சண் ரிவி பவித்ரா : கொரோனா தொடர்பான அறிவியல் புரட்டுகள்
அறிவியலற்ற புரட்டுகள் இனம், மதம், சாதி, நிறத்தை .. முன்வைத்து கட்டமைக்கப்படும் நிலையில், தனிப்பட்ட நம்பிக்கையை அறிவாக உளறும் வக்கிரங்களும், உள்நோக்குடன் தங்கள் உணவை முன்னிறுத்தி கட்டமைக்கும் புரட்டுத்தனங்களும், கொரோனாவை மிஞ்சும் வைரஸ்சாக உலாவி வருகின்றது.
இதன் பின்னால் உணவுகள், போதைப் பொருட்கள், வெப்பநிலை, மதம் … என்று எண்ணற்ற வதந்திகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைத்துள்ள போலித்தனத்தின் பின்னணியில் சந்தை, இனவாதம், மதவாதம், நிறவாதம்.. தொடங்கி தனிப்பட்ட மதவாதிகள் கொழுத்து கும்பியடிப்பது வரை நடந்தேறுகின்றது.
இதன் எதிர்மறையில் “அறிவியல்பூர்வமான” பொய்களை அரசுகளும், ஊடகங்களும் முன்வைக்கின்றது. அரசைப் பாதுகாக்க, சந்தையை தக்கவைக்க, மருத்துவக் குறைபாட்டை மூடிமறைக்க.. அறிவையே திரிப்பது நடந்தேறுகின்றது.
அறிவியல் என்பது என்ன? ஆராயும் பொருளிள் இயற்கையை, இயற்கையாக அணுகுவதும் - அதை விளக்குவதும் தான்;. வர்க்கம், சாதி, இனம், நாடு.. சார்ந்து அணுகுவது அறிவல்ல. ஒவ்வொரு நாடும் கோவிட் 19 வைரசை அணுகுகின்ற வேறுபட்ட அணுகுமுறைகளும், அளவுகோல்களும், அறிவியல் திரிபில் இருந்தே வேறுபடுகின்றது. கொரோனா வைரஸ் உலகெங்கும் ஒரேவிதமான நிபந்தனைகளில் தகவமைத்தே பரவுகின்றது என்பதே உண்மை, இயற்கை விதிக்கு உட்பட்டு வைரஸ் இயங்க, இதை வேறுபட்ட விதமாக அணுகும் முறையும் - அதை விளக்கும் வடிவமும் அறிவியல்ரீதியாக திரிபுபட்டது. இங்கு அறிவியலும் திரிக்கப்படுகின்றது என்பதே பொருள்.
உண்மையில் என்ன நடக்கின்றது எனில் சமூக பொருளாதார கட்டமைப்பை தீர்மானிக்கின்ற சந்தைப் பொருளாதார அடிப்படையில், அறிவியலைத் திரிப்பது நடக்கின்றது. மூடிமறைத்து அரைகுறையாக, அரசின் தேவைக்கு ஏற்ப விளக்குவதும் - நடைமுறைப்படுத்துவதும் நடக்கின்றது. இயற்கையில் மக்கள் கூட்டம் என்ற அடிப்படையில் இருந்து, விளக்குவது நடைமுறைப்படுத்துவதும் கிடையாது. இது தான் நாடுகளுக்கு இடையிலான வேறுபட்ட அணுகுமுறைகள்.
கொரோனா குறித்து ஆறு வருடங்கள் (2006-2012) சிறப்புப் பட்டம் பெற்ற பவித்ரா, சண் தொலைக்காட்சியில் முன்வைத்த விடயங்களில் - சமகால கோவிட் 19 குறித்து பல தவறான கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் இந்த கோவிட் 19 குறித்;து கூறுகின்ற தரவுகள் - ஏற்கனவே மேற்கு ஏகாதிபத்தியங்கள் முரண்பட்ட அணுகுமுறையுடன் முன்வைத்த - அறிவியல் புரட்டுக்களை அடிப்படையாகக் கொண்டது.
கொரோனா வைரஸ் வரலாறு குறித்து, பட்டப்படிப்பு அடிப்படையில் உள்ளடங்கிய விடயங்கள் அறிவுபூர்வமானவைதான். ஆனால் கோவிட் 19 வைரஸ் குறித்து முன்வைத்த கருத்துக்கள் தவறானது. இது போன்று பலரும் இதை முன்வைப்பதால், பவித்ராவின் கருத்தை பலரும் காவிச் செல்வதால், விரிவாக சிலவற்றை ஆராய்வோம்.