Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையில் மத முரண்பாடுகளை கூர்மையாக்கவே வேள்வித் தடை

அண்மைக்காலமாக மக்களைப் பிரித்தாளுவதற்கு, ஆளும் வர்க்கங்கள் மதத்தைக் கருவியாக்கத் தொடங்கி இருக்கின்றது. இதற்கு அமைவாக மதரீதியான அணிதிரட்டல்களும், மதரீதியான முரண்பாடுகளும் வன்முறைகளும் கூர்மையாகியுள்ளது. இதற்கு உதவும் வண்ணமே, அரசின் சிவில் சட்ட அமைப்பு முறைமை முடுக்கிவிடப்பட்டு இருக்கின்றது. இன-மத-சாதி வாத அடிப்படையில் இயங்கும் நவதாராளவாத சமூக அமைப்பின் நீதிமன்றங்களும், நீதிபதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

இதற்கு அமைவாகவே வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பின் பிரதிநிதியான இளஞ்செழியனின் தீர்ப்புகள் வெளிவருகின்றது. இந்துமதத்தை சாதி ஆகம மதமாக ஒருமைப்படுத்தும் அண்மைய முயற்சிகளுக்கு ஏற்பவே, எதிர்மறையான தீர்ப்புக்களை இளஞ்செழியன் வழங்கி வருகின்றார்.

மயானப் பிரச்சனைக்கு இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு இதே அடிப்படையிலானதே. மயானப் போராட்டம் சாதிரீதியாக பிளந்து இருக்கும் "இந்து" சமூகத்தை, ஒடுக்கும் சாதிக்கு எதிராக மக்களை அணிதிரட்டிய அதேநேரம், இந்து மதத்தை பிளவுபடுத்தும் வண்ணம் புத்தூர் மயானப் பிரச்சனை மக்கள் போராட்டமாக மாறியது. இதனாலேயே  குறித்த மயானத்தை பயன்படுத்துவதற்கு இளஞ்செழியன் தடைவிதித்தார். இதே போன்று வெள்ளாளிய சாதிய இந்து ஆகம முறைமைக்கு முரணாக, இந்துக்களை பிளவுபடுத்தும் வழிபாட்டு முறைமையைத் தடை செய்து இருக்கின்றார். இந்து ஒற்றுமையைப் பாதுகாத்து, இந்து மதத்தைப் பலப்படுத்தி மத மோதல்களுக்கு உதவுவதேயாகும். புலிகள் தமிழ் இனவாதத்தைப் பலப்படுத்த, செய்த அதே உத்தியும் அதே தந்திரமும்.

 

புலிகள் கையாண்ட அதே வழிமுறையை, சட்ட அதிகாரம் மூலம் இளஞ்செழியன் தீர்ப்பாக்கி இருக்கின்றார். புலிகள் அன்று வேள்வியைத் தடை செய்தது முதல், ஒடுக்கும் சாதிய சமூக நடைமுறையை "உறைநிலையில்" தொடர்வதை உறுதி செய்ததன் மூலம், தமிழ் இனவாதத்தை பலப்படுத்தி பிற இன மக்களை ஒடுக்கினர். இளஞ்செழியனின் தீர்ப்பு இந்து வெள்ளாளிய இந்து சாதிய சமூக அமைப்பை கட்டமைக்கின்ற அடிப்படையிலேயே, அவரின் சமூகம் சார்ந்த தீர்ப்புக்கள் அமைகின்றது. குறிப்பாக இலங்;கை சிவசேனாவின் அதே கொள்கையே, தீர்ப்பின் உள்ளடக்கமாகும். இதேபோல் யாழ்ப்பாணத்தில் இயங்கும் இந்திய தூதரகத்தின் நடைமுறையும், கொள்கையும் இது தான். யாழ் சமூகத்தை இந்துத்துவ சாதிய மத சமூகமாக மாற்றுவதே இன்று நடந்து வருகின்றது.

ஒடுக்கப்பட்ட சாதிகள் அண்மைய காலத்தில் உருவாக்கிய நூற்றுக்கணக்கான (புதிய –பழைய) கோயில்கள் அனைத்தும், ஒடுக்கும் சாதிகளின் இந்து சாதிய ஆகம வழிபாட்டு முறைகளையே பின்பற்றுவதாக மாறி இருக்கின்றது. ஒடுக்கும் சாதிகள் கட்டிய கோயில்களின் சாதி ஆகம விதிப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்கள் கட்டிய கோவில்களுக்குள் உள்ளே நுழைய முடியாது. இந்து மதம் மூலம் சாதி மயமாக்கம் கூர்மையாகி வருகின்ற இன்றைய இந்தப் பின்னணியில், எச்சசொச்சமாக இருப்பது "வேள்வி" மூலம் வழிபடும் முறைமையேயாகும். அதை அழிக்க யாழ் சாதிய சமூகம் தன் சொந்தப் பிரநிநிதி மூலம், அரச அதிகாரத்தை கையில் எடுத்து இருக்கின்றது. 

இந்தப் பின்னணியில் ஒடுக்கும் சாதிய ஆகம வழிபாட்டு முறையை அனைவரும் கடைப்பிடிக்கும் வண்ணம், "வேள்வி" தடை செய்யப்பட்ட இருக்கின்றது. அனைவரும் சாதிய இந்துத்துவ அடிப்படையில் ஒரே வழிபாட்டு முறைமையைக் கொண்ட இந்துக்களாக இருக்க, சாதிய ஆகம விதியை பின்பற்றும் வழிபாட்டு முறைக்கு தீர்ப்பு வழிகாட்டி இருக்கின்றது.

இதன் மூலம் அடிப்படை மனித உரிமையான, வழிபாட்டு உரிமையை இந்தத் தீர்ப்பு மறுதளித்து இருக்கின்றது. எப்படி வழிபட வேண்டும் என்ற தனிமனித உரிமையை மறுத்து, வழிபாட்டு முறைமையை ஒற்றைத் தன்மை கொண்ட இந்து சாதி மதம் மூலம் நிறுவனமாக்கி இருக்கின்றது.

இதை செய்வதற்காகவே "மிருகவதை" என்று, போலி முகமூடியை அணிந்து கொண்டு இருக்கின்றது. "மிருகவதை" குறித்த இந்தத் தீர்ப்பும், பொதுக் கருத்தும் கட்டமைத்திருக்கும் அனைத்தும், அறிவுபூர்வமானதோ, பகுத்தறிவு பூர்வமானதோ அல்ல.

உயிரைக் கொல்வது என்பது உயிர் வாழ்கின்ற எல்லா நிகழ்ச்சிப்போக்கிலும் காணப்படுகின்றது. இங்கு "உயிர் வதை" இன்றி உயிர் வாழமுடியாது. உணவு உட்கொள்ளும் செயற்பாடு, உயிரைக் கொல்வதில் இருந்து தொடங்குகின்றது. தாவர உணவு கூட உயிர் தான். தாவரத்தின் உயிரைப் பறிக்காமல், அது உணவாவதில்லை. ஒரு உயிரில் கூட, அதாவது ஒரு உடலில் எல்லையற்ற பல் இன உயிர்களாலானது. உணவுச் சங்கிலி என்பதும், உயிர் வாழ்தல் என்பதும், உயிர்களைக் கொல்லும் இடைவெளி இல்லாத நிகழ்ச்சிப்போக்கே. இது நின்று போனால், உயிர் வாழ்தல் நின்று விடும்.

இது போன்று நோய்க்கு எதிரான மருந்துகள் என்பது, உயிர்களைக் கொல்வதற்கான நிகழ்ச்சியாகும். இயற்கையில் உயிர் வாழ்தல் என்ற உயிர்ச் செயற்பாட்டில், ஒவ்வொரு கணமும் உடலுக்கு தீங்கான உயிர்களை கொல்லும் நிகழ்ச்சிகள் தானாகவும் தன்னிச்சையாகவும் நடந்து வருகின்றது.

முன்வைக்கப்படும் "உயிர் கொல்லாமை - உயிர் வதை" என்ற வாதம் அறிவியல் பூர்வமானதோ, பகுத்தறிவுபூர்வமானதோ அல்ல. கண்ணுக்கு தெரிவதை மட்டும் கொண்டு "உயிர் பலியாக – உயிர் வதையாகவும்" குறுக்கிக் கொள்கின்ற பகுத்தறிவற்ற பொதுப் புத்தியையே, மக்கள் விரோத பிற்போக்கு சக்திகள் தமது அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர்.

கண்ணுக்கு தெரியும் பொதுப்புத்தி அறிவான "உயிர் பலி - உயிர் வதையை" நெறிப்படுத்தி இருக்க முடியும். அதை ஜனநாயக அரசாக இருந்து இருந்தால், செய்திருக்க வேண்டும். தனிமனிதனின் வழிபாட்டு முறைமையையும், வழிபாட்டு உரிமையையும் அங்கீகரிக்கும் வண்ணம், உயிர்கள் பலியிடப்படும் முறைமையை நெறிப்படுத்தி இருக்க முடியும்;. உதாரணமாக முஸ்லிம்களின் "கலால்" முறைமையை மறுக்காத ஜரோப்பிய ஜனநாயகச் சட்டங்கள், வதையின்றிக் கொல்லப்படும் முறைமை மூலம் நெறிப்படுத்தி இருக்கின்றது. இறைச்சிக்காக வதை இன்றி கொல்லும் முறைமையை போன்று, வழிபாட்டுக்குரிய பலியிடத்தில் வலியற்ற பலிமுறைமையை பின்பற்ற வழிகாட்டுகின்றது.

யாழ் மையவாத வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பு என்பது, ஜனநாயகமற்ற அமைப்பு முறைமையாக இருப்பதால், மற்றவனின் வழிபாட்டு முறைமையை மறுப்பதன் மூலம் தன்னுடைய மதரீதியான சாதிய ஒடுக்குமுறையை நிறுவனப்படுத்தி வருகின்றது. இந்த வெள்ளாளிய சாதியச் சமூக அமைப்பின் பிரதிநிதியான இளஞ்செழியன், தனது அரச அதிகாரம் மூலம் இதை நிறுவி இருக்கின்றார்.

இதை சாதிய சமூக சிந்தனையிலான வெள்ளாளிய சாதிய சமூகம், தனது வெற்றியாக கொண்டாடுகின்றது. இளஞ்செழியனை தனது அடுத்த அரசியல் தலைவராக கருதி, தலையில் வைத்து ஆடுகின்றது. அதேநேரம் தமிழ் மக்களை ஒடுக்கும் பௌத்த – சிங்கள இன-மத வெறிக் கும்பல்கள், இந்த தீர்ப்பை ஆதரித்து இளஞ்செழியனை தனது பிரதிநிதியாக கொண்டாடுவது, வரலாற்றின் முரண்நகை தான். ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த அனைத்து ஒடுக்கும் இன-மதவாதிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றது என்பதை, வரலாறு இந்த தீர்ப்பு மூலமும் மீண்டும் நிறுவி இருக்கின்றது.