Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சீமானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்க முடியும் !!

 
இலங்கைத் தமிழர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்காமல் சீமான் போன்ற இனவெறியர்கள் ஓயப்போவதில்லை. இலங்கைத் தமிழர்களிற்காக குரல் கொடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு இலங்கையின் யதார்த்தம், புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் உள்ள உலக அரசியல் நிலைமைகள் என்பவற்றை பற்றிய எந்தவிதமான அறிவுமின்றி இவர்கள் ஊளையிடுகிறார்கள். இந்தியாவில் ஒரு பலவீனமான மத்திய அரசு அமையும் போது சரியாக அதே நேரம் தமிழ்நாட்டில் ஈழ மக்களிற்காக குரல் கொடுக்கும் இலட்சிய வெறி கொண்ட ஒருவனின் கீழ் முப்பத்தொன்பது பாராளுமன்ற ஆசனங்களும் கிடைத்தால் அந்த பலவீனமான மத்திய அரசை மிரட்டி அந்த இலட்சிய வேங்கை இலங்கைத் தமிழ் மக்களிற்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்குமாம்.
 
"நல்ல காலம் பிறக்கப் போகுது" என்று குடுகுப்பைக்காரன் சொல்வது போல இருக்கிறதா?. என்ன செய்ய தமிழனின் தலையெழுத்து அப்படி. அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் மகிந்தாவை தண்டித்து தமிழ் மக்களிற்கு தீர்வை பெற்றுத் தருவார்கள் என்று நாடு பாய்ந்த  பிரதமரும், மந்திரிகளும் சொல்கிறார்கள். பிரேமானந்தாவின் அருளாசி பெற்ற முதலமைச்சர் "இந்தியா அன்றி அணுவும் அசையாது, அவர்கள் மகிந்தாவை அசைத்து இலங்கைத் தமிழர்களிற்கு அதிகாரங்களை பெற்றுத் தருவார்கள் என்கிறார். இலங்கையில் ஒரு கும்பல் "ஏன் அங்கே இங்கே என்று திரிகிறீர்கள், உலகமே மகிந்தா தானே, மகிந்தாவை சுற்றி வந்தால் அவரே எல்லாம் தருவார்" என்று மகிந்தாவின் பின்பக்கத்தை கழுவுகிறார்கள்.
 
இவர்கள் எல்லோருக்கும் ஒரே நோக்கம் தான் யாரைப் பலியிட்டும் பணமும், பதவியும் பெறுவது தான் இவர்களின் ஒரே குறிக்கோள். கணவனைப் பறி கொடுத்த பெண்கள், தாய், தந்தையரை பறி கொடுத்து விட்டு யாருமற்று தனித்து விடப்பட்ட பெண்கள், குடும்பத்துடன் இருந்தாலும் வருமானம் இன்றி வறுமையில் வாடும் பெண்கள் என்று ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த கொடூரமான யுத்தத்தாலும், இலங்கை அரசின் புதிய பொருளாதார கொள்ளையினாலும் வீதிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் உடலை விற்று பிழைக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். சீமான்  அந்த பெண்களின் துன்பவாழ்வை சிங்களவனிற்கு உடலை விற்று பிழைக்கிறார்கள் என்று களங்கப்படுத்துகிறார். 
 
புலிகள் இயக்கம் ஒரு வலதுசாரி அமைப்பு. அது என்றைக்குமே முற்போக்கு, மார்க்சிச அரசியலை பேசியதில்லை. ஆனால் அதன் அடித்தளம் மார்க்சிச அரசியல் விஞ்ஞானத்தின் விளக்கத்தை, உண்மையை எடுத்து சொல்கிறது. புலிகளின் பெரும்பாலான போராளிகள் வன்னியின் ஏழை மக்கள். இனக்கலவரத்தின் போது மலையகத்தில் இருந்து வன்னிக்கு இடப்பெயர்ந்து வந்த மலையகத் தமிழ்மக்களின் பிள்ளைகள். இழப்பதற்கு எதுவும் இல்லாத ஏழை மக்களே போராடுவார்கள் என்ற மார்க்கசிய வரிகளின் எடுத்துக்காட்டுகள். இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் அவர்கள். இன்று ஆயுதப்போர் முடிந்த பிறகு வாழ்க்கைக்கான போரில் அலைகடல் துரும்பாக அவதிப்படுபவர்கள் அவர்கள். நடராசன் என்ற நாயுடனும், வைகுந்தராசன் என்னும் கனிமவள கொள்ளைக்காரனுடனும் சேர்ந்து நிற்கும் சீமான் சொல்கிறார் மலையக தமிழ்மக்கள் ஈழப்போராட்டத்தில் நிற்கவில்லையாம்.
 
வெளிநாட்டு உளவுநிறுவனங்களுடன் தொடர்புகள் வைத்திருக்கிறார்கள் பராக் ஒபாமா, டேவிட் கமரோன் போன்ற ஆயுதவியாபாரிகளை நம்பச் சொல்கிறார்கள். சோனியாவின் கண்களில் இலங்கைத் தமிழ்மக்களை நினைத்து ஈரம் இருக்கிறது என்றார்கள். பம்பாயில் பிழைப்புத் தேடி, தொழில் தேடிச் சென்ற தமிழ், மலையாள தொழிலாளிகளை எதிர்த்து சிவசேனா தொடங்கிய பால் தக்கரே என்ற என்ற இந்துத்துவ வெறியன் இலங்கைத் தமிழ்மக்களின் நண்பன் என்றார்கள். குஜராத்தில் முஸ்லீம் மக்களைக் கொன்ற நரேந்திர மோடி தான் தமிழ்மக்களின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் என்கிறார்கள். இப்படி மக்கள் விரோதிகளுடன் கூடிக் குலாவும் புலம்பெயர் தமிழ்தேசிய வியாபாரிகளை தேசபக்தர்கள் என்று சொல்லுவதனால் சீமானிற்கு இலாபம் இருக்கிறது. ஏழை மலையக மக்களை போராளிகள் என்று சொல்லுவதனால் என்ன ஆதாயம் இருக்கப் போகிறது.
 
ஜீ.ஜீ.பொன்னம்பலம், செல்வநாயகம் போன்றவர்கள் உலக வல்லரசுகளுடனும், சிங்கள பெருந்தேசியவாதிகளுடனும் சேர்ந்து செய்த அரசியலைத் தான் இவர்கள் போன்றவர்கள் ஜனநாயக, அகிம்சை அரசியல் என்கிறார்கள். அதன் அடுத்த கட்டமான ஆயுதப் போராட்டமும் மறுபடியும் உலக வல்லரசுகளுடன் மர்ம விளையாட்டுக்கள் விளையாடி மறைந்து போனது. தமிழ் தலைமைகளின் அகிம்சை அரசியலும், ஆயுத அரசியலும் பாடி ஸ்ராங் போல காட்டி கொண்டாலும் வல்லரசுகளின் பின்னால் போகும் வீக்கான அத்திவாரத்தை கொண்ட ஒரே மாதிரியான கட்டிடங்கள். மக்களை நம்பாத ஒடுக்கப்படும் மக்களை இணைத்து போரிடாத எந்த போராட்டமும் எதிரிகளால் சுலபமாக அழித்து ஒழிக்கப்படும் என்பதை இவர்கள் ஒருபோதும் உணர்ந்து கொள்வதில்லை. அதனால் தான் மறுபடியும் முதலிலே இருந்து தொடங்குகிறார்கள். பலவீனமான இந்திய மத்திய அரசை இலட்சிய வேங்கை வேட்டையாடப் போகுது என்று அவரது தமிழ்ப்படங்களை போலவே லூசுத்தனமாக ஒரு கதை சொல்கிறார். 
 
ஜெயலலிதாவின் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று அண்ணன் அவவின் காலில் விழுந்து பார்த்தார். ஜெயலலிதா இவரை கவனித்ததாக தெரியவில்லை. பின்பக்கத்தை கீழே எவ்வளவு கொண்டு போக முடியுமோ அவ்வளவுக்கு கீழே கொண்டு போய் ஜெயலலிதாவின் காலில் விழுந்து பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆகி விட்டார்.  ஒழுங்காக ஒரு வசனம் பேசத் தெரியாதவன் எல்லாம் முதல் மந்திரி ஆகும் போது லவுட்ஸ்பீக்கரை விழுங்கியது போல கதறும் அண்ணன் சீமான் முதலமைச்சர் ஆகாமல் இருக்கிறாரே. அதனால் தான் தமிழ்நாட்டின் முப்பத்தொன்பது பாராளுமன்ற தொகுதிகளையும் ஒரு இலட்சிய வேங்கை ஒரு நாள் அடிச்சுப் பிடிக்கும் என்று உறுமுகிறார். பாவம் அவரும் எவ்வளவு நேரம் தான் வலிக்காதது மாதிரியே நடிக்க முடியும்