ஈழத்து இலக்கியப் பாரம்பரியமும் - வலதுசாரிய சைவ-சனாதன-சாதிவாத அரைகுறை "இலக்கிய" விமர்சனங்களும்
ஜெயமோகன் என்ற இந்திய சனாதன எழுத்தாளனும் அவரின் சீடர்பிள்ளைகள் என கூறிக்கொள்ளும் சில இலங்கை எழுத்தாளர்களும், இலங்கையின் தமிழ் இலக்கிய பாரம்பரியத்தை -குறிப்பாக இடதுசாரிய இலக்கிய வரலாறை முற்றுமுழுதாக மறுத்து - இடதுசாரிய இலக்கியம் என்று ஒன்று இல்லை என்ற வகையில் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜெயமோகன் மற்றும் இந்தியர்களின் நிழலில் நின்று ஈழத்து இலக்கிய பாரம்பரியத்தை- வரலாற்றை நிராகரிப்பதென்பது, அவர்களின் இலக்கிய கோட்பாட்டின் அடிப்படையில் சரியானதே. அவர்களின் கோட்பாடென்பது சைவ சனாதன – சமூகமறுப்பு சார் - தனிமனித பார்வை கொண்டது. அவர்கள், மார்க்சிச பாரம்பரியத்தை- உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலான முரண்பாட்டின் உற்பத்திப்பொருளாக உருவாகும் "அந்நியமாதலை" அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் இலக்கியத்தை இலக்கியம் இல்லை என மறுப்பது சரியானதே. ஒரு வலதுசாரி சனாதன எழுத்தாளார்களிடம் வேறு எதை எதிர் பார்க்க முடியும்
இங்குள்ள பிழை என்னவென்றால், இந்த வலதுசாரி சனாதன சக்திகளையும், "எல்லாவகை பாரம்பரியங்களையும்" ஈழத்து முற்போக்கு இலக்கியமென்று- கும்பலில் கோவிந்தா என தலையில் வைத்துக் கொண்டாடிவிட்டு இப்போ, அவர்கள் அங்கீகாரத்தை மறுக்கும்போது, குத்துது, குடையுது என்று கூப்பாடு போடுவதில் எந்தவொரு பிரயோசனமுமில்லை. முதலில், இந்த வலதுசாரிய - சனாதன இலக்கியவாதிகளை இலக்கிய -அரசியல் கோட்பாட்டு ரீதியில் எதிர்க்க வேண்டுமானால்- அவர்களுக்கு எதிரான மாற்று கருத்துள்ளவர்கள் இணைத்து இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். இதை விடுத்தது, அவர்கள் ஏதோ தவறு செய்து விட்டதாக கூறுவது நல்லதல்ல.