Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அதிகாரவர்க்க நலன்சார்ந்த ஊதுகுழல்களான ஊடகங்கள் ஒருபோதும் மக்கள்நலன் சார்ந்து நிற்காது…!

என்ரை அம்மா…, என்ரை அப்பா…,

ஐயோ என்ரை பிள்ளை… என்று பலஅவலக் குரல்களையும் அலறல்களையும் சனல்-4 தொலைகாட்சியில் பார்த்து நெஞ்சு அடைத்துப் போகும் நிலைக்கு நாம் சென்று விட்டோம். ஆனால் எங்களுக்குக் கேட்காத எங்களால் பார்க்க முடியாத இன்னும் எத்தனை ஆயிரம் அலறல்கள் அந்த வன்னி மண்ணுக்குள் புதைந்து போயிருக்கின்றது.

 

இனமுரண்பாடும், இலங்கை  அரசியலில் பேரினவாத கொள்கையின் ஆக்கிரமிப்பும் எப்போது ஆரம்பித்ததோ, அன்றே தமிழ் மக்களின் அலறல்களும் அவலக் குரல்களும் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. அன்று சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களக் காடையர்களை கட்டவிழ்த்து விட்டது, இன்று நேரடியாக தானே குண்டுகளை வீசி அழித்தது. அப்போதெல்லாம் கண்களையும், வாயையும் இறுக மூடிக் கொண்டிருந்த இந்த உலகநாடுகளும் அதன் எடுபிடி ஊடகங்களும் இன்று தமிழ் மக்கள் மீது திடீர் கரிசனை கொண்டு பொங்கி எழுகின்றன. இத்தனை இலட்சம் தமிழ் மக்கள் பொங்கியெழுந்து வீதிகளில் போராட்டம் நடாத்திய போது மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை புலிப் போராளிகளும், புலித் தலைமையும் அழிந்தால் போதும் என்று இறுதி மக்கள் அழிவு வரை பார்த்துக் கொண்டிருந்த இவர்கள், இப்போது மகிந்தாவைப் பார்த்து குலைக்கிறார்கள். வெளிநாட்டு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடாத்திய அத்தனை மக்களும் தவறான தலைமையின் கீழ் ஆர்ப்பாட்டம் நடாத்தி இருந்தாலும், போரை நிறுத்த வேண்டிய தேவை இருந்தது. புலிக் கொடியும், பிரபாகரனின் படமும் பயன்படுத்திய புலிகளின் போக்கு பிழையாக இருந்தாலும், பேரினவாதத்தின் அந்த மக்கள் அழிவுத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் இருந்தது. அன்றே இந்த பேரழிவினை இந்த உலக நாடுகள் தடுத்திருக்க வேண்டும். அதற்காக இரண்டு தரப்பினையும் நிர்ப்பந்தித்து, அழுத்தம் கொடுத்து அந்த இன அழிப்பினை நிறுத்தி இருக்க வேண்டும். தங்களை காப்பாற்றிக் கொள்ள மக்களைப் பணயம் வைத்த புலிப்பாசிச கும்பல்களிடமிருந்து, போரை நிறுத்தி மக்களைக் காப்பாற்றி இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையில் அன்றே இந்தியா, சீனா, ஏனைய உலகநாடுகளும் செயற்பட்டிருக்க வேண்டும்.

புலிகளை ஆதரித்த மக்கள் அழியத்தான் வேண்டும் என்று சில அரசியற் பொறுக்கிகள் சொல்வது போன்று, எல்லா மக்களையும் பயங்கரவாதிகள் என்று கூறிக் கொண்டு மகிந்த கொலைக் கும்பல் அப்பாவி தமிழ் மக்களை அழிக்கும் போது எதுவுமே தெரியாத மாதிரி வெள்ளை மாளிகைக்குள்ளும், பாராளுமன்ற சுவர்களுக்குள்ளும் பதுங்கியிருந்து இரகசிய அரசியல் நடாத்தி விட்டு…, பேரினவாதம் இத்தனை ஆயிரம் அப்பாவி மக்களையும் அழித்து முடித்து இரண்டு வருடங்களுக்கு பிறகு முக்கிக் கொண்டு திரிகிறார்கள். இந்த முக்கலும் மக்கள் மீது கரிசனை கொண்ட முக்கல் இல்லை. இவர்களின் சொந்த அரசியல் நலன் சார்ந்த முக்கல் தான் இது.

மகிந்த அரசு அமெரிக்கா ஏகாதிபத்திய, மேற்கத்தைய நாடுகளோடு ஏற்படுத்திக் கொண்ட முரண்பாடும்.., சீனா, ரசியா, லிபியாவினை சார்ந்து நிற்கும் இலங்கை அரசின் நிலைப்பாடும்.., அடுத்து இறுதி போரின் காலகட்டத்தில் சனல்-4 இனோடு ஏற்பட்ட தர்க்கமும் தான் இந்த வெளிப்பாடு. அமெரிக்க ஐரோப்பிய படைகள் ஈராக்கில் நடாத்திய கொலைகளும், பாலியல் வன்முறைகளும் ஏன் சனல்-4 இற்கு தெரியாது போயிற்று. மகிந்த அரசை தங்கள் எடுபிடியாக்க வேண்டும் அல்லது ஆட்சியை விட்டு விலக்கி தங்களுக்கு சார்பான அரசினை இலங்கையில் நிறுவ வேண்டும். இது தான் இவர்களின் நோக்கம். இது எந்தவிதத்திலும் எங்கள் மக்களுக்கு சார்பானதில்லை. இந்த முதலாளித்துவ ஊடகங்களாலோ அல்லது இந்த உலக அரசியல்வாதிகளாலோ அல்லது தமிழ் நாட்டு அரசியல்வாதிகளாலோ தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. இது போன்று தான் எங்கள் ஈழத்து அரசியல்வாதிகளும். மகிந்தாவிற்கு எதிராக இவர்களால் குரல் கொடுக்க முடியாது. மகிந்த கும்பல் ஒரு கொலைகாரக் கும்பல் என்பது இவர்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் இவர்களால் எதுவுமே முடியாது.

 

 

இது மக்களின் அழிவு…! இது மக்களின் கண்ணீர்…! இது மக்களின் பிரச்சனை…! மக்களால் இதை எதிர்க்க முடியும்…, மக்களால் தான் இதை தண்டிக்க முடியும். எந்த மாற்றம் மக்களிடம் இருந்து தான் உருவாக வேண்டும். எதையுமே மாற்றியமைக்கும் சக்தி மக்களிடம் மட்டும் தான் உள்ளது. அதனால் தான் எல்லா அரசியல்வாதிகளும் மக்களை கண்டு அஞ்சுகிறார்கள். மக்களை ஒன்றிணைய விடாது பல முரண்பாடுகளை உருவாக்கி மக்களை கூறுகூறாகப் பிரித்து விடுகிறார்கள். நிறம், மதம், மொழி, இனம்… என்ற வேறுபாடுகளை கூர்மைப்படுத்தி மக்களுக்குள் பேதங்களை உருவாக்கி மக்களை ஒருவருகொருவர் அன்னியப்படுத்தி பிளவுகளையும், கலகங்களையும் ஏற்படுத்தி மக்களை மோதவிட்டு தங்கள் பிழைப்பினை பார்த்துக் கொள்கிறார்கள். இது இலங்கையில் மட்டுமல்ல உலகநாட்டு சகல அரசியல்வாதிகளின் கொள்கைகளும் இந்த அடிப்படையில் தான் அமைந்துள்ளது.

அமெரிக்க ஐரோப்பிய மக்கள் மத்தியில் முஸ்லீம் மக்கள் எல்லோரும் பயங்கரவாதிகள்.., சிந்திக்க தெரியாதவாகள்…! சோமாலிய மக்கள் படிப்பிவற்றவர்கள்.., வன்முறையாளர்கள்..!

இந்தியாவில் பெரும்பான்மை இனத்தவர்களான இந்துமதவாதிகள், சாதாரண மக்கள் மத்தியில் முஸ்லீம் எதிர்ப்பினை உருவாக்க சினிமா ஊடகங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் முஸ்லீம் இளைஞர்கள், பெண்கள் குண்டு வைப்பாளர்கள், தற்கொலைத் தாக்கதாரிகள்…!

எமது இலங்கை மண்ணில் தமிழர்கள் புலிகள் அல்லது புலி ஆதரவாளர்கள்.., தமிழர்களால் நாடு சின்னாபின்மாகிறது, சீரளிவுகளும் சிதைவுகளும் ஏற்படுகின்றது.., தமிழ் மக்கள் பிரிவினைவாதிகள் நாட்டை கூறு போடுகிறார்கள்..! என்ற கருத்துக்கள் சிங்களப் பேரினவாதிகளாலும் அதோ போன்று சிங்களவர் எல்லாம் இனவெறி பிடித்தவர்கள்.., தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் எங்களை அடக்கியாள நினைப்பவர்கள்.., தமிழ் மக்களின் உரிமையினை மறுப்பவர்கள்…! இப்படியான மக்களைப் பிளவுபடுத்தும் கருத்துக்களை திட்டமிட்டு பரப்புதல் செய்தே, சிங்கள பேரினவாதிகளும் தமிழ்ப் பிரிவினைவாதிகளும் மக்களிடையில் பிரிவினைவாத உணர்வையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்தி மக்களை மோதவிட்டு அவர்களின் அறியாமையிலும் அழிவிலும் தங்கள் அரசியற் பிழைப்பினை நடாத்தி வருகிறார்கள். இனவெறியன் மகிந்தாவினால் அழிவுக்கு உட்படுத்தப்பட்ட பாரிய மக்கள் அழிவினைக் கூட மூடிமறைத்து சாதாரண அடிமட்ட சிங்கள, முஸ்லீம், மலையக மக்கள் பார்வைக்கோ, உணர்விற்கோ தெரியாது மறைக்கப்பட்டு விட்டது. இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இலங்கையில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லீம் அரசியல்வாதிகளோ அல்லது முற்போக்கு அரசியற் கட்சிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களின் சிந்தனை எல்லாம் தாங்கள் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வர வேண்டும் என்பது தான்.

எங்கள் மக்கள் அழிவிற்கும் அவலத்திற்கும் நீதி கேட்கும் நாம் அதனை எங்கள் நாட்டு சகல மக்களுக்கும் தெரியப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். நீதி நியாயம் கேட்கும் தைரியம் மக்களிடம் உண்டு. மக்களால் தான் இவர்களை தண்டிக்க முடியுமே ஒழிய அமெரிக்காவினாலோ அல்லது அதன் ஊது குழல்களான சனல்-4 போன்ற ஊடகங்களினாலோ நடைபெறமாட்டாது. அமெரிக்காவினாலும், சனல்-4 போன்ற ஊடகங்களாலும் எங்கள் பார்வைக்கு வராது மறைக்கப்பட்ட விடயங்கள் இன்னும் ஏராளம். ஆனால் அவர்கள் எதையுமே வெளிக்கொணரப் போவதில்லை. அவர்கள் தங்கள் அரசியற் கொள்கைக்கு தேவையானதை மட்டும் வெளியார் பார்வைக்கும் சிந்தனைக்கும் பயன்படுத்திக் கொள்வார்கள். இதே போன்று தான் வெளிநாட்டில் வாழும் எங்கள் தமிழ் அரசியல்வாதிகளும், அரசியற் பிரமுகர்களும்…! இவர்கள் மக்கள் சிந்தனையில் அதுவும் குறிப்பாக தமிழ் இளைஞர்கள் சிந்தனையில் சிங்கள எதிர்ப்பு மனநிலையினை ஏற்படுத்தவும், குறுந்தமிழ்த் தேசியத்தில் தங்கள் சுரண்டல் பிழைப்பினை பாதுகாத்துக் கொள்ளவும் இந்த மக்கள் அவலத்தினை பயன்படுத்துவார்களே ஒழிய வேறு எதுவும் இவர்கள் செய்யப் போவதுமில்லை, எதையும் மாற்றப் போவதுமில்லை. தங்கள் அறிமையாலும் சுயநலத்தினாலும் எதிர்காலத்தில் இன்னொரு மக்கள் அழிவிற்கு இப்போதே மீண்டும் விதைவிதைக்க ஆரம்பித்துள்ளார்கள். இவர்கள் மக்கள் அழிவிலேயே வாய்திறந்து நன்றாக குரட்டை விட்டு தூங்க முடிந்தவர்கள்.

எங்களால் முடியாது, எங்களால் நிம்மதியாக மூச்சுவிட முடியாது.., எங்கள் மக்களின் அவலங்களை பார்க்க முடியாமல் கண் மூடிக் கொண்டு கண்ணீர் விடுபவர்கள் நாங்கள். எங்களுக்கு நியாயம் வேண்டும்…! எங்கள் மக்களின் அழிவிற்கும், கண்ணீருக்கும் இந்த இனவெறியன் மகிந்த கும்பல் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்…! இது மக்களினால் தான் முடியும், அதுவும் எங்கள் நாட்டு மக்களால் தான் முடியும். எங்களுடைய எதிரி அதிகாரவெறி பிடித்த, மக்களை அடக்கியாளும் வெறிபிடித்த அரசியல்வாதிளேயொழிய. அப்பாவி சிங்கள மக்களல்ல. இந்த அதிகாரவெறி பிடித்த கும்பல்களின் குற்றச் செயல்களை தண்டிக்க சிங்கள மக்களின் ஆதரவு அவசியம். பெரும்பான்மை இனமக்களின் ஆதரவு இருந்தால் எங்கள் இலக்கு இலகுவில் நிறைவேறும். எங்கள் ஒருமைப்பாட்டிலும், எழுச்சியிலும் தான் நியாயம் பெறமுடியும். இதுவே சாத்தியம். இந்த குற்றவாளிகளை மக்களுக்கு தெரியப்படுத்தும், தெளிவுபடுத்தும் செயற்பாட்டினை கருத்திற் கொண்டு நாம் செயற்படுவது அவசியம்.