கோத்தபாய நல்லவராம்
தற்போது, இலங்கையின் அரசஅதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள கோத்தபாய ராஜபக்ச அவர்களையும், ராஜபக்ச குடும்பத்தையும் எவ்வாறு புரிந்து கொள்வது,- என்பது பற்றி கட்டுரைகளும் கருத்துக்களும் இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் எழுதி குவிக்கப்படுகிறது. இக்கட்டுரைகளை - கருத்துக்களை பெரும்பாலும் எழுதுவோர், தற்போது வடக்கு -கிழக்கு தமிழ் சமூகத்தில் கருத்தியல்ரீதியாக சமூகத்தை சென்றடையக்கூடிய எழுத்தாளர்களாகவும், பிரபலமான "அரசியல்" ஆய்வாளராகவும் இருக்கின்றனர்.
இவர்களில் மிகவும் பிரபலமானவர்கள் கடந்த காலத்தில் புலிகளுக்கும் பிரச்சார பீரங்கிகளாகவும், அவர்களின் அதிகாரத் துஷ்பிரயோகம், படுகொலைகள், பாசிச நடவடிக்கைகளை நியாயப்படுத்துபவர்களாகவும் ஆகவும் விளங்கியவர்கள்.
இவர்கள் தற்போது வேறு, வேறு கட்சிகளை பின்கதவால் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், தங்களுக்குள் அரசியல்ரீதியான சில முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இருந்தாலும், கோத்தபாய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவரின் அரசியல் போக்குகள் பற்றி மிகவும் நேர்மறையான கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். தம்மை அதிகாரத்துக்கு எதிரான சக்திகள் என கூறிக்கொள்வதில் இன்பமடையும் இவர்கள், அடிக்கடி பாவிக்குமோர் சொல் "அரசியல் அறம்". புலிகளுக்கு காவடி தூக்குவதற்கு முன், இவர்கள் உறுப்பினராகவிருந்த இயக்கங்களுக்காகச் செய்த கொலைகள், கொள்ளைகள் தொடக்கம் இன்று அதிகாரத்தில் இருக்கும் மஹிந்த குடும்பத்துக்கு பல்லக்கு தூக்கிக்கொண்டிருப்பது வரையான இந்த காலத்தில் - இவர்களின் "அரசியல் அறம்" எங்கு போனதென்று இவர்களால் பதில் கூற முடியாது. "ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி" என்பது தான் இவர்களில் அரசியல் அறம்.