Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தலித்து - விளிம்பென பேரைச் சூட்ட, யாருங்க நீங்க..!?

இந்துவாய் பிறத்தலே தர்மம் என்கிறாய்     

இஸ்லாத்தில் சேர்தலே நட்பு என்கிறாய்

இயேசுவில் நுளைதலே அன்பு என்கிறாய்

பௌத்தத்தில் ஜனித்தலே கர்மா என்கிறாய்

இப்படி ஆண்டாண்டாய் மனிதரை மக்கரிகும்   

அத்தனை மதப் போக்கையும் விஞ்சிய என்.ஜி.ஓ.க்களே..!

உங்களின் தலித்திய விளிம்பினில் விடிவாமே..! எப்படி..?

ஏழ்மைக்கும் அடிமைத் தனத்துக்கும் தீர்வு என்று

ஏழைச் சாதிபார்த்து அணைத்துருகிப் பேசிவந்து

எங்கள் சொந்தக் கஞ்சி கூழை மறக்கச் சொல்லி         

உங்கள் காப்பரேட் கட்டுச் சோற்றை நாடுமாறு    

எங்களை ருசிமிக மூளைச் சலவை செய்து       

உங்களின் சதிப் பொறிகளில் அகப்படுத்தி    

மக்களல்ல இவர் மாக்கள் என்றாகக் காயடித்து

எங்கள் வாழ்வின்மேல் தலித்தென்று வளிம்பையிட்டு         

எமை ஏதன் தோட்ட அம்மணப் பழங்களாக்கி   

உங்களின் காப்பரேட் எண்ணைக் கடாயினில் வீழ்த்தி

எமைத் துடிதுடிக்கப் பொரிக்கின்றீரே..! எப்படி..?

 

இதில் ஏழைவர்க்க விடுதலைக்குப் போராடும்   

எமது மக்கள் போராட்டக் குழுக்களினை 

நோண்டிப் பிடித்து அறுத்துத் தொலைத்து.., 

வதைக்கின்ற காப்பிரேட் நீர்தானே, ஆமென்.

 

ஆக..,

இந்த தலித்திய - விளிம்புத் திட்டங்கள் யாவும்

இந்திய அரசின் காடு - சேரி அழிப்புச் சதிகளின் உச்சம்.  

இப் புரட்டினில் நாறுது ஹரிஜனர் என்ற

காங்கிரஸ் காந்தியின் கோவண நாற்றம்.

 

இவ் வர்க்க நாற்றத்தினாலே உலகெலாம் உலவுது.., 

தலித் என்பார் பண்பற்ற பன்றிகள் எனவும்           

தலித் என்பார் உழைப்பற்ற நாய்கள் எனவும்    

தலித் என்பார் அறிவற்ற அசுரர் எனவும் 

தலித் என்பார் கரிஜனர் - விளிம்பினர் இப்படியாக..,    

இப்போ ஈழத் தமிழருக்குள் நுழைந்து உருகிவருகிது

இதே தன்னார்வ என்.ஜி.ஓ.க் கூட்டம், ஜே ஹிந்த்.

 

மேட்டுக் குலக்கொடி ஆண்டைகளால் அமிழ்கின்ற

ஏழை வர்க்கத்தின் ஆதரவு தாமென்று

அன்பாய் ஒட்டி உறவாடி.., சமதளத்தில்

ஆண்டான் வர்க்க குலக்கொடியை உசுப்பேத்தி

அமிழும் வர்க்கத்தை பக்குவமாய் அறுத்தெறிந்து

எங்களினை ஏதிலியாய் ஆக்கிவிட்டு..,

 

அத்தனை கடவுளின் பேராலும்

எங்களில் பாலியல் வதைகளை தடையின்றிப் புசித்து..,

அத் தடையத்தை முழுதாய் அழிந்திடும் வகையில் 

ஏழ்மையின் உடல்களைத் துடிதுடிக்க வக்கரித்து

எமைத் தினந்தோறும் எரிக்கின்றது ஆண்டையர் கூட்டம்..,

அதனை ஆறுதல் அறிக்கையாய் தருகின்றது என்.ஜி.ஓக் கூட்டம்.

 

இன்றைய மனித அறிவுப் பண்பாட்டை

வளர்க்கின்ற பண்புகள் புரியாத.., 

மக்களின் இயல் போராட்ட அரசியலைத் தொலைக்கின்ற..,

ஆண்டைகளுக்கும் - காப்பரேட் என்.ஜீ.ஓக்களுக்கும்  

விரைவினில் மக்களால் தீர்வுப் புத்தகம் திறக்கும்.

 

இச் சதிகளில் பிணைந்த பிதாமகர் சிலபேர்

இலங்கையில் ஏழைச் சாதிய மக்களை அழைத்து

இந்தியா போன்ற தலித்தியத் திட்டத்தில் மாட்ட   

இலங்கைத் தலித்தியம் என்ற பெயரிலே வருகிறது 

இந்திய - காப்பரேட் என்.ஜீ.ஓ.ச் சதித் திட்டம்.

 

கவனம்..! கவனம்..!! மிகக் கவனம்..!!!

 

- மாணிக்கம்.

18.10.2013