Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கொல்லவரும் கூடன்குளம் அணு உலைகள்!!

தென்னிந்தியாவின் கிழக்கு கரையோரத்தில் கூடன்குளம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அணுஉலைகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. கூடங்குளத்தை அண்மித்த பிரதேசங்களிலும் தென்னிந்தியாவிலும் கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இலங்கையிலும் கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான பிரச்சாரங்கள் மெல்ல மெல்ல வலுப்பெற்று வருகின்றன. இவற்றிற்கு மத்தியில் கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்படும் இரண்டு அணுஉலைகளில் ஒன்றின் நிர்மாணப் பணி நிறைவிற்கு வந்துள்ளமை பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

அணு என்றால் மேலும் பிரிக்க முடியாதது என்று அர்த்தம். ஒரு பொருளை மேலும் மேலும் பிரிக்கும் போது, ஒரு கட்டத்தில் மேலும் பிரிக்க முடியாத கண்ணுக்கு தெரியாத சிறு துணிக்கை பெறப்படும். இவ் கண்ணுக்கு தெரியாத மேலும் பிரிக்க முடியாத சிறு துணிக்கையே சகலதையும் உருவாக்கும் அடிப்படை அலகான அணு ஆகும். இவ் அணுவை சில தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பிளக்கும் போது பெருமளவிலான அழுத்தசக்தியும், கதிர்வீச்சும், வெப்பமும் வெளிவரும் என ஐன்ஸ்டின் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார்.

யுரேனியம், தோரியம் போன்ற சில மூலகங்களின் அணுக்களை பிளக்கும் போது வெளிவரும் ஆற்றல் மிக அதிகமானதாகும். இவ்வாறு அணுவை பிளக்கும் போது வெளிவரும் ஆற்றலை நாசகார அழிவை ஏற்படுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்துவதே அணு குண்டாகும். அதே அணுப்பிளவை பாரிய அணுஉலை ஒன்றினுள் சிறிது சிறிதாக நிகழ செய்து வெளிவரும் ஆற்றலை கட்டுபடுத்திகளை பயன்படுத்தி மட்டுபடுத்தி பயன்படுத்தின் மூலம் மின்னுற்பத்தி செய்தல் அணுஉலையினுள் நடைபெறும், அணுபிளவின் போது வெளிவரும் கதிர்வீச்சு மிக அபாயகரமானதாகும். அவ் கதிர்வீச்சின் தாக்கத்திற்குள்ளானால் மரணம் ஏற்படும், புற்றுநோய்க்கு ஆளாக நேரிடும். நுரையீரல் வீக்கம், எலும்பு மூட்டுக்கள் தேய்வடைதல், பரம்பரை அலகுகள் பாதிப்பிற்குள்ளாதல், பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாக பிறத்தல், விகாரமான குழந்தைகள் பிறத்தல் என ஏராளமான கேடுகளை கதிர்வீச்சு உருவாக்கும். மிருகங்கள் கூட இந்த பாதிப்பிலிருந்து தப்பி பிழைக்க முடியாது.

இவ்வாறான ஆபத்தான கதிர்வீச்சை வெளிவிடும் அணுஉலைகளே கூடன்குளம் பிரதேசத்தில் அமைக்கப்படுகின்றன. அணு உலைகளிலிருந்து வெளிவரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கதிர்வீச்சின் பாதிப்பின் காரணமாக அணுஉலைகள் அமைக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து 1 கிலோமீற்றர் தூரத்திற்குள் பாதுகாப்பு கவசமணிந்த அணுஉலை ஊழியர்களை தவிர வேறுயாரும் உட்ச்செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். 5 கிலோமீற்றர் தூரத்திற்குள் குடியிருப்புக்கள் அமைக்கப்படல் தடைசெய்யப்பட்டிருக்கும். 18 கிலோமீற்றர் தூரம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். கூடன்குளத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தூரம் 225 கிலோ மீற்றர்கள் தான். 450 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்திற்குள் முழு இலங்கையும் உள்ளடங்கிவிடும். அத்துடன் கூடன்குளம் கரையோரத்தில் அமைந்துள்ள பிரதேசம். ஆகவே கடல் மூலம், காற்றின் மூலம், மீன்களின் மூலம், பறவைகள் மூலம் மிக இலகுவாக, அணுஉலைகளிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு இலங்கையின் பக்கம் கடத்தப்படலாம். கூடன்குளம் பிரதேசம் காற்றின் வேகம் கூடிய வங்காளவிரிகுடா பிரதேசத்தில் அமைந்திருக்கின்றது. ஆகவே காற்றின் மூலம் இலகுவாக கடத்தப்படலாம். கூடன்குளம் அணுஉலைகளில் பயன்படுத்தப்படும் நீர்கடலிற்குள் விடப்படும். அணுஉலைகளிலிருந்து வெளிவிடப்படும் கதிர்வீச்சுடைய நீரினால் கடலும் கடல் வாழ் உயினங்களும் கதிர்வீச்சு தாக்கத்திற்குள்ளாகும். இது இலங்கையின் மேற்குகரை வாழ் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு வந்து செல்லும் கோடிகணக்கான பறவைகளில் பெரும் எண்ணிக்கையான பறவைகள் கூடன்குளம் பிரதேசத்தினூடாகவே வந்து செல்கின்றன. இவ் பறவைகள் சிறிய அளவிளான கதிர்வீச்சை இலங்கைக்கு காவி வந்ததென்றால் நாமும் கதிர்வீச்சு தாக்கத்திற்குள்ளாக வேண்டிவரும்.

கூடன்குளம் அணுஉலைகள் அமைக்கப்பட்டால், மேற்சொன்ன பாதிப்புகளுக்கு நாம் முகம் கொடுத்தே ஆக நேரிடும். இதற்கும் மேலாக அணுஉலையில் சிறு விபத்து நிகழ்ந்தாலும் வெளிவரும் கதிர்வீச்சு நொடிபொழுதில் ஏராளமானவர்களை கொன்று விடும். அணுஉலைகளில் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவும், இயற்கை அனர்த்தங்கள் காரணமாகவும் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. கூடன்குளம் பிரதேசம் பூகம்ப அனர்த்தம் மற்றும் சுனாமி ஆபத்துடைய பிரதேசமாகும்.

அனர்த்தம் ஏற்படாது என்ற குருட்டு நம்பிக்கையிலேயே அணுஉலைகள் கட்டப்படுகின்றன. 1987ம் ஆண்டு ரசியாவின் சேர்னோபில் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த அணுஉலையில் ஏற்பட்டவிபத்தின் காரணமாக 5 லட்சம் மக்கள் மரணத்தை தழுவினார்கள்.

விபத்து நடந்த இடத்திலிருந்து 5000 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் சுவீடன் நாடு கூட சேர்னோபில் அணுஉலை விபத்தினால் பாதிக்கப்பட்டது. 25 வருடங்கள் கடந்த பின்னும் இன்னும் அங்கு பாதிப்புக்கள் தொடருகின்றன. சேர்னோபில் அணுஉலைகளை உருவாக்கிய ரசியாவின் தோல்வியடைந்த தொழில்நுட்பமே, ரசியாவின் துணையுடன் கூடங்குளத்தில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் அணுதொழில் நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஜப்பான் நாட்டின் புககுசிமா என்ற இடத்தில் அமைந்நிருந்த அணுஉலையில் ஏற்ப்பட்ட விபத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் பேர் மரணித்தார்கள். 80000 பேர் புற்றுநோய்க்கு ஆளானார்கள்.

நவீன தொழில் நுட்பத்திற்கே இந்த நிலை என்றால் 30 வருடம் பழமையான தோல்வியடைந்த தொழில்நுட்பம், தலைமாட்டில் அணுகுண்டை வைத்திருப்பதிற்கு சமமானது. மேலும் புககுசிமா அணுஉலை விபத்தின் பின் ஒன்றறை வருடங்கள் கடந்து அவ்விடத்திலிருந்து 750 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருந்த வயல்களில் விளைந்த நெற்களில் கூட கதிர்வீச்சு காணப்பட்டது. கூடன்குளத்திலிருந்து முழு இலங்கையும் 450 கிலோமீற்றர் தூரத்திற்குள் உள்ளடங்கிவிடுகிறது.

ஆகவே அணுஉலையில் சிறு விபத்து ஏற்பட்டாலும் அதன் நேரடி தாக்கத்திற்கு நாம் ஆளாக நேரிடும். அணுஉலைகளில் இதுவரை வெடிப்புக்கள் நிகழ்ந்ததில்லை. வெடிப்பு என்பது அணுகுண்டு வெடிப்பதற்கு சமனானதாகும். வெடிப்பு நிழ்ந்தால் இலங்கையில் புல் பூண்டுகள் கூட எஞ்சாது.

கூடன்குளம் அணுஉலைகள் எமக்கு பெரும் ஆபத்தை தோற்றுவித்துள்ள போதும், இலங்கை அரசாங்கமோ எதிர்ப்பை தெரிவிக்காமல், அணுஉலைகளினால் பாதிப்பேதும் ஏற்பட்டால் அதற்கான நட்டயீட்டை பெற பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. எனவே, மக்கள் நலன் சார்ந்தியங்காத முதலாளித்துவ அரசை நம்பி ஏமாறாமல், ஒட்டு மொத்த இலங்கையரும் அணிதிரண்டு கூடன்குளம் அணுஉலையை எதிர்த்திட வேண்டும். இனியும் அரசபடைகளின் துப்பாக்கிரவைகளிறகு அஞ்சி அடங்கியிருப்பதில் பயனில்லை, கண்ணுக்கு தெரியாத கதிர்வீச்சு எம்மை கொல்ல போகின்றன. இதை இப்போதே தடுத்திடா விட்டால் எப்போதுமே தடுத்திட முடியாது !