Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சிவசேனா என்னும் நச்சுக் கிருமி

இந்தியாவில் மதவெறியைத் தூண்டி மக்களை பிளவுபடுத்தும் சிவசேனா என்ற கொலைகாரக் கும்பலை இலங்கைக்கு இறக்குமதி செய்திருக்கிறார்கள். மறவன்புலவு சச்சிதானந்தன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த யோகேஸ்வரன் போன்றவர்கள் சேர்ந்து வவுனியாவில் வைத்து இந்துமதவெறி என்னும் நச்சுக் கிருமியை பரப்ப வெளிக்கிட்டிருக்கிறார்கள். சிவசேனா, அரைக் காற்சட்டை ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிசத் போன்றவர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டுத் தான் தாங்கள் இந்த புண்ணிய காரியத்தை ஆரம்பித்திருப்பதாக மறவன்புலவு சச்சிதானந்தன் பத்திரிகைகளிற்கு தெரிவித்திருக்கிறார்.

மதவெறியர்கள் என்பவர்கள் யார்? அவர்களின் அரசியல் என்பது என்ன? அவர்களை பின்னால் நின்று இயக்குபவர்கள் யார்? இந்து சமயம், இஸ்லாமிய சமயம், கிறீஸ்தவ சமயம், பெளத்த சமயம், யூத சமயம் என்று விதம் விதமாக மண்டையை மறைத்துக் கொண்டு வந்தாலும் அவர்களின் மக்கள் விரோத கொலைவெறி அரசியல் கொண்டையை என்றைக்குமே மறைக்க முடியாது. உலகின் பெரும்பான்மையினரான ஏழை மக்களின் முதலாவதும், அடிப்படையானதுமான பிரச்சனை வறுமை, பசி, பொருளாதாரம். உழைக்கும் ஏழை மக்களை சுரண்டி வைத்திருப்பவர்கள் முதலாளிகள், ஆதிக்க வர்க்கத்தினர் என்னும் கொள்ளைக் கூட்டத்தவர்கள். உழைக்கும் ஏழை மக்கள் தங்களைச் சுரண்டும் முதலாளிகளிற்கு எதிராக, அதிகார வர்க்க அயோக்கியக் கும்பல்களிற்கு எதிராக போராடுவதைத் தடுப்பதற்காக வைத்திருக்கும் முதன்மையான ஆயுதம் தான் மதம்.

வறுமைக்கு காரணம் சுரண்டும் முதலாளிகள் அல்ல; நாட்டை விற்கும், மக்களின் உழைப்பை முதலாளிகளிற்கு விற்கும் தரகர்களான ஆட்சியாளர்கள் அல்ல மற்ற மதத்தவர்கள் தான் உங்களது வறுமைக்கு காரணம் என்று பெரும் பொய் சொல்லும் அயோக்கியர்கள் தான் மதவாதிகளும், மதவெறியர்களும். முதலாளிகள், ஆட்சியாளர்கள் எறியும் எலும்புத் துண்டுகளிற்காக மக்களை அடிப்படைப் பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பி முதலாளிகளிற்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் சேவை செய்யும் நயவஞ்சகர்கள் தான் மதவெறிக் கொலைகாரர்கள்.

ஆதிப் பொதுவுடமைக் கூட்டுச் சமுதாய வாழ்க்கையில் தாம் வாழ்ந்த இயற்கையை வழிபாட்டார்கள். தமக்கு முன்னே வாழ்ந்த மூத்தவர்களை வழிபட்டார்கள். அந்த கூட்டு வாழ்க்கை முறையை அழித்துக் கொண்டு தனிமனிதர்களாகி தனிச்சொத்துரிமை என்னும் ஏற்றத் தாழ்வு கொண்ட வாழ்வு முறைக்கு வந்த போது இயற்கையில் இருந்து விலகிய பெரு மதங்கள் தோன்றின. மனிதர்கள் எல்லோரும் சமம், இயற்கையின் செல்வங்கள் எல்லோருக்கும் உரித்தானவை என்னும் பழங்குடி மனிதர்களின் நம்பிக்கைக்கு மாறாக அரசர்கள் ஆளப் பிறந்தவர்கள், விண்ணில் இருக்கும் கடவுளின் மண்ணில் இருக்கும் டபுள் அக்டிங்குகளே மன்னர்கள் என்னும் புளுகுப் புராணங்களை சொல்லும் மதங்கள் தோன்றின.

"திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே" என்று புண்ணிய பாரதத்தின் வைணவ ஆழ்வார்கள் சொல்லும் போது "kings are god's lieutenants on earth" என்று கொஞ்சமும் மாற்றமின்றி ஐரோப்பிய கிறீஸ்தவர்களும் அதே கோட்பாட்டில் அடியொற்றிச் சொல்கிறார்கள். இந்த தத்துவ மயிரில் இருந்து எல்லா பெரு மதங்களின் நோக்கங்களும் கடவுளுக்கு அடிபணிவது போல அரசர்களிற்கும் அடி பணியுங்கள் என்று மக்களை மந்தைகள் ஆக்குவதே என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஜேர்மனியின் அதிகார வர்க்கத்தினர் புரட்டஸ்தாந்து கிறீஸ்தவர்கள். ஆனால் மிகச் சிறுபான்மையினரான யூதர்கள் தான் ஜேர்மனி மக்களின் வறுமைக்கு காரணம் என்று நாசிகள் பொய் சொல்லி கொலை செய்தார்கள். அதையே இத்தாலியில் கத்தோலிக்க கிறிஸ்தவ பாசிஸ்டுக்கள் செய்தார்கள். தலிபான்கள், இஸ்லாமிய அரசு என்னும் பயங்கரவாதிகள் மற்ற மதத்தவரின் தலையறுத்து புனிதப் போர் செய்கிறார்கள். இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசுகளினதும், பெளத்த மதவெறியர்களினதும் பொய்களையும், கொலைகளையும் தனியே எடுத்துச் சொல்லத் தேவையில்லை.

டெல்லியின் மத்திய அரசு ஊழல்காரர்களில் இருந்து தமிழ் நாட்டின் கருணாநிதி, ஜெயலலிதா என்னும் கமிசன் கொள்ளையர்கள் வரையான அயோக்கியர்கள் இந்தியாவின் அவலங்களிற்கு காரணமில்லை என்பது தான் இந்து மதவெறியர்களின் கண்டுபிடிப்பு. மக்களின் பொதுப் பணத்தை கோடிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பிக் கட்டாமல் திரியும் முதலாளிகள் காரணமில்லை என்பது இந்த அயோக்கியர்களின் ஆராய்ச்சி முடிவு. மக்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களை மிக மலிவான சம்பளத்திற்கு வேலை வாங்கி சுரண்டும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் மக்களின் பிரச்சனைகளிற்கு காரணமில்லை சிறுபான்மையினரான கிறீஸ்தவர்களும், முஸ்லீம்களுமே இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் என்று கூசாமல் பொய் சொல்லும் சிவசேனா, ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி என்னும் கொலைகாரர்களின் அயோக்கிய அரசியலை இலங்கைக்கு கொண்டு வந்து தமிழ் மக்களைக் காப்பாற்றப் போகிறார்களாம் இந்த மண்டை கழண்டவர்கள்.

"இந்திய சிவசேனா போல் இலங்கை சிவசேனா இந்துக்களிற்காக குரல் கொடுக்குமாம், சிங்கள பெளத்த அரசை எதிர்க்குமாம் என்று அறிஞர் பெருமக்கள் சொல்கிறார்கள். இந்திய சிவசேனா இந்திய மக்களிற்கு இது வரை என்ன செய்து கிழித்திருக்கிறது என்று இவர்கள் இலங்கையில் சிவசேனாவிற்கு கிளைகள் திறக்கிறார்கள்.? மதச்சார்பின்மை முகமூடி போட்ட காங்கிரஸ் இந்து அரசுகளும், வெளிப்படையான இந்துக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி அரசுகளும் இலங்கைத் தமிழ் மக்களிற்காக என்ன செய்து கிழித்தார்கள்? பெளத்த இலங்கை அரசுகளுடன் சேர்த்து, இந்து இந்திய அரசுகளும் இலங்கைத் தமிழ் மக்களை கொன்று குவித்த இரத்த வரலாற்றை இவர்கள் மறைத்து விட்டு இந்து ஒற்றுமை பேசிக் கொண்டு வருகிறார்கள். மக்கள் விரோத இலங்கை அரசிற்கு எதிராகவும், இந்திய பெரு நிறுவனங்களின் சுரண்டல்களிற்கு எதிராகவும் இலங்கை மக்கள் ஒன்று சேர்ந்து போராடக் கூடாது என்பதற்காகவே மதவெறி சிவசேனாவை இலங்கைக்கு இறக்குமதி செய்கிறார்கள்.

முற்போக்கு ஜனநாயக சக்திகள் எப்போதும் போல இப்போதும் இந்த மதவெறியர்களை எதிர்ப்பார்கள். ஆனால் சாப்பாட்டுக் கடைக்காரர்கள் தான் இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். சிவசேனா, இந்து முன்னணி போன்ற இந்து மதவெறியர்கள் கோவையில் நடத்திய கலவரத்தின் போது ஒரு கடையில் பிரியாணிச் சட்டியை களவெடுத்துக் கொண்டு ஓடினார்கள். அது போல இவர்களைப் பின்பற்றும் இலங்கைச் சிவசேனாக்காரர்களும் எதிர்காலத்தில் எங்காவது ஆர்ப்பாட்டம் நடத்தினால் புட்டுக் குழலோ, இடியப்பச் சட்டியோ களவெடுக்கப்படலாம். விழித்திருங்கள்.