தென்னிந்திய திருச்சபையின் பின்னணியில் (தமிழ்) இடதுசாரி அரசியல்
1980 களில் புலிகள் தொடங்கி இன்றைய கூட்டமைப்பு வரை, தென்னிந்திய திருச்சபையின் அனுசரணை பெற்ற அரசியல் தலையீடு, தமிழ் அரசியல் திசைவழியைத் தீர்மானித்து வந்திருக்கின்;றது. இயக்கங்களின் ஜனநாயக மறுப்புக்கு எதிரான ஜனநாயக அரசியல் திசைவழியை தீர்மானிப்பதிலும் கூட, தீர்க்கமாக தலையிட்டு வந்திருக்கின்றது. இவை அனைத்தும் மேற்கு சார்பு அரசியலை முன்னிறுத்தியதுடன், மேற்கு தலையீடுகள் மூலம் அரசியல் தீர்வு என்னும் நம்பிக்கையை வழிகாட்டியது, வழிகாட்டுகின்றது,
இந்த வகையில் வலது முதல் இடது வரையான, தமிழ் மொழி அரசியலில், தென்னிந்திய திருச்சபையின் அனுசரணை பெற்ற தலையீடுகளும் - வழி நடத்தலும் சமூகத்தை பின்நோக்கி நகர்த்தி வந்திருக்கின்றது. இன்று இலங்கை தமிழ் இடதுசாரியத்துக்குள் புகுந்துள்ளனர்.
தமிழ் மொழியிலான இலங்கை இடதுசாரியமானது, வர்க்கப் புரட்சியை முன்வைக்கும் வர்க்கக் கட்சியாக இல்லாத அதன் வர்க்க அரசியல் வறுமையை பயன்படுத்தி, அதற்குள் ஊடுருவி வருகின்றது. அதாவது புரட்சிகரக் கட்சிக் கொள்கை, புரட்சிகரமான வர்க்க நடைமுறை, புரட்சிகரமான அமைப்பு வடிவத்தைக் கொண்டு இருக்காத தமிழ் சூழலை, தென்னிந்திய திருச்சபையின் பின்னணி கொண்ட தனிநபர்களின் ஆதிக்கத்துக்குள்ளாகி வருகின்றது. கட்சி முதல் கட்சி அல்லாத உதிரிகள் வரை, அதன் செல்வாக்கில் சிக்கி வருகின்றனர். இடதுசாரியம் பேசுவதன் மூலமும், தன்னார்வ நிறுவனங்கள் மூலமான ஆய்வுகள் முதல் தங்களிடத்தில் உள்ள நடைமுறை வளங்களைக் கொண்டும், பொருளாதார பலம் மற்றும் பௌதிக வளங்களை கொண்டும், இடதுசாரியத்தை தன்வசப்படுத்தி வருகின்றது.
இந்த தென்னிந்திய திருச்சபையின் பின்னணியென்பது, அமெரிக்காவின் நலனைப் பேணிப் பாதுகாக்கும் அரசியல் பின்னணியையும், அதற்கான பலத்தையும் கொண்டது.
தென்னிந்திய திருச்சபையானது 1947 ஆண்டில் தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்த லண்டன் மிசனெரி சங்கம், மதுரை அமெரிக்கன் மிசன், மற்றும் யாழ்ப்பாணம் அமெரிக்கன் மிசன் சபை… ஒன்றுசேர்ந்து உருவாக்கியது. அதாவது தென்னிந்திய ஆங்கிலிக்கம், மெதடிஸ்ட், பிரெஸ்பிட்டேரியன் மற்றும் புரட்டஸ்தாந்து ஆகிய திருச்சபைக் குழுக்களை இணைத்து உருவாக்கப்பட்டது. இது இலங்கையில் இரண்டாவது மிகப்பெரிய கிறிஸ்தவ குழுவாகும். பாரிய பணபலப் பின்னணியைக் கொண்டுள்ளதுடன், இலங்கையில் 187 பாடசாலைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கின்றது.