பகுத்தறிவுவாதிகள், பெரியாரிஸ்ட்டுகள், ஜனநாயகவாதிகள்.., தேர்தல் மூலம் மோடியைத் தோற்கடிக்குமாறு கோருகின்றனர். இந்த வழியைத் தவிர வேறு வழியில் மோடி பாசிசத்தை தோற்கடிக்க முடியாது என்பதே, இத்தகைய முதலாளித்துவ புத்திஐPவிகளின் பொதுக் கண்ணோட்டமாகும். இவாகள் கூறுவது போல் இந்த தேர்தல் மூலம் மோடி பாசிசத்தை தோற்கடிக்க முடியாது போனால், இவர்கள் என்ன சொல்வார்கள்? என்ன செய்வார்கள்? அடுத்த தேர்தல் வரை காத்து இருக்கக் கோருவார்களா!? இவர்கள் கூறுவது போல் வேறு மாற்று கிடையாதல்லவா!
இல்லை, நாங்கள் பாசிசத்தை எதிர்த்து மக்களின் அதிகாரத்துக்காக போராடுவோம் என்று கூறுவார்களெனின், அதைத்தான் இந்த தேர்தலில் மக்களுக்கு சொல்லி இருக்க வேண்டும். அது மட்டுமே பகுத்தறிவாகும். காவிமயமாகியுள்ள பார்ப்பனியத்துக்கு எதிரான உலகக் கண்ணோட்டம். பாசிசத்துக்கு எதிரான மக்களின் ஜனநாயகத்துக்கான குரலாகும். இதற்கு மாறாக முதலாளித்துவ புத்திஜீவிகளின் செயற்பாடுகள் தான், காவி காப்பரேட் பாசிச சிந்தனைமுறையாக, சமூகத்தில் ஊற்றெடுக்கின்றது.
மறுபக்கத்தில் சமூக மாற்றம் மூலம் மக்கள் அதிகாரம் என்பது மக்களின் சிந்தனையாக, நடைமுறையாக உருவாகும் வரை, தேர்தல் முறை இருந்து கொண்டே இருக்கும். மக்கள் வாக்களித்துக் கொண்டு இருப்பார்கள். தேர்தல் மூலம் எந்த சமூக மாற்றமும் நடக்கப்போவதில்லை, வெறும் முகமாற்றம் மட்டுமே சாத்தியம். இப்படி இருக்க தேர்தலை விட்டால் வேறு என்ன தீர்வு என்று கேட்பது பகுத்தறிவல்ல. அறிவுத்துறைக்குரிய நேர்மையுமல்ல. இதுதான் முதலாளித்துவ அறிவுத்துறைக்கேயுரிய வர்க்க நிலைப்பாடாகுமே ஒழிய ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைப்பாடல்ல. சினிமாவில் மக்களின் விருப்புக்கும், ரசனைக்கும் படம் எடுக்கின்றோம் என்று கூறி, பெண்ணை பாலியல் உடலாகக் காட்டுகின்ற அதே தர்க்கவாதம் தான்.
மக்களை அரசியல்ரீதியாக விழிப்பூட்டுவதுதான், தேர்தல் குறித்த பகுத்தறிவுவாதமாகும். ஒடுக்கப்பட்ட வர்க்கம் தன் வேட்பாளரை தேர்தலில் நிறுத்தி தன் வர்க்கப் போராட்டத்தின் கூறாக தேர்தலைப் பயன்படுத்தாத போது, தான் அல்;லாத ஒடுக்கும் வர்க்கத்திற்கு வாக்களிக்க கோருவதல்ல. பார்ப்பனியமாக இருக்கக்கூடிய ஆணாதிக்கம், மதவாதம், சாதியவாதம்.. போன்ற ஒடுக்குமுறைகளை தங்கள் கட்சிக் கொள்கையாகக் கொண்டுள்ள, ஒப்பீட்டளவில் ஒடுக்குமுறை குறைந்த ஒன்றை தெரிவு செய்யுமாறு கோருவதே, முதலாளித்துவம் கூறும் மாற்றாக இருக்கின்றது. இங்கு மாற்று என்பது போலியானது, மக்களை தவறாக வழிகாட்டி ஏமாற்றுவதுதான் முதலாளித்துவ மாற்று.
தேர்தல்முறை ஆட்சி வடிவமாக இருப்பதும், வாக்களிப்பது என்பது எதார்த்தமாக இருக்கின்றது. யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் சொந்த அனுபவத்தில் இருந்து எடுக்கின்றனர். இல்லையென்றால் இனம், மதம், சாதி, பால், பணம்.. சார்ந்த தூண்டுதல்கள், மூலம் வாக்கைப் போடுகின்றனர். மறுபக்கத்தில் கட்சிகள் அறிவிக்கும் சலுகைகள், சீர்திருத்தங்கள் … மூலம், தங்கள் வாழ்க்கை மாறும் என்று நம்பி வாக்களிக்கின்றனர். இங்கு முதலாளித்துவ அறிவுத்துறை முன்வைக்கும் பாசிச எதிர்ப்புக் கொள்கை அடிப்படையில், மக்கள் வாக்கு போடுவதில்லை.