சாதி சமூகம் என்பது, ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டமாக எதிர்மறையில் பிரித்து விடுகின்றது. சாதிக்கொரு வாழ்வியலாக, மனிதர்களைப் பிறப்பில் இருந்தே பிரித்து விடுகின்றது. இதைக் கண்காணிப்பதும், அதன்படி ஒழுகுவதும் வாழ்க்கை முறையாகவும், சாதிப் பெருமையாகவும் பீற்றப்படுகின்றது.
இந்த சாதிய அடிப்படையில் ஓடுக்குவது – ஓடுக்கப்படுவது என்பது, சாதிக்குச் சாதி இடம்மாறிக் கொண்டு இயங்குகின்றது. அதாவது சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொள்பவன், இன்னுமொரு நிலையில் சாதி ஓடுக்குமுறையாளனாக இருக்கின்றான். தான் ஒடுக்குவதற்கு ஓரு சாதி கீழ் இல்லாத நிலையில் உள்ள சாதியும், தனக்கு மேல் இருந்து ஓடுக்க ஒரு சாதி இல்லாத சாதிகள் தவிர, அனைத்தும் ஓடுக்கப்படவும், ( சாதிப் படிநிலையில் ஆக அடியில் வைக்கப்பட்டவனும், ஆக மேல்நிலையில் உள்ளதாக தன்னை கருதுபவனும்) அதேநேரம் ஓடுக்கும் சாதிய வடிவங்களாகவே, இந்திய சாதிய சமூக அமைப்புமுறை இருக்கின்றது. சாதிய ஓடுக்குமுறை வடிவமானது, சாதிய படிநிலைக்கு ஏற்ப, பண்பு ரீதியாகவும் அளவு ரீதியாகவும் மாறுபடுகின்றது.
நவதாராளவாதத்தில் ஒடுக்கும் சாதி வடிவில் மேல்நிலையில் உள்ள சாதிகள், இடை நிலையில் உள்ள சாதிகள் போல், நேரடியான வன்முறையில் ஈடுபடுவதில்;லை. ஓடுக்குவதில் மேல்நிலையில் இருக்கும் சாதி ஓடுக்குமுறை என்பது நவதாராளவாத வடிவத்தைக் கொண்டதாக, தன்னைத்தான் தகவமைத்து கொண்டு வருகின்றது. "நாங்கள் சாதி பார்ப்பதில்லை, எங்கே சாதி இருக்கின்றது" என்று கூறும் - கேட்கும் குரல்கள், நவதாராளவாத சாதிய வடிவத்துக்குள் சாதியை நிலைநிறுத்தும், மேல்நிலைச் சாதிய நவீன வடிவங்களாகியுள்ளது. சாதியை வன்முறை வடிவில் குறுக்கிவிடுகின்ற பொதுப் புத்தி, நவதாராளவாத சாதியத்தை காண முடியாததாக மாற்றுகின்றது.
இந்த வகையில் ஓடுக்கும் சாதியப் படிநிலையில் மேலுள்ள நவதாராளவாத சாதி ஓடுக்குமுறையை 'பரியேறும் பெருமாள்' சினிமா காட்சிப்படுத்தவில்லை. மாறாக சாதிய வன்முறையில் ஈடுபடும் இடைநிலைச் சாதிகளையே, சாதியாக, சாதிய ஒடுக்குமுறையாக காட்டியிருக்கின்றது. அதாவது சாதியை வன்முறை வடிவமாக மட்டும், காட்டி இருக்கின்றது. சாதியத்தின் ஒரு சிறிய கூறு தான் சாதிய வன்முறை. வன்முறை மூலம் சாதியை விளங்கிக் கொள்ளுதல் - விளக்குதல் என்பது, நவதாராளவாத சாதியை பாதுகாத்தல் தான். சாதியென்பது பார்ப்பனியச் சிந்தனையாகவும் - வாழ்வியலாகவும் இருக்க, இதில் ஓரு கூறுதான் சாதிய வன்முறை. 'பரியேறும் பெருமாள்' சாதிய வன்முறையை, சாதியாக காட்டி இருக்கின்றது.