவன் மட்டும் மயானத்தில இருக்க வேறு காரணம் கண்டுபிடிக்க முடியாது. இதுதான் எதார்த்தம். யாழ் சமூகமானது சாதிரீதியான குடியிருப்புகள் மூலம், ஒடுக்குமுறைகளைக் கையாள்வதை யாரும் மறுக்க முடியாது.

ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் குடியிருக்க நிலமின்றி மயானங்களை நாடுவதற்கு, சாதி காரணமாக இருக்கின்றது. காரணத்தை விட்டுவிட்டு "மயானங்கள் குடிமனைகளுக்கு மத்தியில் வரவில்லை. மயானங்களை சூழ தான் குடிமனைகள் வந்துள்ளன என்று" மாகாணசபையின் கண்டுபிடிப்பு என்பது, தமிழனின் பெயரால் சாதிக் கொழுப்பு கொப்பளிப்பதையே காட்டுகின்றது.

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த 50 சதவீதமான மக்கள் புலம்பெயர்ந்த பின்பு, அவர்களிடம் இருந்த நிலங்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு விற்கக் கூடாது என்கின்ற, சாதி தடை தீர்மானங்களுக்கு பஞ்சமில்லை. யாழ் குடாநாடு தரிசாகும் அளவுக்கு, நிலங்கள் கைவிடப்பட்டு இருக்கின்றது. யாழ் குடாநாட்டில் அதிக எண்ணிக்கையில் இன்று வாழ்கின்ற ஒடுக்கப்பட்ட சாதிகள், தெடர்ந்து  நிலமின்றி வாழ்கின்றனர். அவர்கள் கைவிட்ட நிலத்தை பயன்படுத்த தடையாக இருப்பது, சாதி வக்கிரமே.

காணி ஒடுக்கப்பட்ட சாதிகள் வாங்க முடியாத அளவுக்கு, சாதித் தமிழன், சாதி பார்த்து நிலத்தை விற்கின்றான். என்ன வக்கிரம்! தமிழன் திருமணத்தில் மட்டும் சாதி பார்க்கின்றான் என்பதல்ல, நிலத்தை விற்கும் போது கூட யார் எவர் என்று சாதி பார்க்கின்றான். முதலாளித்துவ வியாபரம் கூட,  சாதியைக் கடந்து விடவில்லை.

இப்படி சாதிய ஒடுக்குமுறைகளால் உருவானதே மயானங்களும், அதன் அருகிலுள்ள குடியிருப்புகளும். ஒடுக்கப்பட்ட சாதிகள் ஊருக்குள் குடியிருக்க மறுத்ததன் விளைவாகும். குடியிருப்புக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக் கோரி, பாதிக்கப்பட்ட மக்கள்  ஆளும் வர்க்கத்திடம் கோருகின்றனர். சாதி வெறி பிடித்த பன்றிகள் எல்லாம், நாய்கள் போல் ஏன் குலைக்க வேண்டும்;? இதன் பின் இருப்பது தமிழன் என்ற பெயரில் இருக்கும் சாதித் திமிரும், ஒடுக்கும் வன்முறைக் குணமும் தான்.

ஒடுக்கப்பட்ட மக்கள் மேலான சாதி ஒடுக்குமுறையானது, சாதிக் குடியிருப்புகள் மற்றும் சாதி மயானங்கள் மூலம் தொடருவதை ஊர் ஊராக, கோயில் கோயிலாக இன்று காண முடியும். இதை யாரும் மறுக்க முடியாது. இந்தச் சாதியத்தை முன்னின்று முன்னெடுக்கும் சாதி வெறியர்களுக்கு தலைமை தாங்கும் சாதித் தலைவர்களே, கிறுக்குத்தனமாக தமிழரின் "தாகமான" மாகாணசபை மூலம் பதில் சொல்லுகின்றனர்.

மயானங்களைச் சுற்றிக் குடியிருக்க 200 மீற்றருக்கு தடை என்கின்றனர். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்த வடமாகாண சபை எதையும் செய்யாது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான  ஒடுக்கும் சாதிக்கு வக்காளத்து வாங்குகின்றது. தமிழர் என்ற அடையாளங்களுடன் உள்ள இந்தத் தலைவர்கள் எல்லாம், ஒடுக்கும் சாதித் தலைவர்கள் தான். அண்மையில் மலையக மக்கள் பற்றி, இந்தச் சாதி வெறித் தலைவர்கள் கக்கியதும் இதைத் தான்.

இனவாதத் தேசியத்தை முன்வைத்து தமிழனாகத் திரண்டதன் மூலம், சாதி ரீதியான கிராமங்களையும், சாதிக் குடியிருப்புகளையும் அப்படியே பாதுகாத்து வைத்திருக்க முடிந்திருக்கின்றது என்பது தான் உண்மை. தமிழன் என்பது, தமிழன் ஆட்சி என்று கோருவது எல்லாம், சாதித் தமிழனின் அதிகாரத்தைத்தான்.

இவர்கள் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தலைவர்கள் அல்ல, யாழ் வெள்ளாளிய சாதிய வாழ்க்கை முறைமைக்கு தலைமை தாங்கும், சாதித்தலைவர்களே. இந்தச் சாதித் தலைவர்கள் சாதிய ஒடுக்குமுறை மூலம் தமிழர்களை பிரிக்கும் பிரிவினைவாதமே, தமிழ்மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுவதற்கு துணையாக இருக்கின்றது என்னால் மிகையாகாது.