Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

புலிகளின் அழிவின் பின்னணியில் செயற்பட்டோரிடையே எழுந்துள்ள முரண்பாடுகளும், கசியும் உண்மைகளும்

1995 - 2009 வரையான காலத்தில் புலம்பெயர் பினாமி புலிகளும் , வன்னி , மற்றும் கொழும்பில் இயங்கிய  மறைமுக புலிகள் சார்பான ஊடகங்கள் , தனிமனிதர்கள், மனித உரிமை வாதிகள், மற்றும் இலங்கை சேர்ந்த சிங்கள  NGO நடத்துனர்களும் , தமிழ்-சிங்கள சுதந்திர பத்திரிகையாளர் எனத் தம்மை அழைத்து கொள்ளும் பலரும் அவர்களின் பத்திரிகையாளர் அமைப்புகளும், மனிதஉரிமை செயற்படாளர்கள் என கூறிகொண்ட பலரும் நோர்வே அரசின் பாரிய நிதி உதவியை பெற்றார்கள் .

இவர்கள் 1995- 2009 வரையான காலத்தில் மேற்படி இலங்கை அரசியல் சார்ந்து தொழில்பட, நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனத்தின் (NORAD)    தகவலின்படி கிட்டதட்ட 200 மில்லியன் க்ரூனர்கள் வழங்க்கபட்டுள்ளது.



அத்துடன் UNP, சின்ஹல உறுமய போன்ற அமைப்புகளின் சிங்கள அரசியல் வாதிகள் சிலரும் தமது மனித உரிமை, மற்றும் இயற்கை வள பாதுகாப்பு பிரசாரத்தை நடத்த நோர்வே அரசிடம் பணம் பெற்றனர்.

இவர்களுக்கு இந்த பாரிய தொகை ஏன் வளங்கப்பட்டது என்ற கேள்விக்கான பதில் மிக வெளிப்படையானது. மேற்படி 1995 - 2009 வரையான காலத்தில் நோர்வே அரசு "சமாதனத்தை" இலங்கையில் வென்றெடுக்க மிக தீவிரமாக உழைத்தது. அதற்கான தனது நிகட்சி நிரலுகேர்ற்ப பிரசாரமும், "லொபி" வேலை செய்யவுமே பணத்தை வாரி இறைத்து.

ஊடக சுதந்திரத்துக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் புலிகளுக்கு மிக சக்திவாய்ந்த ஒலி ஒளி பரப்பும் கருவிகளை வழங்கியதுடன், புலிகளின் பிரசர நிறுவனங்களின் வேலை செய்த "ஊடகவியலாளர்களுக்கு"பல மில்லியன் ரூபா செலவில் வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சிகளையும் வழங்கியது. தமிழ்நெட் என்ற சிவராமினாலும் வேறு சிலராலும் ஆரம்பிக்கபட்ட இணையத்துக்கு பல மில்லியன் ரூபாய் நோர்வே வழங்கியது.

இது ஒருபுறமிருக்க மேற் கூறியது போல, சிங்கள பகுதியிலும் பல மிலியன் நோர்வே அரசால் கொட்டப்பட்டது. இதி ல்மிக பெரும் தொகையை பெற்றுக்கொண்டவர்களில் ஒருவர் குமார் ரூபசிங்க.

இவர் யாரெனில் சந்திரிக்கா பண்டார நாயகாவின் மூத்த சகோதரி சுனித்திராவின் முன்னாள் கணவர் ஆவார். முன்னாள் JVP உறுப்பினரான சுனிதிராவை மணந்த ரூபசிங்க, பல பத்து வருடங்களாக மனித உரிமை செயற்பாட்டாளர் என்ற போர்வையில் செய்துவரும் தொழில் மேற்கு முதலாளித்துவ அரசுகளின் நிகழ்ச்சி நிரலுகேற்ப இலங்கை அரசியல் நிகழ்வுகளை தயார் செய்வதாகும்.

இலங்கையில் இனமுரண்பாடுகள் கூர்மயடைத்த பிற்பாடு, மேற்கு அரசியல் நலனுக்கேற்ப திட்டங்களை தயாரிக்க, லண்டனில் கல்வி கற்ற பின் இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சில் இயங்கிய குமார் ரூபசின்காவையும், புலிகளின் பாதிரியாக செயற்பட்டு சிறை மீண்ட முன்னாள் நெடுந்தீவு கத்தோலிக்க பங்குகுரு சின்னராசாவையும் நோர்வே அரசு ஒஸ்லோ சமாதான ஆய்வு மையத்தூடாக (PRIO) நோர்வைக்கு அழைத்தது. அதேபோன்று மற்றுமொரு தமிழரான பிரபல மாவோயிச, மார்சிச புத்திசீவியான முனைவர் ஒருவரையும் பேர்கன் பல்கலைக்கழகதின் சர்வதேச ஆய்வு மையமான கிறிஸ்டியான் மிச்சல்சன் இன்ஸ்டிடுட் ஊடாக நோர்வே வரவழைத்தது.

இதில் பாதிரியார் சின்னராசா அவர்கள்யாழ்பாணத்தில் பாதிரியாக வருவதற்கு குருகுலவாசம் (செமினறி) செய்தபோது தான் காதலித்த சகபாதிரியின் தங்கையை திருமணம் செய்ததனால் ஏற்பட்ட சமூக இழுக்கில் இருந்து தன்னை காப்பாற்ற, ஒஸ்லோ சமாதான ஆய்வுமைய பணியையும், தன் குருத்துவத்தையும் திறந்து, நோர்வேயில் இருந்து கனடாவுக்கு புலம் பெயர்ந்தார்.

மற்ற மார்சிச அறிவுசீவி தமிழரான முனைவர் மேற்கு நலனை முன்னிறுத்தி இன்றும் தனது சேவையை நாசுக்காக செய்துவருகிறார். எரிக் சூல்கெம் இலங்கையில் சமாதான  பணியில் ஈடுபட்டபோது ஆலோசகராக இவர் இருந்தார். ஆனாலும் இவரின் மிக பலமான பங்களிப்பு சந்திரிக்கா காலத்தில், நோர்வே/மேற்குலக நலனைமுன்னிறுத்தி இலங்கை அரசியலில் இருந்தது. இப்போ புலிபினாமிகளுக்கும் நோர்வே அரசுக்கும் இடையிலான ஆலோசகராக செயற்படுகிறார். இவரை பற்றியும், இவரின் மேற்கு நாடுகளின் நலன் சார்ந்த ரகசிய அரசியல் பற்றியும் கடந்தவருடம் தமிழ் அரங்கம் பல ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு இருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்த ஆதாரங்களுக்கு பதில் சொல்லாமல் அவதூறு என்று அவர் தேசம் இணையத்தில் கட்டுரை எழுதியதுடன், மே 18 இயக்க உறுபினர்களின் உதவியுடன் தமிழரங்க ஆசிரியர்கள் மீது ஆதரமற்ற அவதூறை பரப்பினார்.

இப்போ குமார் ரூபசிங்கா இப்போ என்ன செய்கிறார் என்று பாப்போம். நோர்வேயில் ஒஸ்லோ சமாதான ஆய்வு மையத்தூடாக (PRIO) தனது அரசியல் லோபியை செய்த குமார் ரூபசிங்காவை நோர்வே அரசு பல கோடி ரூபாய்களை கொடுத்து, சந்திரிக்கா  பண்டாரநாயக்க அரசாண்ட காலத்தில் இலங்கையில் நேரடியாக இறக்கியது. ரூபசின்காவின் தலைமையில்  Foundation for CoExistence (FCE), என்ற INGO கொழும்பில் நிறுவப்பட்டது.

இந்த நிறுவனம் இனங்களுக்கு இடையிலான உறவை வளர்க அரசியல் வாதிகளுக்குள் நல்ல உறவு உருவாக வேண்டும் என்ற கருத்தின் அடிபடையில் "சமாதான" கருத்தரங்குகள் என்ற பெயரில் இலங்கையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் அரசியல் வாதிகளுக்கு இடையிலான சந்திப்புகளை 1995 - 2002 கால பகுதியில் ஏற்பாடு செய்தது. அந்த சந்திப்புகள் அந்திநேர மது மற்றும் கேளிக்கைகளையும்  உள்ளடக்கி இருந்தது.

மண்டையன் என்ற பெயரில் செய்த கொலைகளுக்காக புலிக்கு பயந்து அன்று ஒளித்து திரிந்த   சுரேஷ் பிரேமசந்திரனில் இருந்து சம்பந்தன், சிவாசிலிங்கம், சித்தார்த்தன், ஸ்ரீகரன், ஜூனியர் பொன்னம்பலம் என அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும், சிவராம் தொடக்கம் சில சரிநிகர் பத்திரிகை சார்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் கூட குமார் ரூபசிங்கவின் "கருத்தரங்குகளில் "பங்கு கொண்டனர். அதேபோன்று UNP அரசியல்வாதிகள் பலரும் பங்கு கொண்டனர். இந்த கருத்தரங்குகள் 1999 -2002 ஆம் வருடகாலத்தில் சொகுசு கப்பல்களிலும், சிங்கபூர், தாய்லாந்து, நோர்வே போன்றநாடுகளிலும் நடைபெற்றது. வெளிநாடுகளில் நடைபெற்ற "கருத்தரங்குகளில் "மேல்மட்ட அரசியல்வாதிகள் பங்கு கொண்டதுடன் புலிகளுக்கு நெருக்கமானவர்களும் பங்கு கொண்டனர். இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் மிக முக்கியமாக குறிப்பிட தக்கவர்கள் UNP தலைவர் ரணில் விக்கரமசிங்க ஆகும். இவர் நோர்வேயிக்கு பல தடவைகள் குமார் ரூபசின்காவின் ஏற்பாடில் வந்துள்ளார். இந்த வகை வருகை ஒன்றின் போதே எரிக் சொல்ஹேயம் ஏற்பாட்டின்படி புலிகளின் ஆலோசகர் பாலசிங்கத்துக்கும் (பாலசிங்கம் ஒஸ்லோவில் சத்திர சிகிச்சை பெற்ற பின்) விக்ரமசின்காவுக்கும் இடையில்  உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு ஒன்று Beitostølen /பெய்தேஸ்டோலன் என்ற இடத்தில் நடைபெற்றதாக  கூறப்படுகிறது .

இந்த சந்திப்புகளே பின்னாளில் புலிகளுக்கும் ரணில் விக்கரமசிங்க தலைமையிலான இலங்கைஅரசுக்கும் இடையில், நோர்வே அரசு மதியட்சம் வகிக்க, 2002 யுத்த நிறுத்தத்துடன் தொடக்கி சமாதான ஒப்பந்தம் உருவாக காரணமாக இருந்தது.

இவ்வாறு நோர்வேயின் "வெற்றிக்கு" வழிவகுத்தால் நோர்வே அரசு குமார் ரூபசின்காவின் Foundation for CoExistence (FCE), நிறுவனத்துக்கு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் பணத்தை வாரி இறைத்து. வெளிபடையாக 2004 - 2009 வரை  யான காலத்தில் மட்டும் 35 மிலியன் நோர்வேஜியன் க்ரோனர்கள் Foundation for CoExistence (FCE), இக்கு வளங்கப்பட்டுள்ளது.  1995 - 2004 காலப்பகுதியில் குமார் ரூபசிங்கவுக்கு வளங்கப்பட்ட தொகை இப்போதும் ரகசியமாக உள்ளது .

தற்போது எரிக் சொல்ஹேம், நோர்வேயின் வெளிநாட்டமைச்சர் மற்றும் பத்து நோர்வேஜிய ராஜதந்திரிகள் மீது குமார் ரூபசிங்க, இலங்கையில் வழக்கு தொடர்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்கான காரணமாக, பத்து வருடங்களுக்கு, ஒவ்வொரு வருடமும் கிட்டதட்ட 7 மிலியன் குரோனர் தருவதாக 2004 இல் போடப்பட்ட ஒப்பந்தந்தை நோர்வே அரசு மீறி விட்டதென ரூபசிங்க தரப்பு கூறுகிறது.

ஆனால் நோர்வே அரசோ, ரூபசிங்க பெற்றுகொண்ட பணத்துக்கு சரியாக கணக்கு காட்டவில்லை என கூறுகிறது. உண்மை என்னவெனில், ஒப்பந்தம் போட்டபோது நோர்வே அரசோ, அல்லது ரூபசிங்கவோ எவரும் நினைக்கவில்லை, புலிகள் இவ்வளவு கெதியாக அழிவார்கள் எனவும், நோர்வே இலங்கை அரசியலில் இருந்து புறகணிக்கபடும் எனவும். புலிகளின் அழிவின் பின் நோர்வே அரசுக்கு ரூபசிங்கவின் தேவை இல்லாமல் போய் விட்டது. இப்போ நோர்வே இன்றுள்ள மஹிந்த அரசு சார்பான சக்திகளை மறைமுகமாக தனக்கு சார்பாக வளைக்கும் வேலையை தொடக்கி உள்ள அதேவேளை, சில தமிழ் புலம்பெயர் அரசியல் சார்ந்த இணையங்களையும், ஊடகங்களையும், தனிநபர்களையும் வளர்க்கும் வேலையில் இறங்கியுள்ளது. ஆகவே ஓடமுடியாத குமார் ரூபசிங்க என்ற குதிரையில் பணம் கட்ட நோர்வே தயார் இல்லை.அதேவேளை, குமார் ரூபசிங்க இலங்கை நீதி மன்றத்தில் வழக்கு வைப்பதன் மூலம் "1995 - 2004 வரையான காலத்தில் நடந்த  ரகசியங்களை வெளி கொண்டு வருவேன்" என்ற செய்தியை நோர்வே அரசுக்கு மறைமுகமாக சொல்லி மிரட்டி பணம் பெற முயல்கிறார் என்பதே உண்மை. அத்துடன் இலங்கையில் இன்று நோர்வே மற்றும் மேற்கு  நாடுகள் மீதான  வெறுப்பு மஹிந்த அரசிடமும் மக்களிடமும் பரவியுள்ளதை,குமார் ரூபசிங்க  நோர்வேயை மிரட்ட பாவிப்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம்.

புலிகளின் அழிவின் பின்னணியிலும், இன்று இலங்கையில் உருவாகியுள்ள மஹிந்த பாசிச அரசின் உருவாக்கத்திலும் மேற்கு ஏகாதிபத்தியங்களும், இனவித்தியாசம் இன்றி இலங்கை சேர்ந்த சிங்கள-தமிழ் அடிவருடிகளும் எவ்வாறு இணைத்து செயற்பட்டனர், என்ற ரகசியங்கள் கசிய தொடங்கியுள்ளது. குமார் ரூபசிங்கவின் வழக்கு சரியான முறையில் நடந்தால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம். அப்போது புலிபினாமிகள், அவர்களில் ஊடகவியலாளர்கள், சிங்கள மற்றும் தமிழ் சுதந்திர ஊடகவியலாளர்கள், சிங்கள, தமிழ் அரசியல்வாதிகள், "இடதுசாரி" புத்திசீவிகள் என பலரின் உண்மையான மக்கள் விரோத முகம் எல்லோருக்கும் தெரியவரும். ஆனால் அவ்வாறு நடப்பதை ஆதிக்க சக்திகள் விரும்பமாட்டார்கள். மக்கள் நலம் சார்த்த அரசியல் சக்திகளே இவர்களை அம்பலப்படுத்த வேண்டும்!

29/05/2010