Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யதார்த்தம் உண்மைகள் குறுகிய இனவாத உணர்வுகளுக்குள் உள்வாங்கப்படுகின்றன!

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்:    22-02-2011

யதார்த்தம் உண்மைகள் குறுகிய இனவாத உணர்வுகளுக்குள் உள்வாங்கப்படுகின்றன!

மகிந்தாவிற்கு புற்றுநோயாம்!

யாழ்ப்பாணத்தில் 70.ம் ஆண்டுக் காலகட்டத்தில் ஓர் வாரப்பத்திரிகை (மக்கள் குரல்) வெளிவந்தது. அது சில அர்த்தமற்ற செய்திகளை வெளியிட்டு, இது "மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றது" என ஒரு போடு போடும். இப்பாங்கில் புலம் பெயர்வில் சில இணைய தளங்கள். மகிந்தா கடைசியாக அமெரிக்கா சென்றபோது பல ஊடகங்களுக்கு பல ஊகங்கள். இதில் சில மகிந்தாவிற்கு "மாற்றமுடியா" வியாதியொன்று அதனாலேயே அமெரிக்கா சென்றார் என்றாக்கின. இது உச்சகட்டமாகி கடந்த வாரம் மகிந்தாவிற்கு (எங்கேயோ)  புற்றுநோய் என ஓர் போடு போட்டது ஓர் இணையதளம். அப்படியில்லையென அவர் 'பூரண சுகதேகிதான்' என மகிந்தா தேகப்பயிற்சி செய்வதைக் கூட படம் போட்டுக் காட்டின சில ஊடகங்ககள். மகிந்தா நோயாளியா? சுகதேகியா? என்பது ஒருபுறமிருக்க,

அவரை கொடும் நோயாளியாக்கி, சாகடித்து ஆசைகாண முற்படுகின்றன சில ஊடகங்களும், அதன் தமிழ்த்தேசியவாதிகளும். இவர்கள் இந்நோக்கில் செய்வினை சூனியக்காரர்களின் உதவியையும் நாடினால் என்ன…..? மகிந்தா சாகடிக்கப்பட வேண்டியவரா? .இலங்கையின் அரசியல் இருந்து அப்புறப்படத்தப்பட  வேண்டியவரா?.  கடந்த 30.ற்கு மேற்பட்ட ஆண்டுகளில் தமிழ்த்தேசிய அரசியலின்  தாற்பரியம் மலிவாக அரசியல் எதிரிகளை உருவாக்கியதும் சாகடிப்பு கலாச்சாரம் செய்ததும் தான். இதை அல்பிரட் துரையப்பா முதல் அமிர்தலிங்கம் வரையிலான பெரும் பட்டியலே இடலாம். இப்போ அதில்லா வெற்றிடத்தில், அவ்வுணர்வுகள் அரசியல் எதிரிகளை கொடும் நோயாளிகளாக்கி சாகடிக்கின்றது.  உண்மையில், சாராம்சத்தில், இதவும் தமிழ்த்தேசிய அரசியலின் மனநோய்தான்.மகிந்தாவும், அவரின் குடும்ப சர்வாதிகார அரசியலும் ஏகப் பெரும்பான்மையான சிங்கள, தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குகின்றது. இதனால் அவரும், அவரின் அரசும் இம்மக்களின் பிரதான எதிரியே!. இதற்காக மகிந்தா சாகடிக்கப்படுவது, இம்மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாகுமா?.  இங்கே தான் அரசு, அரச இயந்திரம், மக்கள், மக்கள் போராட்டம் பற்றிய புரிதல்கள் தேவை. கடந்தோர் மாத காலமாக துனீசியில், எகிப்தில், லிபியாவில் போராடும் மக்களின் வெகுஐன எழுச்சிப் போராட்டங்கள் எதைத்தான் சுட்டி நிற்கின்றன. மகிந்தா  போன்ற சர்வாதிகார ஆட்சியதிகாரிகளை சாகடிப்பதற்கல்ல.  இவர்களை அப்புறப்படுத்தவே.  இவ்வெழுச்சிப் போராட்டங்களால் தான் அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் தேவைகளை, அபிலாசைகளை, ஏன் தம் சொந்த அரசியல் அதிகாரத்தைக் கூட  நிலை நிறுத்தலாம். இதுவே எம் நாட்டு மக்களின் தேவையுமாகும். இதைத் தான் தமிழ்த்தேசிய அரசியலாளர்களும் செய்யவேண்டும். செய்வார்களா?.

மீனவர்கள் பிரச்சினையில்….

 

இலங்கை- இந்திய மீனவர்கள் பிரச்சினை சமகால பெரும் பேசும் பொருளாகியுள்ளது. இதற்குள் உள்ள யதார்த்தம், உண்மைகள் குறுகிய இனவாத உணர்வுகளுக்கு உள்ளானவர்களின் அரசியலுக்குள்ளும் உள்வாங்க்கப்பட்டுள்ளது.. இவ்வுணுர்வு (மயக்க) நிலைக்குள்ளானவர்களை  சமூக விஞ்ஞானக் கண்ணோட்டமுடையவர்கள், உண்மையை உணர்ந்தவர்கள் சரியானதை சொல்லி தட்டி எழுப்பியுள்ளார்கள். உண்மையான தூக்கக்காரர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குபவர்கள் போல் உள்ளவர்களை….? இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினைக்குள் உள்ள யதார்த்த அரசியல்தான் என்ன? "அரசுகள், பெருமுதலாளிகள், பன்னாட்டுமுதலாளிகள் சார்பாக குறுந்தேசியம் பேசும் சக்திகள் தெரிந்தோ, தெரியாமலோ பேசுகின்ற போது, ஏழை சிறுமீனவர்களினதும், இயற்கையினதும் சார்பாக புதிய ஜனநாயக மக்கள் முன்ணணி குரல் கொடுக்கின்றது."

"இலங்கை பாசிச அரசின் தமிழக மீனவர்கள் கொலையை அறிக்கை கண்டிக்கிறது. தமிழ் நாட்டு பெருமுதலாளிகள் இந்திய கடற்கரைகளை சுரண்டி முடித்து விட்டு இலங்கை கரைகளிற்கு சுரண்ட  வருவதையே அறிக்கை எதிர்க்கின்றது. இதை புரிந்து கொள்ளுவதற்கு தோழர்களிற்கு என்ன குழப்பம் என்று எனக்கு விளங்கவில்லை." இது வினவுதள வாசகர் ஒருவரின் பின்னோட்டக் குறிப்பும், கேள்வியும்.

இங்கே குழப்பம் மாக்சிஸ லெனினிசத்தை ஸ்தூலநிலைக்கேற்ப எப்படி பிரயோகிப்பது என்பபதிலேயே.  மரபான வரட்டுத்தனம் கொண்ட மார்க்சிஸப்பார்வை பிரச்சினைகளை சரியானதின் பக்கம் திரும்பி பார்க்கவிடாது. இதில் தான் குழப்பமும் முரண்பாடும். மீனவர் பிரச்சினையில் இறையாண்மை, எல்லையைத் தாண்டிச் செல்வது போன்றவைககள் பிரதான காரணிகொண்டு சுட்டி நிற்கின்றது. இதை இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் பிரதான முரண்பாடான குடியேற்றத்திற்கு ஊடாக பார்ப்போம்.

கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக சிங்களப் பேரினவாதம், தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை செய்து வருகின்றது. அதில் குடியேறுபவர்கள் சாதாரண சிங்கள மக்களே. இதில் தமிழத் தேசியம் எல்லைகள் தெரியாது எல்லை தாண்டிக் குடியேறும் சிங்ககள மக்களை, தமிழ் மக்களின் பிரதான எதிரியாகவும், மாக்சிஸ லெனினிஸவாதிகள் சிங்களப் பேரினவாதத்தை பிரதான எதிரியாகவும் கணிக்கின்றனர். இதில் தமிழ் மக்களின் இறையாண்மையை வலியுறுத்தி, எல்லை தாண்டிய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை எதிர்க்கின்றனர். இங்கே தான் தேசிய இனப்பிரச்சினையின் குறுகிய இனவாத கண்ணோட்டத்திற்கும், பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்திற்குமான வேறுபாடுகளிலான உணர்வுகள் உண்மைகள் வெளிப்படுகின்றன.

இந்நோக்கில் புதிய ஐனநாயக மக்கள் முன்னணியின் அறிக்கை சாதாரண இலங்கை இந்திய உழைக்கும் மீனவர்களின் அபிலாசைகளை, இவர்களின் அவலவாழ்வை உள்ளடக்கியுள்ளது. இதில் இறையாண்மை என்பதும் ஒடுக்கப்பட்ட  மக்களின் சர்வதேசியத்தின் பாற்பட்டதேயன்றி, பேரினவாத "மகிந்த சிந்தனை" அல்லது இந்திய மேலாதிக்க விஸ்த்தரிப்பின் பாற்பட்டதல்ல. எனவே இதற்குள் உள்ளது  சமூக விஞ்ஞானக் கண்ணோட்டமுள்ள வர்க்க அரசியல். இதை சரியான மாக்சிஸக் கண் கொண்டு பார்த்தால், அதில் விஞ்சி நிற்பது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலாகும். தவிர்த்தால் மிஞ்சுவது இனவாத உணர்வு கொண்ட அரசியலே!

அகிலன்

22/02/2011