Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

முன்னிலை சோசலிசக் கட்சி இனவாதிகளா!? திரிபுவாதிகளா!? சந்தர்ப்பவாதிகளா!?

சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாமையால் முன்னிலை சோசலிசக் கட்சியை, இனவாதிகளாக, திரிபுவாதிகளாக, சந்தர்ப்பவாதிகளாக காட்டுகின்ற அரசியல் கேலிக்கூத்தைக் காண்கின்றோம். இப்படி இட்டுக்காட்டி கூறுவது திரிபுவாதமாக, இனவாதமாக இருக்கின்றது. இப்படி திரிக்க தேசிய சுயநிர்ணயம் தொடர்பாக ரோசா லக்சம்பேர்க்குடனான லெனினின் விவாதத்தை எடுத்துக் காட்டுகின்றனர். லெனின் சுயநிர்ணயம் ஏற்க மறுத்த ரோசா லக்சம்பேர்க்கை இனவாதியாகவோ, திரிபுவாதியாகவோ முத்திரை குத்திக் காட்டி விவாதிக்கவில்லை. அவரை எதிரியாகக் காட்டவில்லை, எதிரியாக்கவில்லை. மாறாக அவரை மார்க்சியவாதியாக அடையாளப்படுத்தி, அரசியல் விவாதத்தை முன்னெடுத்தார். தமிழ்தேசியம் மட்டும் தான் தன்னுடன் அல்லாத அனைத்தையும் எதிரியாகச் சித்தரித்துக் காட்டுகின்றது.

நாங்கள் லெனின் வழியில் தான் முன்னிலை சோசலிசக் கட்சியுடன் முரண்பட்ட விவாதிப்பது மட்டுமின்றி இணைந்து பயணிக்கின்றோம். ஒரு வர்க்கக் கட்சியாக அதை அங்கீகரிக்கும் அதே நேரம், ஒன்றிணைந்த வர்க்கக் கட்சிக்கான பொதுத் திசையில் பயணிக்கின்றோம். சுயநிர்ணயம் முதல் பல்வேறு அரசியல் முரண்பாடுகளை, வர்க்கக் கட்சிக்கான பாதையில் ஒன்றிணைந்து தீர்க்கக்கூடிய வகையில் அணுகிவருகிறோம்.

இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க எது இன்று அவசியமோ, எது இன்று சாத்தியமானதோ, அந்தப் பாதையில் பயணிப்பதையே மார்க்சியம் வழிகாட்டுகின்றது. குருட்டுத்தனமாக கோட்பாட்டை வழிபடுவதை மார்க்சியம் அங்கீகரிப்பதில்லை. கோட்பாட்டு ரீதியான முரண்பாடுகள், கோட்பாட்டுத் தூய்மை என்பது வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்காக மட்டும்தான். வர்க்கப் போராட்டத்தைக் குழிபறிப்பதற்காக அல்ல. கோட்பாட்டை பாதுகாப்பதற்காக அல்ல. அது எங்கள் வேலையுமல்ல. வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், அதை வழிநடத்துவதற்கும் தான் மார்க்சியம்.

முன்னிலை சோசலிசக் கட்சி ஒரு குழந்தை. அது தவளுகின்றது. அதன் தோற்றம் தூக்க முடியாதளவுக்கு மிகப்பெரியது. அந்தக் கட்சியின் உருவாக்கம் மற்றைய கட்சிகள் போல் சிறுகச்சிறுகவாக உருவாகவில்லை. கட்சியில் தலைமையில் இருந்த ஒரு சிலர் மட்டத்தில் இருந்து முன்னெடுத்த உட்கட்சிப் போராட்டமும், தலைமையில் இருந்த பொது அதிருப்தியும் இணைந்து உருவானதுதான் அந்தக் கட்சி. அது வெளிவந்த போது, அந்த அமைப்பின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அதனுடன் சேர்ந்து கொண்டனர். அரசியல்ரீதியான உட்கட்சிப் போராட்டத்தை நடத்தியவர்கள் இதை எதிர்பார்க்காததுடன், அவர்களையும் இணைத்து வழிநடத்த வேண்டிய பொறுப்பும் வந்து சேர்ந்தது. கட்சித் தலைமை தன்னை அரசியல்ரீதியாக வளர்த்தெடுக்கத் தொடங்கியது முதல், கீழ் அணிகளை அரசியல்ரீதியாக வளர்த்தெடுக்க வேண்டிய நிலையில் தன்னைத்தான் புரட்சிகரமாக்கி வருகின்றது. இதுதான் அந்தக் குழந்தையின் வளர்ச்சி. உயிர்ப்பிக்கும் ஆற்றலும் வளமும் கொண்ட அந்த பெண் குழந்தையையே, கள்ளிப் பால் கொடுத்து கொன்று விட முனைகின்றனர்.

ஒரு கட்சியின் தோற்றம், புரட்சிகரமான பாதையில் முன்னோக்கி செல்லும் அதன் எதார்த்தத்தை நிராகரித்து, அரசியல் நடத்துவது கேலிக்குரியது. முரண்பாடான கருத்துக்காக, அதை எதிரியாக்கி எதிர்த்த அரசியல் செய்வது புரட்சிகரமான அரசியல் அல்ல, எதிர்ப் புரட்சிகரமான அரசியல். அவர்களுடன் ஒன்றிணைந்து அல்லது வெளியில் இருந்து அணுகுவது மட்டும் தான், புரட்சிகரமானதும் சரியானதுமான அரசியல்.

அந்தக் கட்சியில் கீழ் இருந்து மேலாகவும், மேல் இருந்து கீழாகவும் நடக்கும் மாற்றங்கள், புரட்சிகரமான நடைமுறைகள், இன்று முன்னோக்கிச் செல்வதை யாரும் நிராகரிக்கவோ மறுக்கவோ முடியாது. நாங்கள் சேர்ந்து பயணிக்க அல்லது ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியம் என்பது, வர்க்கப் போராட்டத்துக்கு எது இன்று அவசியமானதோ, எது அதிக சாதகமானதோ, அதை அடிப்படையாக கொண்டு அணுகுவதைத் தாண்டி எம்மிடம் வேறு அரசியல் கிடையாது. 1960 களில் சண் தலைமையிலான கட்சியின் தவறான அணுகுமுறைகளை நாங்கள் செய்யவிரும்பவில்லை. காலத்தின் தேவை, அதற்கான சமூகப் பொறுப்புடன், வர்க்க நடைமுறை கொண்ட கட்சியை நோக்கி பயணிப்பது காலத்தின் கட்டாயமாகும். இது தான் இலங்கையில் புரட்சிகரமான சூழலை உருவாக்கும் அரசியல் அடிப்படையும் நிபந்தனையுமாகும்.

இப்படி இருக்க

"சிங்கள மக்கள் மத்தியிலிருந்து ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்களும் தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் குரல்களும் சிறுகச் சிறுக எழ ஆரம்பித்தன. அவற்றை முளையிலேயே கிள்ளியெறிவதற்கான தூண்டப்பட்ட திரிபுவாதிகள் தாம் பொறுக்கிய மார்க்சியக் கருத்துக்களோடு இனவாதத்தைக் கலந்து ஜே.வி.பி ஐ உயிர்ப்பித்த போது உருவானதே முன்னிலை சோசலிசக் கட்சி."

என்று, ஒரு வர்க்க கட்சியை திரித்து காட்டுகின்ற பித்தலாட்டங்கள் அரசியல் அடிப்படையற்றவை.

"சுயநிர்ணய உரிமையை ஆதரி"

த்தால் அதை திரிபுவாதி அல்ல என்று கூறமுனைகின்ற இழிவான அரசியல் அர்ப்பத்தனத்தைத்தான் இங்கு நாம் காணமுடியும்.

இந்த அரசியல் தர்க்கம் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்டவர்களை, இனவாதிகள் அல்ல என்கின்றது. திரிபுவாதிகள் அல்ல என்கின்றது. இது தான் மூடிமறைத்த தமிழ்தேசிய சந்தர்ப்பவாதிகளின் உண்மை முகம். சுயநிர்ணயத்தை முன்வைத்து இயங்கும் குறுந்தேசியம் வரை, இனவாதிகள் அல்ல என்று இந்த அரசியல் கண்ணோட்டத்தை இந்த தர்க்கம் வரையறுக்கின்றது.

மறுதளத்தில் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல, அதற்கான நடைமுறையும் அவசியமானது. சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி நிற்கும் இனவாதத்தை எதிர்த்துப் போராடும் பொது அரசியல் தளத்தில் தான், சுயநிர்ணயத்தை கோட்பாடாக முன்வைக்காமைக்கு எதிராகவும் போராட முடியும்.

கோட்பாட்டு அளவில் சுயநிர்ணயத்தை முன்வைக்காமல் நடைமுறையில் இனவொடுக்குமுறையையும், இனவாதத்தையும் எதிர்த்துப் போராடும் ஒரு கட்சியின் செயல் தந்திரத்தை இனவாதமாக திரிபுவாதமாக சித்தரிப்பது அபத்தம். அவர்கள் தங்கள் போராட்டத்தை மேலும் சிறப்பாக முன்னெடுக்க, கோட்பாட்டுரீதியான அரசியல் ஆயுதத்தைக் கொண்டிராமை என்பது தொடர்ந்து விவாதத்துக்கும் விமர்சனத்துக்குமுரியது. அதை ஏற்க வைக்கும் போராட்டம் என்பது கூட, அவர்களின் இனவொடுக்குமுறைக்கும், இனவாதத்துக்கும் எதிரான நடைமுறைப் போராட்டத்தின் ஊடாகத்தான் சாத்தியம். வெறும் கோட்பாட்டுத் தளத்தில் மட்டுமல்ல.

சுயநிர்ணயத்தை ஏற்காமையை வைத்து அரசியல்ரீதியாக முத்திரை குத்துகின்ற இழிவான போக்கே இங்கு அரசியலாகின்றது.

"இலங்கை இந்திய அரசுகள் அந்த ஒரு விடயத்தில் மட்டும் மிகவும் தெளிவாக இருந்திருக்கின்றன. எந்தக் கணத்திலும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் குரல்கள் எழுந்துவிடக் கூடாது என்பதில் அவற்றின் செயல் தந்திரம் உறுதியாகவிருந்தது"

என்று கூறுவதன் மூலம், முன்னிலை சோசலிசக் கட்சியை அதன் அரசியல் கூறாக காட்ட முனைகின்றனர்.

முன்னிலை சோசலிசக் கட்சி, ஒரு கட்சி என்ற வகையில் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளாமை பெரும்பான்மையின் முடிவாக, கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்துக்கு உட்பட்ட ஒரு கட்சி. சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்ட சிறுபான்மையும் கீழ் இருந்து உருவாக்கும் நடைமுறை மூலம் தொடர்ந்து அதைப் பெரும்பான்மையாக மாற்றும் உட்கட்சி போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சியாகத்தான் இருக்கின்றது. இப்படித்தான் கட்சியின் உள் ஜனநாயகம் இருக்கும். இதை நிராகரிப்பது மார்க்சியமல்ல. முன்னிலை சோசலிசக் கட்சியில் சுயநிர்ணயம் சிறுபான்மைக் கருத்தாக, அதற்கான உட்கட்சிப் போராட்டம் முதல் உயிரோட்டமுள்ள கட்சி ஜனநாயகத்தையும் கண்டுகொள்ளாது அரசியல் நடத்தக் கூடாது. இதைப்பற்றி தெரியாவிட்டால், அதைத் தெரிந்து கொண்டு விவாதிப்பதுதான் சரியான அரசியலாக இருப்பதுடன், அதன் மூலம் மக்களை வழிநடத்த முடியும்.

இங்கு சுயநிர்ணயத்தில் இருந்து கட்சி பற்றிய முடிவா அல்லது கட்சியின் பொது வேலை திட்டத்தில் இருந்து சுயநிர்ணயம் பற்றிய விவாதமா என்ற அடிப்படை அரசியல் கேள்வியை இது எழுப்பிவிடுகின்றது. சுயநிர்ணயத்தில் இருந்து கட்சி பற்றிய மதிப்பீடு மார்க்சியமல்ல. அதாவது தேசியவாதம். சுயநிர்ணயம் மட்டும் தான் முரண்பாடு என்பது மார்க்சியமல்ல. தேசியவாதம். சுயநிர்ணயம் கடந்து பல்வேறு முரண்பாடுகளுடன் தான், முன்னிலை சோசலிச கட்சியை நாங்கள் வர்க்க கட்சியாக அணுகுகின்றோம்.

சுயநிர்ணயத்தை அவர்கள் சோவியத் மற்றும் அன்றைய காலகட்டத்துக்கே பொருத்தமானது என்றும், சுயநிர்ணயம் இன்றைய சர்வதேசிய நிலைக்கும் பொருத்தமற்றது என்றும் முன்வைக்கின்ற வாதங்கள், மற்றும் அன்று சுயநிர்ணயத்தின் பிரயோகத்தை வெவ்வேறு சூழலில் மார்க்ஸ் முதல் லெனின் வரை முன்வைத்ததாக கூறுகின்ற வாதங்கள் தர்க்கங்கள் மீது, சரியான தத்துவார்த்த அரசியல் விவாதங்கள் அவசியமானதாக உள்ளது. சிங்கள மக்களுடன் உரையாடல் மற்றும் சுயநிர்ணயம் தொடர்பான கட்டுரைகள் இந்த வகையில் முன்வைக்கப்பட்டது.

சுயநிர்ணயம் என்பதனை பிரிவினையாகவே தமிழ்த்தேசியமும், பேரினவாதமும் கருதுவது போல் தான், முன்னிலை சோசலிசக் கட்சியும் கருதுகின்றது. இதுவொரு அடிப்படையான அரசியல் கண்ணோட்டத் தவறுமாகும்.

பிரிவினையை மறுத்து பிரிந்து செல்லும் உரிமையைத்தான் சுயநிர்ணயம் முன்வைக்கின்றது. பிரிவினை வரும் போது ஒரேயொரு நிலையில் மட்டும் தான், அதாவது பாட்டாளி வர்க்க நலனுக்கு சாதகமாக இருந்தால் மட்டும்தான் பிரிந்து செல்வதை பாட்டாளி வர்க்கம் ஆதரிக்கும். மற்றைய எல்லா நிலையிலும் இதை எதிர்த்துப் போராடும். இதைத்தான் சுயநிர்ணயம் வரையறுக்கின்றது. சுயநிர்ணயத்தை முன்வைக்காமை பற்றி பேசுகின்றவர்கள் இந்த அடிப்படையில் நின்று விவாதங்களை முன்வைக்காமை என்பதே, இந்த விவாதத்தின் பலவீனமாகும்.

சுயநிர்ணயம் அல்லாத எந்தத் தீர்வையும், பாட்டாளி வர்க்கம் முன்வைப்பதில்லை. வேறு தீர்வுகளை மற்றைய வர்க்கங்களால் முன்வைக்கப்படும் போது, அதைப் பாட்டாளி வர்க்க நலனில் இருந்து மட்டும் சீர்தூக்கி அணுகுகின்றது. பாட்டாளி வர்க்க அரசியல் என்பது, வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்குத் தான்.

பி.இரயாகரன்

01.02.201