Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வரலாற்றுச் சிறப்புமிக்க பாராளுமன்றத் தேர்தல்

செய்தியும் செய்திக் கண்ணேட்டமும்  -  12.04.2010

கடந்த ஓரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற தேர்தல் திருவிழா ஏப்ரல் 8-ன் பூங்காவனத்துடன் நிறைவெய்தியது,  2010-ன் தேர்தல் சகலதிலும் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ளது.  30க்கு மேற்பட்ட கட்சிகள்  800க்கு மேற்பட்ட சுயேட்சைக் குழுக்கள்  7600க்கு மேற்பட்ட  வேட்பாளர்கள்,  4அடி நீளமான வாக்குச்சீட்டில்  400-500க்கு மேற்பட்ட  தேர்தல் சின்னங்கள்  இப்படி வரலாற்றுப்  புகழ்மிக்க இன்னும் பல எக்கச்சக்கங்கள்.

தேர்தலுக்குப் பின் வரலாற்றில் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்ற, மிகக்குறைந்த் கட்சிகளின்,  (அரசைத் தவிர) மிகக் குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன், புதுப் பாராளுமன்றத்தின் புதுமனைப் புகுவிழா நடைபெறவுள்ளது.

கடந்த ஜனாதிபதித்  தேர்தலில்  74 வீதமான மக்கள் வாக்களித்தனர்.  இத் தேர்தலில்  50-52வீதத்திற்கு குறைவான மக்களே வாக்களித்துள்ளனர்.  யூ.என்.பி.யும் ஜே.வி.பி.யும் படுதோல்விகளையும் காங்கிரஸின் பொன்னம்பலம் கட்சியும் பிள்ளையானின் கட்சியும் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கக்கூடிய வகையில் மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளனர்.

புலம்பெயர் “அரசியலாளர்களின்” கோரிக்கைகளும் நிராகரிப்பு

புலம் பெயர்வின் அரசுசார்பு – தன்னார்வக் குழுக்களின், பிச்சைஎடுப்பு அரசியலுக்கு,  சாதிச்சங்கங்கள்,  தலித் கம்பனிகளின், குறுந்சாதிய அரசியலாளர்களுக்கு, நாடு கடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானக்காரர்களுக்கு, அதற்கு வாக்குப்பிச்சை  கேட்போர்களுக்கு, அத்துடன் நாடு கடந்த் தமிழ்ஈழக்காரர்களுக்கும்,  தமிழ்மக்கள் இத் தேர்தலுக் கூடாக  தகுந்த சாட்டையடி கொடுத்துள்ளாhகள். அதிவிசேடமாக தமிழ் மக்கள் மகிந்தப் பேரினவாதத்தையும்,  குறுந்தேசியவாத  தமிழ் ஈழத்தையும் நிராகரித்துள்ளனர். தமிழ் மக்கள் வழங்கியுள்ள இத்தீர்ப்பை  “புலன்பெயர்”  இந்த “அரசியல் சிந்தனையாளர்கள்” கணக்கில் எடுத்துப்  புதுப் பாடம் படிக்க வேண்டும்.  படிப்பார்களா?

டக்ளஸ் தேவானந்தா தன் வெற்றியை மகிந்த சிந்தனைக்கு கிடைத்த வெற்றியாக,  ஈ.பி.டி.பிக்கு கிடைத்த வெற்றியாக கருதினால்,  அது அரசியல் பாமரத்தனத்தின் உச்சகட்டமாகவே இருக்கும்.  தங்கள் இவ்வெற்றியை மகிந்த மன்னனும் (உள்ளுர) முழுமனம் கொண்டு ஏற்கமாட்டார். ஆனால் இவ்வெற்றியை மகிந்தாவிற்கும் தமிழ்மக்களுக்கும் இடையில், எதிர்காலத்தில் எப்படி தக்கவைக்கப் போகின்றீர்கள்? என்பதே தங்களின் அடுத்தகட்ட  பிரதான  பிரச்சினையாகும்.

அரசின்  வெற்றி என்பது எதிர்பார்க்கப்பட்டதொன்றே.  அரசு  எதிர்பார்த்த மூன்றில் இரண்டு என்ற ஒன்று இல்லைத்தான். அதைப் பெறுவதென்பது அரசிற்கு ஓர் சிறிய விடயமே. கடந்த ஐந்தாண்டுகளில் 35க்கு மேற்பட்ட யூ.என்.பி. எம்.பி.க்களை தம்பக்கம் இழுத்த மகிந்த சிந்தனை இதிலும் சிந்திக்கத் தவறாதே.

ஜனாதிபதி ஓர் கட்சியாகவும், பாராளுமன்றம் இன்னொரு கட்சியாகவும்  இலங்கையில் நீடித்து நிலைக்காது என்ற அரசியல் சூட்சுமத்தை மக்கள் அறியாதவர்கள் அல்ல. ஜனாதிபதி தேர்தலில் மன்னன் தளபதி என்ற நிலையில், மன்னனைத்  தேர்ந்தெடுத்த மரபு  நிலையையும், “எங்கள் கள்ளன் எங்களுக்கு நல்லவன்தான்” என்ற நிலையிலும், அரசிற்கு வாக்களித்த மக்கள், அதை சொல்லாமல் செய்துள்ளார்கள்.

>

மகிந்த மன்னனின் வருங்காலஅரசியல் எப்படி இருக்குமென்பது உலகறிந்த ஒன்றே. அடுத்து இத் தேர்தலில் 48வீதமான மக்கள் நிலைபற்றியும் சிந்திக்கவேண்டும். நாங்கள் வாக்களித்தாலும் சரி, விட்டாலும் சரி, வருவது இவ்வரசே என்ற கணிப்பும், தொடரான இவ்வாட்சியில் ஜனநாயக விழுமியங்கள் அற்ற மக்கள் விரோத அரசியல், மனித உரிமை மீறல், நடவடிக்கைகளால் சலிப்பும் வெறுப்பும் கொண்ட நிலையும் எல்லாவற்றிற்கும் மேலாக  தேர்தல்களில் எவர் வென்றாலும் இறுதியில் தோற்பது நாங்களே என்ற மன உணர்வு மகக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இத்தேர்தலை நிராகரித்து மக்களுக்கு சொல்லவேண்டியதை, சொல்லாமல் தேர்தல் திருவிழாவிற்கு சென்ற  “புதிய ஜனநாயகப் புரட்சியாளர்களுக்கும்” ஏனையவர்களுக்கும், 48வீதமான மக்கள் தானெழுந்தவாரியாக பலவற்றை சொல்லிக்கொடுப்பது, ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வே.

தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் :   த.தே.கூ

தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் தமிழர் பிரச்சினைகளுக்காகவும் அரசியல் தீர்வுத் திட்டமொன்றின் அவசியம் குறித்தும் குரல்கொடுக்கப் போவதாகவும் விரிவாக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கத் திட்டமொன்றின் அவசியம் விஞ்சி நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் எனவும் அரசியல் தீர்வுத் திட்டம் மற்றும் மீள் குடியேற்றம் ஆகியப் பிரச்சினைகளே பிரதான பிரச்சினைகளாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட முறையில் இந்தப் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமெனவும்,  அதிகளவான மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை எனவும்,  இதனால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மூன்று ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புலிகளின் அழிவின் பின்னான வெற்றிடத்தில் தமிழ் மக்கள் தங்களுக்கு ஓர் அரசியல் அங்கீகாரததைத் தந்துள்ளார்கள்.  ஏகாதிபத்தியங்களின் தொங்கு சதைகள் ஆகாது,  தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிப்பதே, உங்களின் தார்மிகக் கடமை.  இதை எதிர்காலத்தில் மக்கள் நலன்கொண்டு பிரதிபலிப்பீர்களா?  இதுவே தமிழ் மக்கள் முன்னாலுள்ள  பிரதான கேள்வி?

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தேர்தலில் தோல்வியுற்றாலும்  தனது நோக்கத்தில் வெற்றி பெற்றிருப்பதாக யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.வரதராஜன் தெரிவித்துள்ளார்.


இத் தேர்தலில் போட்டியிட்ட எனக்கு தாங்கள் வழங்கிய பெரும் ஆதரவிற்கு மிகவும் நன்றி. இத் தேர்தலில் நாம்  தோல்வியடைந்த போதிலும் போட்டியிட்டதற்கான  நோக்கத்தில் நாம் வெற்றியடைந் துள்ளோம். கூட்டமைப்பு தூக்கியெறிய  நினைத்த தமிழ்த் தேசியம்,  தாயகம்,  சுயநிர்ணய உரிமை போன்றவற்றை மீண்டும் அவர்கள் தூக்கிப் பிடிப்பதற்கு நாம் துணை நின்றிருக்கின்றோம் என்பதில் நாம் பெருமை அடைகின்றோம்.

இத் தேர்தலில் நாம் எந்தவொரு ஆசனத்தையும் பெறா விட்டாலும் கூட்டமைப்பு தவறான பாதையில் செல்லும் போது நிலத்திலும் புலத்திலும் உள்ள எம் மக்களின் துணையோடு அவர்களை சரியான பாதையில் நடக்கச் செய்வதில் நாம் உறுதியாகஇருக்கின்றோம்.

வில்லின் நாண் பின்னோக்கிச் செல்வது அம்பை முன்னோக்கிச் செலுத்துவதற்கே. எனவே இத் தேர்தல் எமக்குப் பின்னடைவல்ல.  நாம் முன்னோக்கிப் பாய்வதற்கான ஒரு  பயிற்சிக்  களமே  இத் தேர்தலாகும். நாம் வெற்றியைத் தலைக்குள் ஏற்றமாட்டோம். தோல்வியை மனதிற்குள் புகவிடமாட்டோம்.

நான் இத் தேர்தலில் போட்டியிடும் போது உங்களைப் போன்றவர்களின் இவ்வாறான பெரும் ஆதரவு எனக்குக் கிடைக்கும் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் வேலைகளில்  நான் சற்று சோர்வடை யும் போது உங்களது ஆதரவான – ஆறுதலான  வார்த்தைகள் – எழுத்துக்கள் பெரிதும் உற்சாகத்தைத் தந்தன. உங்களுக்கு ஒருவெற்றிச் செய்தியை வழங்கமுடியாமல் போய்விட்டதே என்பது மட்டும்தான் எனதுகவலை.

எதிர் காலத்தில் நிலத்தில் வாழும் எம் மக்களின் அரசியல் மற்றும்பொருளாதார உரிமைகளுக்கான திட்டங்களை மேற்கொள்வதில் தங்களின்ஆலோசனைகளையும் உதவிகளையும் நாடி நிற்கின்றேன். எழுவோம் தேசியத்திற்காக அயராது உழைப்போம்.

உங்களுக்கு புலம்பெயர் “புலனற்றதுகளின்” புத்தியால் வந்தவினை. தனித் தமிழ் ஈழத்திற்கு தகுதியானவர்கள் நீங்களே என உதுகள் உசுப்பேத்தி  உஙகளை  பப்பா மரத்தில் ஏத்த,  நீங்களும் அதிலேறி தலைகீழாக விழுந்துள்ளீர்கள். விழுந்தெழும்பி சாத்தான்  வேதம் ஓதுவதுபோல் ஏதேதோ சொல்லுறியள்.

பொதுத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைந்தமை ஜனநாயகம் தொடர்பான நம்பிக்கை இழப்பை வெளிக்காட்டியுள்ளது ‐ விஜித ஹேரத்‐

இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைந்தமையானது ஜனநாயகம் தொடர்பான நம்பிக்கை இழப்பை வெளிக்காட்டியுள்ளதாக ஜனநாயக தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்ற வாக்கு கொள்ளை காரணமாக மக்கள் வெறுப்படைந்துள்ளனர். அவர்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். வாக்களித்தாலும் எந்த பயனுமில்லை என உணர்வு மக்களிடையே காணப்படுகிறது. இதனால் அதிகளவானோர் வாக்களிக்க செல்லவில்லை. மக்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்தாது நாட்டின் ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. இது நாட்டின் எதிர்காலத்திற்கான சிறந்த அடையாளமல்ல. அரசாங்கம் குறித்துஇ இந்த அரசாங்கத்தின் கீழ் நடத்தப்படும் தேர்தல்கள் பற்றியும் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.