Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ரஜனி திரணகம படுகொலை - கருத்துச் சுதந்திரத்திற்கு புலிகளின் சாவுமணி

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 60

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தொடர்ச்சியான சந்திப்புக்களை நிகழ்த்தி வந்த பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை அரவணைத்து விட்டிருந்த பிரேமதாச அரசு தென்னிலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுனவினரின் அதிகரித்த வண்ணம் இருந்த அரசுக் கெதிரான தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாக்கும்  நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.

பாராளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி இந்தியப் படைகளை இலங்கையில் இருந்து விலக்கிக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கும் கடிதம் பிரேமதாசாவினால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேமதாசவினால் அனுப்பி வைக்கப்பட்ட கடித்தத்துக்குப் பதிலளித்திருந்த ராஜீவ்காந்தி இந்தியப் படையை இலங்கையிலிருந்து விலக்கிக் கொள்வதற்கு கால அட்டவணை போடுவதற்கு முன் நிபந்தனையாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் படைவிலகலும் நிகழும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் பிரமதாசவினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் ஒரே நோக்கம் இந்தியப் படையை இலங்கையிலிருந்து வெளியேற்றுவது என்பதாக மட்டும் இருந்திருக்கவில்லை; அத்துடன் வடக்குக்-கிழக்கு இணைந்த மாகாண சபையை செயலற்றதாக்குவதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.


புளொட்டினால் நிகழ்த்தப்பட்ட மாலைதீவுச் சதிப் புரட்சியின் தோல்வியும் அதில் பங்குபற்றிய பல புளொட் உறுப்பினர்கள் கொல்லப்பட்டமையும், தமிழீழ விடுதலைப் புலிகளால் புளொட்டின் மன்னார் முகாம் தாக்கியழிக்கப்பட்டு பல உறுப்பினர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் புளொட்டுக்குள் முரண்பாடுகள் கூர்மையடையவும் உமாமகேஸ்வரன் மேல் புளொட் உறுப்பினர்கள் அதிருப்தி ஏற்படவும் காரணமாக அமைந்திருந்தது,  புளொட் இயக்கம் உருவான நாட்களில் இருந்து உமாமகேஸ்வரனுக்கு விசுவாசமாகச் செயல்பட்டு வந்த அவருக்கு நெருக்கமாகவிருந்த பலர் உமாமகேஸ்வரனின் செயற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். உமாமகேஸ்வரனின் உண்மை சுயரூபத்தை அவருடன் நெருக்கமாக பழகியவர்கள் அறிந்து கொண்டதன் விளைவாக உமாமகேஸ்வரன் அவரது மெய்ப்பாதுகாவலர்களாலேயே கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் பேரவைக் கொழும்புக்கிளைத் தலைவராக அரசியலில் முன்னணிக்கு வந்த உமாமகேஸ்வரன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்டு அதன் தலைவராகவும் செயற்பட்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவையடுத்து புளொட் அமைப்பை உருவாக்குவதில் ஒருவராக விளங்கிய உமாமகேஸ்வரன் அதன் தலைவராகவும் ஆனார். இலங்கை அரச படைகளாலும் பிரபாகரனாலும் உமாமகேஸ்வரன் தேடப்பட்ட நிலையில் அவருக்குப் பாதுகாப்பு அளித்து புளொட்டின் வளர்ச்சிக்கு முன்னின்று உழைத்தவர்களான சிவனேஸ்வரன் (உடுவில்), சந்ததியார் உட்பட பலரைத் தனது தலைமையின் நலன்களைக் கருத்திற் கொண்டு கொன்றொழித்திருந்த உமாமகேஸ்வரன் அவரை விசுவாசித்த, அவருக்கு மிகவும் நெருக்கமாகத் திகழ்ந்த மெய்ப் பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சிறுசிறு மோதல்களும் "மண்டையன் குழு"த் தலைவன் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இளைஞர்களைக் கொண்ட "தமிழ்த் தேசிய இராணுவ" உருவாக்கமும் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இந்தியப் படையினரதும், பயிற்சி பெற்ற தமிழ்த் தேசிய இராணுவத்தினதும், ஈழமக்கள் ஜனநாயக தேசிய விடுதலை முன்னனியினரதும் வீதிச் சோதனைகளும் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெப்பொழுதையும் விட தீவிரமாகிக் கொண்டிருந்தது. "தீப்பொறி"க் குழுவின் கொள்கை உருவாக்கத்தை நோக்கிய விவாதங்கள் வட்டுக்கோட்டையில் சுகந்தனால் (சிறி) எமக்கு வாடகைக்கு எடுத்துக் கொடுக்கப்பட்ட வீட்டில் தொடர்ந்து கொண்டிருந்தன. இலங்கையின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு குறித்த முரண்பாடு "தீப்பொறி"க் குழுவுக்குள் கொள்கை உருவாக்குவது குறித்த பிரதான முரண்பாடாகக் காணப்பட்டது. தேசிய இனப் பிரச்சனை குறித்து இரண்டு விதமான கருத்துக்கள், இரண்டு விதமான போக்குகளுக்கிடையில் விவாதம் தொடர்ந்தது. தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்ற விடயத்தில் நாம் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும், அதுதான் எம்முன்னுள்ள - புரட்சிகர சக்திகள் முன்னுள்ள - கடமையாகும் என்ற கருத்து செயற்குழுவுக்குள், ரகுமான் ஜான், டொமினிக், தேவன், தர்மலிங்கம், சண்முகநாதன் ஆகியோரால் - பெரும்பான்மை உறுப்பினர்களால் - முன்வைக்கப்பட்டது. இக்கருத்து இடதுசாரிகளின் நோக்கு நிலையில் சரியான கருத்தென வாதம் செய்யப்பட்டது.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இடதுசாரிகள் இன ஒடுக்குமுறைக்கெதிராகப் போராட முன்வராதது மட்டுமல்லாமல் அவர்கள் இனவாதத்துக்குள் மூழ்கி விட்டனர் என்றும் இந்நிலையில் 1977 பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் தமிழீழக் கோரிக்கைக்கு தமிழ் மக்கள் அங்கீகாரம் அளித்த காரணத்தால் பெரும்பான்மை தமிழ் மக்களின் விருப்பான - வாக்களித்த - தமிழீழக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வது இடதுசாரிகளின் கடமை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு குறித்த எனது கருத்தோ மேற்படி கருத்துக்கு முரணானதொன்றாகக் காணப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் அல்லது ஈழ விடுதலைப் போராட்டம் என்ற பிரிவினயை மட்டும் முன்னிறுத்தும் ஐக்கியத்தை முன்னிறுத்தாத கருத்து அல்லது போராட்டம் என்பது முதலாளித்துவ நலன்களை - உழைக்கும் மக்களின் நலன்களை அல்ல - பிரதிநிதித்துவப்படுத்திய தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தமது பாராளுமன்ற நலன்களை மட்டுமே முன்னிறுத்தி முன்னணிக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. தமிழர் விடுதலை கூட்டணியினர் "தமிழீழம்" என்ற தமது கருத்து நிலையில் இருந்து பின்னோக்கி காலடி எடுத்து வைக்கையில் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் அதே "தமிழீழம்" என்ற கோசத்தை சுவீகரித்துக் கொண்டனர். "தமிழீழம்" என்ற கருத்தும் சரி பிரிவினை என்ற கருத்தும் சரி எந்தவித இடதுசாரியக் கண்ணோட்டத்தின் பாற்பட்டதல்ல என்பதுடன் இடதுசாரிய முலாம் பூசிய கருத்தாகவே காணப்பட்டிருந்தது. "தமிழீழம்" என்ற கருத்தை ஆதரித்து பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள் என்ற காரணத்துக்காக இடதுசாரி எனப்படும் ஒருவர் தமிழ் மக்களின் அத்தகைய முடிவுக்கு மதிப்பளிப்பதானது தமிழ் மக்களின் முடிவு தவறானதென சுட்டிக்காட்டி அவர்களின் தவறான கருத்தின் அடிப்படையில் வந்தடைந்திருக்கும் முடிவுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதையோ அல்லது போராடுவதையோ எந்த வகையிலும் தடுத்து விடுவதில்லை.

எனவே இடதுசாரிகளான நாம் தேசிய இனப் பிரச்சனை குறித்த குறுகிய இனவாதத் தன்மை கொண்ட, பிரிவினையை மட்டுமே முன்னிறுத்திய, ஐக்கியத்தை முன்னிறுத்தாத தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது தவறானது மட்டுமல்ல இத்தகைய தவறான போக்குகளுக்கும் முடிவுகளுக்கும் எதிராகப் போராட வேண்டியவர்களுமாகும். தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் கடந்த காலத்தைய குறுகிய இனவாதத் தன்மை கொண்ட பிரிவினைப்  போராட்டமாக - தமிழீழப் போராட்டமாக - முன்னெடுக்கப்படுவதற்கு மாறாக சுயநிர்ணய அடிப்படையில் அமைந்த போராட்டமாக, சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் - சிங்கள இனவாதிகளுடன் அல்ல - ஐக்கியத்தை முன்னிறுத்தும் போராட்டமாக முன்னெடுக்கப் படவேண்டும் என்ற எனது  கருத்தை முன்வைத்தேன். இதுவே இடதுசாரிகளின் கண்ணோட்டமாகவும் அமைய முடியும். சிங்கள இடதுசாரிகள் இன ஒடுக்குமுறைக்கெதிராகப் போராட முன்வரவில்லை என்ற வாதமும் கூட இங்கு ஏற்புடையதல்ல. இடதுசாரிகள் என்று தம்மை அழைத்துக் கொண்ட தமிழர்கள் குறுகிய தேசிய வாதத்துக்கு பலியாகியது எப்படியோ அதே போல சிங்கள  இடதுசாரிகள்  பலரும் - நீண்ட காலமாக சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தும் போராடியும் வந்த சிங்கள் இடது சாரிகள் பலரும் - இனவாததுக்குப் பலியாகியிருந்தனர். இங்குள்ள பிரச்சனை என்னவெனில் சிங்கள இடதுசாரிகளில் ஒருபகுதியினர் இனவாததுக்குப் பலியாகி விட்டனர் என்ற ஒருகாரணம் மட்டுமே இன ஒடுக்குமுறைக்கெதிராக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கு ஆதரவான வாதமாகவோ, சிங்கள இடதுசாரிகள் அனைவரையும் இனவாதிகள் என முத்திரை குத்துவதற்கு ஆதரவான வாதமாகவோ அல்லது சிங்கள முற்போக்கு சக்திகளுடனும் சிங்கள உழைக்கும் மக்களுடனும் தமிழ் மக்கள் இணைந்த  ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிரான வாதமாகவோ அமைந்து விடாது.

தேசிய இனப் பிரச்சனை குறித்த "தீப்பொறி"ச் செயற்குழுவின் பெரும்பான்மையானவர்களின் கண்ணோட்டமானது தமிழர் விடுதலைக் கூட்டணியினரிடமிருந்து தோற்றம் பெற்று ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களினால் உள்வாங்கப்பட்ட கருத்தியலின் தொடர்ச்சியாகவே காணப்பட்டது, செப்டெம்பர் 18, 1989 இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான உடன்படிக்கை இந்தியப் படையை இலங்கையிலிருந்து விலக்கிக் கொள்வது குறித்து கொழும்பில் கைச்சாத்தானது. இவ்வுடன்படிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்தியப் படையின் தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்திருந்த இந்திய அரசு, இந்தியப் படைகளை இலங்கையிலிருந்து விலக்கிக் கொள்வதற்கான கால அட்டவணையையும் முன்வைத்திருந்தது. இந்தியப் படையை இலங்கையிலிருந்து வெளியேற்றி தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதென்ற பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கனவு இதன்மூலம் நனவாக ஆரம்பித்திருந்தது. ஜனதா விமுக்திப் பெரமுனவுக்கெதிரான மூர்க்கத்தனமான தாக்குதலை பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு ஆரம்பித்திருந்த அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் தமது விரோதிகள் மீதும் "துரோகிகள்" மீதும் மூர்க்கத்தனமான தாக்குதலை வடக்குக்-கிழக்கில் ஆரம்பித்திருந்தனர். 

யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரும், இலங்கை அரசினதும், இந்தியப் படையினரதும், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களின் மக்கள் விரோத செயற்பாடுகளை தொகுத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகவிருந்த ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம், கே. ஸ்ரீதரன் ஆகியோருடன் இணைந்து முறிந்த பனை என்ற நூலை வெளியிட்டிருந்தவரும், மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரும்,  வடக்குக்-கிழக்கில் நடந்த யுத்தத்தின் போது பாதிப்புக்கும், குண்டுத் தாக்குதலுக்கும் உள்ளானவர்களுக்கு நிவராண உதவிகளை செய்து வந்த "பூரணி இல்லம்" என்ற அமைப்பை உருவாக்கி செயற்பட்டவருமான ரஜனி திரணகம தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு முன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பொஸ்கோ என்பவரால் மேற்கொள்ளப்பட்ட ரஜனி திரணகம படுகொலையானது "முறிந்த பனை" என்ற நூலை வெளியிட்டதற்கான "பரிசாகவும்", கருத்துச் சுதந்திரத்தின் மீதான தமிழீழ விடுதலைப்  புலிகளின் தொடர்ந்துவரும் தாக்குதலாகவும் இருந்த அதேவேளை நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலையாகவும் இருந்தது. இக்கொலை பொஸ்கோவினால் மேற்கொள்ளப் பட்டிருந்தபோதும் ரஜனி திரணகமவின் நடவடிக்கைகளையும் நடமாட்டத்தையும் உளவு பார்த்து ரஜனியை பொஸ்கோவிற்கு இனங்காட்டியவர்கள் யாழ்ப்பாண கழக மருத்துவ பீடத்தில் ரஜனி திரணகமவின் மாணவர்களாகவிருந்த இருவராகும். 

"நாங்கள் இந்தத் தலைமுறையில் வருந்த வேண்டி இருப்பது கொடியவர்களின் ஈனச் செயல்களுக்காக மட்டுமல்ல நல்லவர்கள் எனப்படுபவர்களின் மௌனத்திற்காகவும்தான்" என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் மேற்கோளுடன் வெளியான "முறிந்த பனை" ஆசிரியர் ரஜனி திரணகமவின் கொலையின் பின்பும் "நல்லவர்கள் எனப்படுபவர்களின் மௌனம்" தொடர்ந்து கொண்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கு ரஜனி திரணகமவாக மட்டும் இருந்துவிடவில்லை; இடதுசாரி இயக்கங்களில் அங்கம் வகித்தவர்கள் (அண்ணாமலை, விஜயானந்தன்), புத்திஜீவிகள், தமது கருத்துடன் உடன்பாடு காணதவர்கள் என உரிமை கோரப்படாத படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

(தொடரும்)

 

9/6/2012

41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41

42.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 42

43.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 43

44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 44

45.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 45

46.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 46

47.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 47

48.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 48

49.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 49

50.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 50

51.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 51

52.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 52

53.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 53

54.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 54

55.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 55

56.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 56

57.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 57

58.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 58

59.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 59