Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒரு விலையில் இரட்டைக் குடியுரிமை: பந்துல கொத்தலாவல

இன்றைய பத்திரிகைகளில் வந்த செய்தியின்படி, சுமார் 2,000 அளவிலான வெளிநாட்டில் வாழும் ஸ்ரீலங்காவாசிகளுக்கு இரட்டைக் குடியுரிமை சான்றிதழ்கள் 17 நவம்பர் 2015ல் அலரிமாளிகையில் நடந்த ஒரு வைபவத்தில் வைத்து அதி மேன்மைதங்கிய ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் பெருமைகொள்ளும் பவித்திரமும் ஆடம்பரமுமான இந்த விழாவில் பிரதமர் உட்பட உள்ளுர் பிரமுகர்கள் பலரைக் கொண்ட ஒரு நட்சத்திரக்கூட்டத்தினர் வெளிப்படையாக கலந்து சிறப்பித்தார்கள். இருந்தபோதிலும் இந்த குறிப்பிட்ட காட்சியில் சில முரண்பாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது.

முதலாவதாக மற்றொரு நாட்டின் பிரஜைகளாக மாறிவிட்ட ஸ்ரீலங்காவாசிகளது தேசியத்தன்மை பறிக்கப் பட்டிருக்கக்கூடாது. அவர்கள் தங்கள் தேசியத்தன்மையை வைத்திருக்க அனுமதித்திருக்க வேண்டும். உண்மையில் உலகத்தில் உள்ள சில நாடுகளில் அந்த நாட்டின் பிரஜைகள் மற்றொரு நாட்டின் பிரஜைகளாக மாறிவிட்டால் தானாகவே சொந்த நாட்டுக் குடியுரிமையை அவர்கள் இழந்து விடுவார்கள்;, ஸ்ரீலங்காவும் அத்தகைய நாடுகளில் ஒன்றாகும். ஒரு நாட்டின் தேசியத்தை வைத்திருத்தல் அல்லது கையகப்படுத்தல் தொடர்பான ஆளும் விதிகளை நிர்ணயிப்பது அந்த நாட்டின் தனியுரிமை. எனினும் நாடானது அந்த உரிமையை நியாயமான முறையில் செயற்படுத்த வேண்டும்.

ஒரு ஸ்ரீலங்கா பிரஜை அவன் அல்லது அவள் மற்றொரு நாட்டின் குடியுரிமையை வெறுமே பெற்றுக்கொண்ட காரணத்தால் அவன் அல்லது அவள் தனது ஸ்ரீலங்கா பிரஜா உரிமையை தானாகவே இழந்துவிடுகிறார் என்று கூறப்படுவதை விளங்கிக் கொள்ள கடினமாக உள்ளது. எங்களில் பலர் தொந்தரவின்றி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வது உட்பட பல்வேறு காரணங்களுக்காக வெளிநாட்டு குடியுரிமையை பெற்றுள்ளோம். நான் லண்டனிலுள்ள சர்வதேச தொழிற் சங்க காங்கிரஸ் திணைக்களத்தில் (ரியுசி) சேர்ந்து இப்போது 26 வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றி வருகிறேன். உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், ஒரு சர்வதேச கொள்கை அதிகாரியாக எனது பணியினை மேற்கொள்வது சாத்தியமற்றதாக உள்ளது.

ஒரு ஸ்ரீலங்கா கடவுச்சீட்டை வைத்திருக்கும் ஒருவர் ஒருசில நாடுகளைத் தவிர்த்து உலகின் அனைத்து நாடுகளுக்கும் நுழைவு விசாவினை பெறவேண்டியதாக உள்ளது. அடிக்கடி ஒரு விசாவுக்காக அவன் அல்லது அவள் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டியுள்ளது, மேலும் அது அவர்கள் சேருமிடத்தில் தங்கியுள்ளதுடன், அடிக்கடி பெருந்தொகை பணத்தை செலவிட வேண்டியுள்ளதுடன், அதற்கும் மேலாக அது தொடர்பாக ஏராளமான விண்ணப்ப படிவங்களையும் அதற்கு தொடர்புள்ள பெரியளவு ஆதார ஆவணங்களையும் சமாப்பிக்க வேண்டியதாகவும் உள்ளது.

ஒரு ஸ்ரீலங்காவாசி வெளிநாட்டு குடியுரிமையை ஏற்றுக்கொள்ளும்போது அதை தண்டனைக்குரிய ஒரு குற்றமாகக்கருதி அவன் அல்லது அவளின் தேசியத் தன்மையை இரத்துச் செய்வது ஏன் என்பதை புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. சமீபத்தைய கடந்த காலங்களில் அனைத்து விதமான முக்கிய அரசியல்வாதிகள் உட்பட வாழ்வின் அனைத்து தரப்பினரையும் பற்றி மக்கள் சம்பந்தப்பட்ட நிதி மற்றும் பிற குற்றச்சாட்டுக்களின் ஒரு பிரவாகமே ஊடகங்களில் வெளிவந்துள்ளன. ஊடகங்களில் வெளியாகியுள்ள இந்த திகிலூட்டும் விவகாரங்கள் வெளிநாட்டு ஏற்றுமதி நிதியின் ஆதிக்கத்தின் கீழுள்ள சிறியநாடுகளில் ஒன்றான ஸ்ரீலங்கா போன்ற நாட்டிலுள்ள அநேக அரசியல்வாதிகளின் செயல்களை வெட்கப்பட வைக்கின்றன.

ஆர்வமூட்டும் வகையில் இந்த கசப்பான ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படும் நபர்கள் அனைவரும், ஏதோ காரணங்களுக்காக வெளிநாட்டு குடியுரிமையை பெற்றுக்கொண்ட புலம்பெயர்ந்தவர்களைப் போல அல்லாது ஸ்ரீலங்காவாசியாகத் தொடர்வதற்கு சரியாகப் பொருந்துபவரும் மற்றும் பொருத்தமான ஆளாகவும் உள்ளார்கள். ஒரு கணமேனும் அவர்கள் தங்கள் குடியுரிமையை இழக்கவேண்டும் என்று நான் ஆலோசனை கூற வரவில்லை என்பதை நான் வெட்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் சுட்டிக்காட்டுவது பிரஜைகளின் ஒரு பகுதியினருக்கு எல்லையில்லாத அளவு சகிப்புத்தன்மை காட்டப்படும் அதேவேளை மற்றவர்கள்மீது சகிப்புத் தன்மையே காட்டப்படாமல் இருப்பதை மாத்திரமே. வெளிநாட்டு தேசியத் தன்மையை ஏற்றுக்கொள்வது அத்தனை தீவிரமான ஒரு குற்றமாக இருந்தால், அதை திரும்பப் பெறுவதற்கு சாத்தியமான வழிகள் ஏன் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அதுவும் கூட ஒரு விலையில்! என்று ஒருவர் ஆச்சரியப்படலாம். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ள இரட்டைக் குடியுரிமையை பெறுவதற்கான கட்டளை விதிகளின்படி தங்கள் வசம் கணிசமானளவு நிதி வளத்தை கொண்டுள்ளவர்கள் மட்டுமே அதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக உள்ளனர்.

ttp://www.immigration.gov.lk.

விண்ணப்பதாரிக்கான கட்டணம் ஸ்ரீலங்கா ரூபா 250,000. அவரது துணை மற்றும் பிள்ளைகளுக்கு சில கழிவுகள் உள்ளன.

எனக்குத் தெரிந்தவரை வெளிநாட்டு குடியுரிமையை பெற்ற காரணத்தால் சொந்த நாட்டு குடியுரிமையை இழக்கும் சில நாடுகளில் தென்னாபிரிக்காவும் ஒன்று. எனினும் தென்னாபிரிக்க வாசிகளுக்கு அவர்கள் மற்றொரு நாட்டுக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போது தங்கள் சொந்த நாட்டு குடியுரிமையை மீளப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்கும் ஒரு தெரிவும் உள்ளது - இந்த தெரிவு ஸ்ரீலங்காவாசிகளுக்கு இல்லை.

மேலும் நிறவெறி ஆட்சியின் கீழ் தங்கள் குடியுரிமையை இழந்தவர்கள் கடந்த காலத்துக்கு உரிய வகையில் தங்கள் தென்னாபிரிக்க குடியுரிமையை இழந்ததுக்கு தென்னாபிரிக்க குடியுரிமைச் சட்டம் 1995ன்படி விதி விலக்கும் உள்ளது. வேறு விதமாகச் சொன்னால், அவர்கள் தங்கள் குடியுரிமையை மீளப் பெறுவதற்கு அனுமதி உள்ளது. இன்னும் சொல்லப்போனால் தென்னாபிரிக்க குடியுரிமையை மீளப் பெறுவதற்கான கட்டணம் தென்னாபிரிக்கா பணமான 300 சார்கள் மட்டுமே,

ஸ்ரீலங்கா குடியுரிமையை மீளப்பெறுவதற்கான கட்டணத்துடன் அதை ஒப்பிட்டால், ஸ்ரீலங்காவின் கட்டணம் இன்றைய (18.11.2015) நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில் 83 மடங்கு அதிகம். இந்த ஒப்பீட்டை கொள்முதல் சக்தி மாற்று விகிதத்தின்படி மேற்கொண்டால் தென்னாபிரிக்க குடியரசைக் காட்டிலும் ஸ்ரீலங்கா தன் இரட்டைக் குடியுரிமைக்கான விலையாக 100 மடங்கு அதிகம் வசூலிக்கிறது. சாதாரண ஸ்ரீலங்காவாசிக்கு ஊடகங்களில் வெளியாகும் இந்த கணக்கு மனதைக் கலக்கி தலைசுற்ற வைப்பதுடன், இந்த விகிதாச்சார வீதம் வெளிநாடுகளுக்கு குறிப்பாக மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஸ்ரீலங்காவாசிகள் அங்கு தங்கம் வெட்டியெடுக்கிறார்கள் என்று நம்பும் சாத்தியமும் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இன்று ஸ்ரீலங்காவில், யாராவது ஒருவர் தன்மீது 500 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஊழல்கள் புரிந்ததாக குற்றம்சாட்டினார் அல்லது தவறான தகவல்களை வழங்கினார் என்று யார்மீதாவது 50 மில்லியன் இழப்பீடு கோரினார் என்கிற செய்தி இல்லாமல் ஒரு நாள் நகர்வது மிகவும் கடினம். எனவே சாதாரண மக்கள் இந்த இரட்டைக் குடியுரிமைக்கான தகுதி, விதிகள் மற்றும் கட்டணம் என்பன கடினமானவை அல்ல எல்லாவற்றையும் விட பலராலும் இதை வெகு சுலபமாக தாங்கிக்கொள்ள முடியும் என்று சமாதானமடைவார்கள். இந்தக் கட்டுக்கதையின் மீது எழுந்துள்ள ஐயத்தை அவர்களால் தீர்த்துக்கொள்ள முடியும் என்று நம்மால் நம்பிக்கை கொள்ள மட்டுமே முடியும். நிச்சயமாக ஏனைய நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்களைப்போல, ஸ்ரீலங்காவாசிகளிலும் பணக்கார நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் பாதுகாப்பு காரணங்களுக்காக இரட்டைக் குடியுரிமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. அதில் சில உண்மைகள் இருக்கலாம் என்கிற அதேவேளை, தானாகவே குடியுரிமையை இழந்துபோகும் 1948ம் ஆண்டின் குடியுரிமைச்சட்டம் 18ம் சட்டப்பிரிவை திருப்பி நோக்கினால் அது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள சட்ட விதிகளைப் பற்றி சுட்டிக்காட்டுவது மதிப்புள்ளதாக இருக்கும். உள்நாட்டு கலவரங்கள் காரணமாக கடுமையான நடவடிக்கைகளை ஏனைய நாடுகள் கையாண்டுள்ளதாகத் தெரியவில்லை. கொலம்பியா இதற்கு பொருத்தமான ஒரு உதாரணம். கொலம்பியாவில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் காரணமாக அந்த நாடு எண்ணிலடங்கா பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. இருந்தும் கொலம்பிய அரசாங்கம் இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு கட்டுப்பாடுகளை மேற்கொள்ளவில்லை.

வியப்புக்குரிய வகையில் ஸ்ரீலங்காவில் இரட்டைக் குடியுரிமை சந்தேகக் கண்ணோடு பார்க்கப் படுகிறது. அரசியலமைப்பின் 19வது திருத்தம் இரட்டைக் குடியுரிமையுள்ள நபர்கள் பாராளுமன்றில் அங்கத்துவம் வகிப்பதை தடை செய்கிறது. இருப்பினும் ஒரு வெளிநாட்டு பிரஜையை மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்கு நியமிப்பதையிட்டு அதிகாரிகள் மன உறுத்தல் எதுவும் அடையவில்லை போலத் தெரிகிறது. தற்போதைய அல்லது கடந்தகால பதவி வகித்தவர்களின் பொருத்தம் பற்றி நான் கருத்து எதுவும் கூறவில்லை என்பதை தயவுசெய்து குறித்துக் கொள்ளவும்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கு விருப்பமுடைய புலம்பெயர்ந்து வாழும் ஸ்ரீலங்காவாசிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவதில் உள்ள இலாபங்களை ஸ்ரீலங்கா அதிகாரிகள் உண்மையில் உணருவதற்குத் தவறிவிட்டார்கள். அரசியல் நோக்கத்தின் சட்ட திட்டங்களின் உள்ளடக்கத்திற்கு ஒட்டுப்போடும் பணியினையே அவர்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. நிச்சயமாக எல்லாமே நல்லாட்சிக்கு வேண்டியே! ஸ்ரீலங்கா - மற்றவைகளைப் போலில்லாத வித்தியாசமான ஒரு நாடு.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

நன்றி: தேனீ இணையத்தளம்

http://www.thenee.com/221115/221115-1/221115-1.html