பத்து வருடத்தின் பின் : போலி அஞ்சலிகளும் - புரட்டு நினைவுகளும்
யுத்தம் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டது. சமூக உணர்வு கொண்ட சமூகக் கூறு, சிந்தனைமுறையாகவில்லை. சமூக உணர்வற்ற யுத்தகாலச் சிந்தனை முறை, தமிழ் மக்களை தொடர்ந்து தோற்கடிக்கின்றது.
இன்றைய அஞ்சலிகளும், நினைவுகளும் யாரை முன்னிறுத்தி, எந்த அரசியல் பின்னணியில் செய்யப்படுகின்றது? தனிப்பட்ட சுயநல நோக்கங்களின்றி தம் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர்களை, அரசியல்ரீதியாக இனம் காட்டி அஞ்சலி செய்யப்படுகின்றதா? இல்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளிலும் இருந்து விடுபட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காகவே, தங்கள் வாழ்க்கையையும் - உயிர்களையும் அர்ப்பணித்த மனித உணர்வுகள் முன்னிறுத்தப்படுகின்றதா? இல்லை. அஞ்சலிக்குரிய தியாகிகள். ஒரு நாளும் தமிழனைத் தமிழன் ஒடுக்கி ஆள்வதற்காக தம்மைத் தாம் அர்ப்பணித்தவர்கள் அல்ல என்ற உண்மை முன்வைக்கப்பட்டு, அவர்கள் முன்னிறுத்தப்படுகின்றனரா? இல்லை. மாறாக மக்களை ஒடுக்கும் தரப்பு, மரணித்தவர்களின் நோக்கை மூடிமறைக்கவே போலி அஞ்சலிகளையும் நினைவுகளையும் பேணுகின்றனர்.