Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

2018 உள்ளுராட்சி சபைத் தேர்தலும் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிலைப்பாடும்

 

   தேர்தல் முடிவுகள் என்பது மக்கள் கருத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாகும் எனவும், தேர்தல் என்பது மக்கள் கருத்தை அளவிடும் கருவியாகுமெனவும் ஒரு கருத்து நிலவுகின்றது. ஆனால் அது உண்மையல்ல என்பது பகுத்தறிந்து பார்க்கும் எந்தவொரு நபரும் புரிந்து கொள்வார். நாம் வாழும் இந்தச் சமூகத்தில் ‘மக்கள் கருத்து’ என்பது மக்கள் மத்தியில் தானாகவே உருவாகிய ஒன்றல்ல. பணபலம், ஊடகபலம், குண்டர்பலம் மற்றும் அரசியற்பலத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும். மக்கள் கருத்தை உருவாக்குவதற்காக மக்கள் மனதை சலவை செய்யும் (மூளைச் சலவை) விடயத்தில் ஊடகங்கள் முன்னின்று உழைக்கின்றன.  சாதாரண காலங்களிலும் மக்கள் கருத்தென்பது அப்படியானதாக இருக்கும் பட்சத்தில், தேர்தல் காலங்களில் அது மேலும் தீவிரமடையுமே தவிர வேறொன்றும் நடக்காது. ஆகவேதான் தேர்தல் முடிந்த பின்பு வெளிவரும் தேர்தல் முடிவுகள் செயற்கையாக நிர்மாணிக்கப்பட்ட ‘மக்கள் கருத்தின்’ வெளிப்பாடெனக் கூற முடியும்.

   என்றாலும், தேர்தல் நேரத்திலும் அதற்கு முன்பும் நடக்கும் விசேட பரப்புரைகளின்; ஊடாக இடதுசாரிய கருத்தியலை சமூகமயப்படுத்த முடியாதென்பது இதன் கருத்தாகாது. குறிப்பிட்டளவு முயற்சி செய்தால் தேர்தலில் இடதுசாரிய அமைப்புகளுக்கும் ஓரளவு மக்கள் பிரதிபலிப்பை பெற்றுக்கொள்ள முடியும். என்றாலும், அதற்கு ஒரு வரையறை இருப்பது சம்பந்தமான புரிந்துணர்வும் வேண்டும்.

   அதேபோன்று, இடதுசாரிய கட்சிகள் தேர்தலில் மற்றும் பிரதிநிதிகள் நிறுவனங்களில் பங்கேற்பது (நாடாளுமன்றம், மாகாண சபைகள், உள்ளுராட்சி நிறுவனங்கள்) குறித்து தமது நிலைப்பாட்டை அமைத்துக் கொள்ளும்போது வரலாற்றில் பெற்றிருக்கும் அனுபவங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டுமென்பதையும் மறக்கக் கூடாது. இலங்கையிலும், சர்வதேச அரசியலிலும் தேர்தல் மற்றும் பிரதிநிதிகள் நிறுவனங்கள் சம்பந்தமாக தலையீடு செய்வது எப்படி என்பது குறித்து தேவையானளவு உதாரணங்கள் கிடைக்கின்றன. பிரதிநிதிகள் நிறுவனமொன்றிற்காக நடக்கும் இவ்வாறான தேர்தல் களங்களை இடதுசாரிய இயக்கம் தனது அரசியல் போராட்டத்தின் பிரதான அல்லது ஒரே போராட்டக் களமாக ஆக்கிக் கொள்ளல் வேண்டும்.  மக்கள் கருத்தின் மீது தiலையிடுவதற்கான சந்தர்ப்பமாக அதனை பயன்படுத்த வேண்டும் என்பதோடு ஒரு பிரதிநிதித்துவத்தையாவது பெற்றுக்கொள்ள முடியுமாயின் அதற்கும் முயற்சி செய்ய வேண்டும்.

   எமதேயான அரசியல் வரலாற்றில் தேர்தலுக்குத் தேர்தல் போட்டியிட்டு, பிரதிநிதித்துவ நிறுவனங்கள் குறித்து நம்பிக்கையை வளர்த்து, அதன் மீது முழு உறுப்பினர்களினதும் மற்றும் சமூகத்தினதும் மனோபாவத்தை உருவாக்கும் அரசியல் சம்பந்தமாக எமக்கு சுய விமர்சனம் உண்டு. அதேபோன்று பிரதிநிதிகள் நிறுவனத்தில் உள்ள கடமைப் பொறுப்புகளை மிகைப்படுத்தி, கடைசியில் அதிலேயே நாமும் ஒரு பொறியாகி கடந்து வந்த அரசியல் அனுபவங்கள் எமது வரலாற்றுப் பயனீட்டில் அளவிற்கதிகமாவே உண்டு. ஆகவேதான் வரவிருக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடுவதற்குப் பதிலாக மிகக் கவனமாக அரசியல் ஆர்ப்பாட்டத்தினதும் பரப்புரைக்கானதுமான சந்தர்ப்பம் என்ற வகையில் மக்களுக்கு கல்வியை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்தில் தேர்தலை பயன்படுத்த வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்.

   தற்போதைய நிலைமையை கவனிக்கும்போது, 2018ம் வருடம் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நாட்டின் முன்னேற்றம் சம்பந்தமாக தீர்க்கமான சமிக்ஞையை காட்டுவது தெரிகின்றது. சுதந்திரக் கட்சியில் பிளவு, ஐ.தே.க.வின் மீறப்பட்ட வாக்குறுதிகள், ஜே.வி.பி.யின் இரட்டைநிலை அரசியல் ஆகியன தேர்தலின் முன்பாக சோதனைக்கு உள்ளாக்கப்படவிருக்கின்றன. அதேபோன்று, இந்த ஒவ்வொரு அரசியல் இயக்கமும் 2020ல் தமது அதிகாரப் போட்டியின் தொடக்கப் புள்ளியாக இத்தேர்தலை கருதுவது தெரிகின்றது. பொதுவாக கிராமத்தின் தேர்தலாக கருதப்படும் உள்ளுராட்சி தேர்தலானது பிரதேச விடயங்களுக்கு மட்டுப்பட்டதாக இருந்தாலும், இம்முறை தேர்தலின்போது உருவாகக் கூடிய கருத்தாடலானது அதில் மாற்றமொன்றை பதிந்துவிட்டு குறிப்பிட்டளவு தூரத்திற்கு தேசிய மட்டத்திலான அரசியல் கருத்தாடலுக்கு தள்ளப்படக் கூடும்.

இந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 3 வருடங்கள் தாமதித்தே நடக்கின்றது. இதற்கு பல்வேறு தொழில்நுட்ப காரணிகளைக் கூறினாலும், சுதந்திரக் கட்சியின் இரு குழுக்களும், ஐ.தே.க.வும், குறிப்பாக ஜே.வி.பியும் இத்தேர்தலை விரும்பாததுதான் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு காரணமென்பது தெரிகின்றது. எவ்வாறாயினும், இத்தேர்தல் ஊடாக புதிய தேர்தல் முறையொன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தேர்தல் முறையானது சிறு அரசியல் அமைப்புகளை வெளியில் தள்ளிய தேர்தலாகும். இத்தேர்தலில் முழு நாடும் அதாவது சகல உள்ளுராட்சி நிறுவனங்களுக்கும் போட்டியிடும் ஒரு கட்சி 8356 பிரதிநிதித்துவத்திற்காக 9379 வேட்பாளர்களை நிறுத்த வேண்டியுள்ளது. இப்புதிய முறைக்கேற்ப இதுவரை உள்ளுராட்சி மன்றங்களில் 4486 உறுப்பினர்களே இருந்தனர். இது 8356 வரை 3870 ல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முழு நாட்டிலும் போட்டியிடும் ஒரு கட்சி கட்டுப்பணமாக 1,40,00,000 ரூபா அதாவது 140 இலட்சம் ரூபா செலவிட வேண்டியுள்ளது. அது சுதந்திரக் கட்சிக்கோ, ஐ.தே.கட்சிக்கோ பிரச்சினையாக இருக்காது. கட்டுப்பணத்தை பெற்றுக்கொள்ள ஒரு தொலைபேசி அழைப்பு மாத்திரம் அவர்களுக்குப் போதும். அதேபோன்று அவர்களது வேட்பாளர்கள் அரசியல் கொள்கையை முன்வைக்கும் ஆற்றல், அதற்காக முன்வருதல் மற்றும் சமூகத்தில் ஓரளவாவது எடுத்துக் காட்டுதலுடன் வாழ்பவர்களாக இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. அவர்களது செய்தி மிகவும் எளிதானது. அது ஒருவரது அல்லது இன்னொருவரது கரங்களை வலுப்படுத்துவதாக இருக்கக் கூடும். என்றாலும், ஒரு கொள்கையுடன் தேர்தலில் போட்டியிடும், அக்கொள்கையை தேர்தலின் போது உயர்த்திப் பிடிக்க எதிர்பார்த்திருக்கும் அரசியல் கட்சியொன்றிற்கு அது இலகுவான சவாலல்ல. ஒரு தேர்தல் தொகுதிக்கு பட்டியல் தயாரிக்கும்போது போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 30, 40, 50, 60 என்ற வகையில் பெரிய எண்ணிக்கையாகும்போது ஓரளவு தகுதியுடைய வேட்பாளர்களை நிறுத்துவது சம்பந்தமான சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டும். அது, இந்த சட்டமூலத்தை தயாரித்தவர்கள் விட்ட தவறல்ல என்பதனாலும், அரசியல் கட்சிகளை உத்தியோகபூர்வமாக தடை செய்யாமல் மறைமுகமாக மேற்கொள்ளப்பட்ட தடை என்பதனாலும் இந்த விடயத்தை மக்களுக்கு நேரடியாக முன்வைக்க வேண்டியுள்ளது. இந்த ஜனநாயகவிரோத தேர்தல்முறையில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் சம்பந்தமாக சமூகத்தில் கருத்தாடலொன்றை உருவாக்கவும் வேண்டியுள்ளது. அன்றைய ஜயவர்தன ஆட்சிக்காலத்தில் ஜே.ஆர். ஜயவர்தன நேரடியாக செய்தவற்றையே இந்த கூட்டரசாங்கம் வேறு முறையில் செய்திருக்கின்றது.

அப்படியானால் ஜே.வி.பி. எப்படி போட்டியிடுகின்றது என இந்த விளக்கத்திற்கு எதிர்மறையாக ஒருவர் கேட்கக் கூடும். வேறு கட்சிகளில் இடம் கிடைக்காதவர்களை பத்திரிகை விளம்பரங்கள் ஊடாக தமது வேட்பாளர் பட்டியலில் இடமளிக்க ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது ஜே.வி.பி. பொதுவாக சுதந்திரக் கட்சியோ, ஐ.தே.கட்சியோ அப்படிச் செய்வதில்லை. ஒரு வாரத்திற்கு முன்பு வேறொரு கட்சியிலிருந்த ஒருவரை தேர்தல் மாதத்திற்கு தமது கட்சிக்காக வாடகைக்கு எடுத்ததன் மூலம் அவர்கள் மக்களோடு செய்யும் கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக, மக்கள் விடயத்தில் அவர்களது பொறுப்பு சம்பந்தமாக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஜே.வி.பியின் வரலாற்றில் பல்வேறு மக்கள் பிரதிநிதிகள் கட்சியை விட்டுச் சென்றமையால் வருந்தும் வரலாறொன்று உண்டு. அப்படியான ஒரு கட்சி இப்படியான தீர்மானங்களுக்கு வருவது ஆச்சரியம்தான். என்றாலும், 2020ல் வெற்றிக்காக அவர்கள் தம்மையே நியமித்துக் கொள்ளும் நப்பாசையை பார்க்கும்போது இது ஒரு சாதாரணமான ஒன்றுதான் எனத் தோன்றுகின்றது. எவ்வாறாயினும் இந்த தேர்தல்முறை மிக ஜனநாயகமானதென பீற்றிக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதiலை முன்னணி உட்பட வேறு சில கட்சிகளை அடிமட்டத்திலுள்ள சிறு அரசியல் அமைப்புகளையும் துடைத்தெறிவதற்காக தாமே அதன் பலிக்கடாவாக ஆகும் செயல் சம்பந்தமாக வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மறுபுறம் இத் தேர்தல்முறை சம்பந்தமாக வாழ்த்துப் பாடல்கள் பாடிய தாராளவாதிகள் முன்வைத்த ‘கிராமங்களில் மக்கள் தலைவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவது’ என்பது அப்பட்டமான பொய்யாக உள்ளது. ஒரு சுயேட்சை வேட்பாளர் 5000 ரூபா கட்டுப்பணம் செலுத்த நேர்ந்தமையும், அவ்வாறானதொரு குழுவிற்கு சுமார் 2 இலட்சம் ரூபா கட்டுப்பணமாக செலுத்த நேர்ந்துள்ளமையும் ஆகிய அடிப்படையை பார்க்கும்போது அவ்வாறான அணுகுதலுக்கு ஏற்பட்டுள்ள இடையூறு தெரிகின்றது. மக்கள் தலைவர்கள் போட்டியிடுவதாயின் அவர்கள் தம்மால் நிராகரிக்கப்பட்ட ஊழல் அரசியல் கட்சிகளின் பட்டியல் வாயிலாகவே போட்டியிட வேண்டுமென்பதுதான் இதனூடாக கூறப்படும் செய்தி.

எப்படியிருப்பினும், இத் தேர்தல் அதிகாரப் போட்டியின் மத்தியில் இன்றைய ஆளும் குழு நாட்டையும் மக்களையும் இட்டுச் செல்லத் தயாராகும் எதிர்கால பயங்கரம் சம்பந்தமாக இத் தேர்தலில் இருந்தே மக்கள் கவனம் செலுத்த வேண்டுமென்பதும், பொது மக்கள் இதற்கு எதிராக அமைப்பாக ஒன்றிணைய வேண்டுமென்பதுமே எமது நிலைப்பாடு. தேர்தல் முறையில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி தடைகள் காரணமாக தேர்தலில் போட்டியிட முடியாத நிலை  எமக்கு ஏற்பட்டிருந்தாலும், தேர்தலுக்கு வேட்பாளர்களை முன்னிறுத்தாமலோ அல்லது இன்றைய ஆட்சிக்குழுவின் இந்த நாசகார பயணம் சம்பந்தமாக விரிவான மக்கள் புரிந்துணர்வை உருவாக்குவதற்கும் அதைச் சுற்றி அவர்களை ஒருங்கிணைப்பதற்கும் தீர்மானித்துள்ளோம். அதன்போது ‘ஏமாறாதிருப்போம், எழுந்து நிற்போம்’ என்ற தொனிப்பொருளில் பரவலான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏற்கனவே நாம் திட்டமிட்டுள்ளோம். மாவட்ட பேரணிகள், பிரதேச கூட்டங்கள், மக்கள் சந்திப்பு, வீடு வீடாக கலந்துரையாடல், நடமாடும் மக்கள் சந்திப்பு, வீதி நாடகங்கள், தெருப்பாடல்கள், கவிதைகள் போனற முறைகளை பயன்படுத்தி நாடுபூராவும் பரப்புரை மேற்கொள்ள முன்னிலை சோஷலிஸக் கட்சி திட்டமிட்டுள்ளது.

கடந்த வரவு செலவு திட்டத்தின் ஊடாகவும், அரசியலமைப்பிற்கு முன்மொழியப்பட்டுள்ள அமைப்பு ரீதியிலான திருத்தங்கள் ஊடாகவும், அதற்கு முன்பு ஒவ்வொரு முறையும் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களின் ஊடாகவும், பயங்கரமான எதிர்காலத்திற்கு இந்நாட்டு மக்கள் இட்டுச் செல்லப்படுவது தெரிகின்றது. கல்வி, சுகாதாரம், ஓய்வூதியம், முதியோருக்கான கொடுப்பனவுகள் போன்ற சமூக நலனோம்புகைகளை முற்றாக பறிக்கவும், அரச நிறுவனங்கள் மற்றும் மக்கள் சொத்துக்களை ஏலமிடவும், உழைப்புப் படையணியின் சம்பளத்தையும் சேவை நிபந்தனைகளையும் பல்வேறு நாடுகளுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள் வாயிலாகவும் தொழில் சட்டங்களில் மேற்கொள்ளும் திருத்தங்கள் ஊடாகவும் பறித்துக் கொள்வதற்கும், செஸ் வரியை நீக்குவதன் ஊடாகவும் வர்த்தக ஒப்பந்தங்கள் ஊடாகவும், உள்நாட்டு சிறு கைத்தொழிலாளர்களின் பொருளாதாரத்தை அழிக்கவும், காணி சட்டமூலங்களின் ஊடாக விவசாயிகளின் காணிகளை பறிப்பதற்கும், பல்தேசியக் கம்பனிகளையும் செல்வச் சீமான்களை திருப்திப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு கொமிஸன் பெற்றுத்தரும் பாரிய சுற்றாடல் அழிவை மேற்கொள்ளும் மெகா திட்டங்களின் ஊடாகவும் பொருளாதார மட்டத்தில் மக்கள் பெரிய பொறியில் சிக்கவைக்கப்படுகின்றார்கள். வரவு-செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்பு நாணய நிதியம் தனது மூன்றாவது கடன் தவணையை நிறைவேற்றியதன் ஊடாக தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டமை தெரிந்த விடயமாகும். ஜனநாயகம் சம்பந்தமாக கொடுத்த வாக்குறுதிகள் உதைத்துத் தள்ளப்பட்டுள்ளன. காணாமல் போனவர்கள் சம்பந்தமான உண்மையை வெளிப்படுத்தல், அரசியல் படுகொலைகளுக்கு நீதி வழங்குதல், அரசியல் சிறைக் கைதிகளை விடுதலை செய்தல் போன்ற பிரச்சினைகள் ஆட்சியாளர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அன்று நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்ய வேண்டுமென கோசமிட்டவர்கள் இன்று காணாமல் போயுள்ளார்கள். அதற்குப் பதிலாக மக்கள் வாழ்க்கைத் தரவுகளைக் கூட சேகரிக்கும் உலகின் பல்வேறு நாடுகளில் விமர்சனத்திற்குள்ளான இலத்திரனியல் அடையாள அட்டை போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இனங்களுக்கு மத்தியிலான குரோதத்தை ஒழிப்பதற்குப் பதிலாக அது மேலும் துளிர்விட்டு வளரக் கூடியவாறான அரசியல் அணுகுமுறைக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் சந்திக்கும் விசேட பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு அணுகுமுறை கிடையாது.

   இவ்வேலைத்திட்டத்திற்கு எதிரானவர்களும் அதேபோன்ற அபூர்வ பிறவிகள்தான். தமிழ் தேசியக் கூட்டணி எதிர்க்கட்சி தலைமைப் பதவியையும் வைத்துக் கொண்டு கடந்த மூன்று வருடங்களாக அரசாங்கம் முன்வைத்த சகல சட்டமூலங்களுக்கும் ஆதரவாக கை தூக்கி வரலாற்றில் பதியப்படும் எதிர்க்கட்சி தலைவர் பாத்திரத்தில் நடித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்பானது எந்தவொரு கொள்கையையும் சார்ந்திராததோடு, அவர்கள் எப்போதுமே இனவாத அரவணைப்பை நாடிச் செல்லும் விமர்;சனங்களை முன்வைப்பதன் வாயிலாக அரசாங்கம் தனது வேலைகளை இலகுவாகச் செய்ய இடமளித்துள்ளது. நாணய நிதியத்தின் மேற்படி கொள்கை ரீதியிலான அணுகுமுறைக்கு அவர்களது எதிர்ப்பு தோன்றுவது தொழில்நுட்ப காரணிகளை முதன்மையாகக் கொண்டுதான். அல்லது இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டுதான். மக்கள் விடுதலை முன்னணியானது தனது கட்சியின் ஒரே நோக்கம் ஊழல் மோசடிகளை நிறுத்துவதே என சொல்லிக் கொண்டு அதன்மீதே மோதும் அரசியல் இயக்கமாக ஆகியுள்ளது. மறுபுறம் அரசாங்கம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதனை காப்பாற்ற ஜேவிபியினர் முன்வருவார்கள். மக்களுக்கு கேடு விளைவிக்கும் அநேக சட்டதிட்டங்கள் சம்பந்தமான அவர்களது விமர்சனம் கூட்டு எதிர்க்கட்சியை விடவும் பலவீனமாகும்.

   இந்நிலைமையின் முன்பாக, நாட்டு மக்களை ஏமாற்றத்திலிருந்து மீட்டெடுக்கவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, சமூக நீதி, உண்மையான ஜனநாயகம், சமத்துவம் ஆகியவற்றிற்காக தோற்றி நிற்கவும் தயார்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக இத்தேர்தலிலிருந்து ‘ஏமாறாதிருப்போம்- எழுந்து நிற்போம்’ என்ற தொனிப்பொருளில் நாடுபூராவும் மக்களை விழிப்புணர்வூட்டும் மற்றும் ஒருங்கிணைக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அதற்காக ஏகாதிபத்திய விரோத, முற்போக்கான ஜனநாயக சார்பு சகல சக்திகளையும் எம்மைச் சுற்றி அணிதிரளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

 

அரசியல் சபை

முன்னிலை சோஷலிஸக் கட்சி 

2017 டிசம்பர் 17