Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையில் மாக்சிய லெனினியக் கட்சியைக் கட்டியெழுப்பல்

மாக்சிய லெனினியக் கட்சி எனும் போது நாம் புரட்சிகர அரசியற் பாதையை முன்னெடுக்கும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியையே கருத்திற் கொள்கிறோம். இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டபோது அது புரட்சிகர அரசியலை மனதிற்கொண்டே உருவானது. அதன் செயற்பாடுகளிற் போதாமைகள் இருந்திருப்பினும், அதை ஒரு மாக்சிய லெனினியக் கட்சியாகக் கருதுவது தவறல்ல.

அன்றைய சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் மாக்சிய லெனினிய இயக்கமாகவே நாம் கருத இயலும். கம்யூனிச இலட்சியத்தையும் நிலைப்பாட்டையும் புரட்சிகர அரசியலையும் போராட்ட அணுகுமுறையையும் கொச்சைப்படுத்தும் முயற்சிகள் எப்போதுமே முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதலாளியத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் சமரசம் காணுகிற போக்கை நாம் ஐரோப்பியக் கம்யூனிஸ்ற் கட்சிகள் பலவற்றினுட் –குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு– காண முடிந்தது. எனினும், உலகின் முதலாவது சோஷலிச அரசான சோவியத் யூனியனில் நவீன திரிபுவாதம் அதிகாரத்திற்கு வந்த பின்பே, உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திரிபுவாதம –அதாவது மாக்சிய லெனினிச மறுப்பு– வெளிப்படையாகத் தலையெடுத்தது. அதற்குச் சோவியத் ஒன்றியக் கம்யூனிஸ்ட் கட்சியும் சோவியத் ஒன்றிய அரசும் ஆதரவாயிருந்தன. கட்சிகளுள் இருந்த மாக்சிய லெனினியர்கள் தமது கட்சிகள் மாக்சிய லெனினியத்திலிருந்து திசை விலகுவதை எதிர்த்து உட்கட்சிப் போராட்டங்களை நடத்தினர். அதன் பயனாகப் பல கட்சிகள் பிளவுண்டன. சில கட்சிகள் உடைவின்றி மாக்சிய லெனினியப் பாதையைப் பின்பற்றின. அரசுகளின் மீது சோவியத் ஆதிக்கம் வலுவாக இருந்த இடத்து, மாக்சிய லெனினியர்கள் கட்சிகளிலிருந்து ஒதுக்கப்பட்டுச் சிறுகுழுக்களாகவே இயங்க முடிந்தது.

லெனினியம், மாக்சிய லெனினியம் என்ற பதங்கள் முதலில் ட்ரொட்ஸ்கியப் போக்குகளிலிருந்து வேறுபட்ட சரியான மாக்சிய நிலைப்பாட்டை அடையாளப்படுத்தப் பயன்பட்டன. எனினும், மாக்சிய லெனினியத்தைக் கொள்கையளவில் ஏற்ற கட்சிகள் யாவும் அன்று தம்மைக் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றே அழைத்து வந்தன. திரிபுவாதப் போக்குகள் குருஷ்சேவிற்கு முன்பிருந்தே பிரித்தானிய, பிரெஞ்சு, இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சிகளுள் தோன்றிவிட்டன. பின்னைய இரு கட்சிகளின் பாராளுமன்ற ஆசனங்களின் வலிமை அதற்கு உதவியது. யூகோஸ்லாவியக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ற்றாலினின் காலத்திலேயே திசை விலகிவிட்டது. எனினும் ரஷ்யப் புரட்சிக்குப் பின்பு, எல்லாக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பேரளவிலேனும் தம்மை மாக்சிய லெனினியக் கட்சிகளாகவே அடையாளப்படுத்தி வந்துள்ளன என்பது முக்கியமானது. இவ்வகையிலேயே, இலங்கையில் மாக்சிய லெனினியக் கட்சிகளின் தோற்றத்தையும் இருப்பையும் கவனிக்க வேண்டும்.

இலங்கையின் இடதுசாரி இயக்கத்தில் வலுவான போக்குக்களை ட்ரொட்ஸ்கிய சமசமாஜக் கட்சியும் தொழிலாளி வர்க்க அடிப்படையைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியும் அடையாளப் படுத்தின. இவ்விடத்து, இடதுசாரிக் கட்சிகள் விவசாயிகளைப் பற்றிக் காட்டிய அக்கறை போதாது என்பது ஏற்கப்பட்ட ஒரு விடயமாகும். கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகளின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியபோதும், விவசாயிகள் மத்தியிலான ஸ்தாபன வேலைகள் காலந்தாழ்த்தியே தொடங்கின. திரிபுவாதத்திற்கு எதிராகச் செயற்பட்ட மாக்சிய லெனினியவாதிகள் 1960களில் விவசாயிகள் மத்தியில் ஒரு வலுவான அமைப்பைக் கட்டியெழுப்ப முனைப்புடன் செயற்பட்டாலும் திரிபுவாதிகளிடமிருந்து பிரிந்த மாக்சிய லெனினியக் கட்சியின் வளர்ச்சி பல்வேறு அகப், புறக் காரணங்களால் தடைப்பட்டது.

பேரினவாதத்தினதும் குறுகிய தேசியவாதத்தினதும் எழுச்சியும் பாராளுமன்ற இடதுசாரிகளான சமசமாஜக்கட்சியும் திரிபுவாதக் கம்யூனிஸ்ட் கட்சியும் படிப்படியாகப் பேரினவாதத் தேசிய முதலாளியத்துடன் செய்து வந்த சமரசங்களும் இடதுசாரி இயக்கத்தின் சரிவிற்கு அளித்த பங்கு பெரிது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை திரிபுவாதப் பாதையைத் தெரிவு செய்தபோதும், கட்சிக்குள் மாக்சிய லெனினிசம் வலுவான ஒரு போக்காக இருந்ததனாலேயே, கட்சியிற் பிளவு ஏற்பட்ட போது, பெரும்பாலான தொழிற்சங்க உறுப்பினர்களையும் கட்சி உறுப்பினர்களில் அரைவாசிப் பேரையும் செயற்குழுவிற் கணிசமானோரையும் மாக்சிய லெனினியப் பிரிவுடன் கொண்டு செல்ல முடிந்தது. மாக்சிய லெனினியத்தை ஏற்கக் கூடியவர்களை அணிதிரட்டுவதில் தோழர் சண்முகதாசனின் பங்கு முக்கியமானது என்பதில் ஐயமில்லாத போதும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் மாக்சிய லெனினியச் சிந்தனை வலுவாக இருந்திராவிடின் தனி ஒருவரால் ஒரு பெருந்தொகையினரை வென்றெடுத்திருக்க இயலாது என்பதுங் கவனிப்பிற்குரியது.

1964இல் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவு ஒரு கடும் உட்கட்சி விவாதத்தின் பின்பு நிகழ்ந்தது என்பதும் இங்கு கவனிக்க உகந்தது. பிற்காலங்களில் மாக்சிய லெனினியக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகளில் பல, முறையான விவாதமின்றியும் குழு மனப்பான்மையாற் தூண்டப்பட்டும் நிகழ்ந்தன. அவ்வாறு பிளவு கண்;டவர்கள் சீரழிவு அரசியலுக்கு இரையானதையும் தனிமைப்பட்டு அடையாளமிழந்ததையும் கண்டுள்ளோம். 1966இல் விஜேவீர பேரினவாத அரசியலை முன்னெடுத்தது போல 1970களின் முற்பகுதியிற் பிரிந்துபோன சிலர் குறுகிய தேசிய அரசியலை முன்னெடுத்தனர்.

1964க்குப் பின்னர், 1978இல் மட்டுமே கம்யூனிச இயக்கத்தினுள் முறையான ஒரு உட்கட்சி விவாதத்தின் அடிப்படையிற் பிளவு ஏற்பட்டது. இப் பிளவு நேர்ந்தபோது நாடாளவிய முறையில் மாக்சிய லெனினிய அரசியல் மட்டுமன்றி இடதுசாரி அரசியல் முழுவதுமே மிகவும் பலவீனப்பட்டிருந்ததையும் நாம் அறிவோம். எனினும், இப் பிளவின் பயனாக உருவான கம்யூனிஸ்ட் கட்சி (இடது) –இப்போது புதிய-ஜனநாயக மாக்சிய-லெனினிசக் கட்சி– இன்றுவரை 1960களில் தான் வரித்துக்கொண்ட மாக்சியம்-லெனினியம்-மாசேதுங் சிந்தனை எனும் சமகால மாக்சிய லெனினிய நிலைப்பாட்டினின்று பிறழாமல் இருப்பது நோக்கத்தக்க விடயமாகும். தோழர் சண்முகதாசனுடன் சென்றவர்களும், சண்முகதாசனின் மறைவின் பின்பான செயலின்மையால் நடைமுறை அரசியலிருந்து ஒதுங்கினார்களே ஒழியச் சந்தர்ப்பவாதப் பாதையை முன்னெடுக்கவில்லை. எனினும், அண்மைக் காலங்களில் “மாஓவாத இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி” என்ற அக் கட்சிப் பேரை ஒரு தனிமனிதர் துஷ்பிரயோகம் செய்வது கவலைக்குரியது.

இலங்கையில் சிங்களவர்களிடையே மாக்சிய லெனினியர்;கள் உள்ளனர். எனினும் அவர்களால் இதுவரை ஒரு மாக்சிய லெனினிய அமைப்பாகச் செயற்பட இயலாதுள்ளது. இவர்களிற் சிலர் ஜே.வி.பியிலிருந்து விலகி வந்தோர். வேறு சிலருக்கு ஏலவே ஒரு மாக்சியப் பின்னணி இருந்துள்ளது. 1977இல் இடதுசாரிக் கட்சிகள் தேர்தலில் சந்தித்த தோல்வியினின்று மீள முடியாதவர்களாகவே தென்னிலங்கை இடதுசாரிகள் இருப்பதும் தென்னிலங்கை இடதுசாரி அரசியலில் இன்னமும் தொடரும் ட்ரொட்ஸ்கியப் பாதிப்பும் நம் கவனத்திற்குரிய குறைபாடுகள். அனைத்திலும் முக்கியமாகப் பேரினவாத அரசியல் 1977க்குப் பின்பு கடுமையான இன ஒடுக்கலாகவும் போராகவும் வடிவெடுத்த சூழ்நிலையில், பேரினவாதத்தைக் கடந்து இடதுசாரி அரசியலை முன்னெடுப்பது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.

எனவே, நாடளாவிய முறையில் ஒரு மாக்சிய லெனினியக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான கொள்கையளவிலான வழிகாட்டலை எழுபது வருடக் கம்யூனிஸ்ட் பாரம்பரியத்தில் வந்ததும் திரிபுவாதத்தை நிராகரித்து நாற்பத்தெட்டு ஆண்டுகளாக மாக்சிய லெனினியத்தையும் புரட்சிகர மார்க்கத்தையும் விடாது வலியுறுத்தி வருவதும் மாக்சிய லெனினியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கள் இருந்த தவறுகளை உட்கட்சி விவாதத்தின் மூலம் களைந்து கடந்த முப்பத்துநான்கு ஆண்டுகளாக நெறிபிறழாது இயங்கிவரும் இலங்கையின் ஒரே மாக்சிய லெனினியக் கட்சியிடமிருந்தே எதிர்பார்க்க இயலும்.

இலங்கையின் யதார்த்தமான சூழல், பரந்துபட்ட ஐக்கிய முன்னணி ஒன்றைக் கட்டியெழுப்புவதன் மூலமே சமூக மாற்றத்தைக் கொண்டுவர இயலும் என உணர்த்துகிறது. அத்துடன் உலக நிலவரங்களையும் இலங்கை பின்தங்கிய முதலாளிய வளர்ச்சியடையதும் பிரபுத்துவ சிந்தனைக்கு உட்பட்டதம் நவகொலனிய ஆதிக்கத்தைக் கொண்டதுமான ஒரு நாடு என்பதையுங் கணிப்பில் எடுக்கும் போது, சோஷலிசத்தை நோக்கிய நகர்வு முதலில் சனநாயகப் புரட்சியின் கடமைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதுடன் அந்தச் சனநாயகப் புரட்சி முதலாளிய சனநாயகத்திற்கானதல்ல எனவும் அதேவேளை சோஷலிச இலக்குக்களை நிறைவேற்றும் மக்கள் ஜனநாயகமாக அமைவது கடினம் எனவும் விளங்கும். எனவே புதிய ஜனநாயகத்திற்கான புரட்சிகர வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பதன் மூலமே ஏகாதிபத்தியத்தையும் அதன் கூட்டணிகளான உள்ள பேரினவாத முதலாளிய சக்திகளையும் முறியடித்துத் தொழிலாளர்-விவசாயிகள்-மீனவர் உட்பட்ட அனைத்து உழைக்கும் மக்களதும் அதிகாரத்தை நிறுவ இயலும் என்பதும் தெளிவாகிறது.

எனவே பரந்துபட்ட ஐக்கிய முன்னணி என்பது, புதிய ஜனநாயகப் புரட்சி எனும் இலக்கை மனதிற் கொண்டு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது. அத்தகைய முன்னணி ஒன்றிற் செயற்படுவதன் மூலமே ஒரு மாக்சிய லெனினியக் கட்சி தன்னை வலுப்படுத்திப் புரட்சிக்குத் தலைமை தாங்க இயலும்.

கடந்த முப்பதாண்டுகட்கும் மேலாகப் போர், பயங்கரவாதம் என்பனவற்றைக் கருதித் தமது அன்றாடப் பிரச்சனைகளிலிருந்து கவனம் திரும்பியிருந்த சிங்கள மக்கள் இப்போது போரில் வெற்றி என்ற மயக்கத்திலிருந்து விடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறே விடுதலைப் புலிகளை மையப்படுத்திய தமிழ் தேசிய அரசியலின் ஆதிக்கம் சிதைந்து வருகிறது. இந்த உடைவுகள் இன்னொரு பேரினவாதத்தினதும் இன்னொரு குறுந்தேசியவாதத்தினதும் எழுச்சிக்கு வழிகோலாத விதமாகப் புதிய ஜனநாயகப் புரட்சிக்கான இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

எந்தப் புரட்சிகரக் கட்சியும் கட்டியெழுப்ப முனையும் ஐக்கிய முன்னணியும் அடிப்படையான விடயங்களில் சந்தர்ப்பவாதச் சமரசங்கட்கு இடமளித்தால், அது, முடிவில், அந்த ஐக்கிய முன்னணிக்கும் அதைக் கட்டியெழுப்ப முனையும் புரட்சிகரக் கட்சிக்கும் கேடாகவே அமையும். இது வரலாற்றில் நாம் பன்முறை கண்ட உண்மை.

நிச்சயமாக, நாட்டில் உள்ள ஒரே மாக்சிய லெனினியக் கட்சியையும் பிற மாக்சியவாதக் குழுக்களையும் தனிமனிதர்களையும் ஒரு அணிக்குட் கொண்டுவரும் முயற்சியும் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியின் நோக்கங்களுடன் பொருந்தி வருகிறது. எனினும், எந்த ஐக்கிய முன்னணியும் பேரினவாதம், குறுந்தேசியம், தரகு முதலாளியம், ஏகாதிபத்தியம், அந்நிய மேலாதிக்கம் என்பனவற்றுடன் எவ்விதமான சமரசத்திற்கும் இடமில்லாதவாறு அமைவது அதி முக்கியமானது.

மாக்சிய லெனினியவாதிகளையும் அமைப்புக்களையும் எதிர்நோக்கும் பணி பெரியது. அது கடினமானதுமாகும். ஆனால் நிலைமைகள் சாதகமாக மாறத் தொடங்கியுள்ளன. நேர்மையும் நிதானமும் நல்ல சக்திகளை அரவணைத்துச் செல்லும் ஆற்றலுமே அந்த நிலைமைகளைச் சரிவரப் பயன்படுத்த உதவுவன.

சி. சிவசேகரம்