கும்மியடிக்கும் இன, மத, சாதிய, பிரதேசவாத தேர்தலில் "தேசியம்"
ஒடுக்கப்பட்ட தேசத்தையும், தேசிய இனங்களையும் கொண்ட இலங்கையில், தேர்தல் அரசியல் என்பது மக்களை மேலும் இனவாதமாகி சிந்திக்கவும் - மோத வைப்பதுமே அரங்கேறுகின்றது. ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்கள் தலைமையை முன்வைத்து யாரும் வாக்குக் கேட்பதில்லை, மாறாக சுயநலம் பிடித்த ஒடுக்குவோரே இனவாதம் பேசி மக்களை பிரிக்கின்றனர். அதேநேரம் ஒடுக்குகின்ற தங்கள் முகமூடியை மூடிமறைக்க மதம், சாதி பிரதேசம் என்ற குறுகிய அடையாளங்களை முன்னிறுத்தி வேட்பாளரை நிறுத்துவதுடன் - சாதி, மத, பிரதேச ரீதியாக வாக்கைக் கோருகின்ற அளவுக்கு - தேர்தல் அரசியலால் மக்களை குறுக்கும் நெடுக்குமாக பிளந்துவிடுகின்றனர்.
இந்த குறுகிய மனித விரோதிகள் மத்தியில் இருந்து ஒளி தெரிவதாகக் கூறுகின்ற – காட்டுகின்ற, புலம்பல்களுக்கு குறைவில்லை. இதன் மூலம் சுயநலம் பிடித்த, தேர்தல் அரசியலை முன்வைக்கின்ற பிழைப்புவாதிகளின் பிழைப்புக்கு வழிகாட்டுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் பிழைப்பில், யார் அது என்பதை தேர்ந்தெடுக்க கோருகின்றனர். அதில் கொஞ்சம் நல்லவராக, வல்லவராக, ஊழல் அற்றவராக பார்த்து தேர்ந்தெடுக்க கோரும் பன்னாடைத்தனம் - அறிவாக புலம்பப்படுகின்றது.
ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களில் இருந்து சிந்திக்கும் எவரும், இந்தத் தேர்தல் கூத்தாடிகள் மக்களை இனம், சாதி, மதம், பிரதேசம் என்ற பிரித்து - பிளந்து விடும் மனித விரோத கூத்துக்கு துணைபோக முடியாது. இந்த உண்மையை மக்களுக்கு சொல்லாத எவரும், மக்கள் நலனின் இருந்து சிந்திக்கவில்லை என்பதே வெளிப்படையான உண்மை.