யுத்தம் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டது. சமூக உணர்வு கொண்ட சமூகக் கூறு, சிந்தனைமுறையாகவில்லை. சமூக உணர்வற்ற யுத்தகாலச் சிந்தனை முறை, தமிழ் மக்களை தொடர்ந்து தோற்கடிக்கின்றது.
இன்றைய அஞ்சலிகளும், நினைவுகளும் யாரை முன்னிறுத்தி, எந்த அரசியல் பின்னணியில் செய்யப்படுகின்றது? தனிப்பட்ட சுயநல நோக்கங்களின்றி தம் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர்களை, அரசியல்ரீதியாக இனம் காட்டி அஞ்சலி செய்யப்படுகின்றதா? இல்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளிலும் இருந்து விடுபட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காகவே, தங்கள் வாழ்க்கையையும் - உயிர்களையும் அர்ப்பணித்த மனித உணர்வுகள் முன்னிறுத்தப்படுகின்றதா? இல்லை. அஞ்சலிக்குரிய தியாகிகள். ஒரு நாளும் தமிழனைத் தமிழன் ஒடுக்கி ஆள்வதற்காக தம்மைத் தாம் அர்ப்பணித்தவர்கள் அல்ல என்ற உண்மை முன்வைக்கப்பட்டு, அவர்கள் முன்னிறுத்தப்படுகின்றனரா? இல்லை. மாறாக மக்களை ஒடுக்கும் தரப்பு, மரணித்தவர்களின் நோக்கை மூடிமறைக்கவே போலி அஞ்சலிகளையும் நினைவுகளையும் பேணுகின்றனர்.
மக்களை ஒடுக்குமுறைகளில் இருந்து விடுவிக்க போராடியவர்களுக்கு தலைமை தாங்கியவர்கள், மக்களை ஒடுக்குவோராக மாறியதே வரலாறு. இந்த வரலாற்றை மூடிமறைக்க போலி நினைவுகளுள் - அஞ்சலிகள்;. யார் மக்களை ஒடுக்கினார்களோ அவர்களை முன்னிறுத்தி அஞ்சலிகளும் நினைவுகளும். மக்களுக்;காக மரணித்தவர்களின் முதுகில் குத்தியதும், குத்துவதுமே இதன் பின்னுள்ள அரசியல். மக்களைத் தொடர்ந்து ஒடுக்கும் தங்கள் சொந்த அதிகாரத்துக்காகவே, அவர்கள் போராடியதாகவும் - தியாகம் செய்ததாகவும் காட்டிக் கொள்ளவே, போலி அஞ்சலிகள். இதன் மூலம் தொடர்ந்து ஓடுக்கும் அரசியலை முன்வைக்கின்றனர். இதுதான் புலிகள் முதல் அனைத்து தரப்பினரதும் அரசியலாகவும் இருக்கின்றது. பொருளாதாரரீதியான தனிநபர்களின் மனிதாபிமான உதவிகள் கூட, சமூக உணர்வற்ற மரக்கட்டைகளை உருவாக்கவும், சமூக ஒடுக்குமுறைகளை பூசிமெழுகிவிடவும் முனைகின்றது.
ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவனின் வாழ்க்கை
ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி இன்று உயிருடன் இருப்பவனோ, தானும் - தன் சமூகமும் எந்த ஒடுக்குமுறையிலும் இருந்து விடுபடாத அவலத்தையே, தனது சொந்த வாழ்வாக்கி இருக்கின்றான். தனக்கு தலைமை தாங்கி நின்றவன், நிற்பவன் தன்னை சமூகரீதியாக – பொருளாதாரரீதியாக ஒடுக்குவதையும் காண்கின்றான். இதுதான் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவன் முன்னுள்ள எதார்த்தம்.
தமிழ் தேர்தல் கட்சிகளின் அரசியல் முதல் இயக்க அஞ்சலிகள் - நினைவுகள் வரை இதைத் தாண்டி, ஓடுக்கப்பட்ட மக்களை இட்டு கடுகளவு கூட அக்கறைப்பட்டதில்லை, அக்கறைப்படுவதில்லை. இதனால் தான் இன முரண்பட்டால் கொல்லப்பட்ட போது மக்களையிட்டும், பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை இட்டும், யாரும் அரசியல்ரீதியாக அக்கறைப்படுவதில்லை. போலி கண்ணீரைக் கொண்டு ஏமாற்றிப் பிழைக்க, நினைவுகளை தங்கள் அரசியல் பிழைப்பாகக் கொண்டாடுகின்றனர்.
சமூக ஒடுக்குமுறைக்குள் தொடர்ந்து வாழ்கின்ற உயிருள்ள மனிதர்களையிட்டு அக்கறைப்படாத தங்கள் சுயரூபத்தை மறைக்கவே, இயக்க அஞ்சலிகளையும் - நினைவு நாட்களையும் நடத்துகின்றனர். மக்களுக்காக இறந்தவர்களை தங்களுக்காகவும் - தங்களின் அரசியலுக்காகவுமே மரணித்ததாக இட்டுக் கட்டுகின்றனர்.
இந்த வகையில் மக்களுக்காக மரணித்த ஒடுக்கப்பட்டவர்களின் தியாகங்களை, ஒடுக்குகின்றவர்கள் ஒருநாளும் அங்கீகரிப்பதில்லை. அவர்களுக்கான அஞ்சலியைச் செலுத்துவதுமில்லை. மாறாக ஒடுக்குகின்றவர்கள் ஒடுக்கப்பட்டவர்களின் தியாகங்களை, தங்கள் ஒடுக்கும் அரசியலுக்காக மரணித்ததாக காட்டி, தொடர்ந்து பிழைக்க முற்படுகின்றனர்.
வரலாற்றுரீதியாக பார்த்தால் இனவொடுக்குமுறைக்கு உள்ளான தமிழ்மொழி பேசும் மக்களின் போராட்டமானது, ஒடுக்கும் தமிழ் தலைமையினால் ஏமாற்றப்படுவதே நடந்தேறியது. ஒடுக்கப்பட்டவர்களின் தியாகங்கள், அர்ப்பணிப்புகள்.. எதுவும் ஒடுக்கும் தமிழ் தரப்பால், அரசியல்ரீதியாக அங்கீகரிக்கப்பட்டது கிடையாது.
போராடியவர்கள் எந்தவிதமான சுயநல நோக்கமும் இன்றி, தம் வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்தவர்கள். இதன் மூலம் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை, எதிர்காலக் கனவாக கண்டவர்கள். தூம் யாருக்காக போராட வந்தனரோ அந்த மக்களை அடக்கி ஆள்வதற்;கான, தமிழனின் அதிகாரமாக வெல்ல வேண்டும் என கனவிலும் கூட நினைத்திருக்கவில்லை. அன்று போராட்டத்தை நடத்திய எல்லா இயக்கத்திலும் இணைந்து போராடியவர்கள் (தலைமை எங்கு கொண்டு செல்கின்றது என்பதை அறியாதார்களாய் இருந்தும்) அனைவரதும் விருப்பமும் - தேர்வும் இது தான். இந்த விருப்பமும், தேர்வும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்ததுடன், அதுவே இன்று வரையான மக்களின் கனவுகளும் கூட.
ஒடுக்கப்பட்ட மக்களின் மகிழ்சிக்கான அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் வழிநடத்தியவர்கள், மக்களை ஒடுக்கும் தங்கள் அதிகாரத்துக்காக அதை மாற்றிக் கொண்டனர். இப்படி உருவான இயக்கத் தலைவர்கள், அதன் வழிவந்தவர்கள், இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் தியாகத்தையும், உயிருடன் உள்ள ஓடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும் மறுத்து வருகின்றனர்.
மக்களை ஓடுக்கும் அரசியல் மூலம் தலைவர்களானவர்களும், அவர்களை அண்டிப் பிழைத்தவர்களும், போராட்டத்தை வியாபாரமாக்கிக் கொண்டனர். அன்னிய நாடுகளின் கைக்கூலிகளாகினர். போராட்டத்தையும், தியாகத்தையும் இந்தியா முதல் அமெரிக்கா வரை விற்றுப் பிழைத்தனர், பிழைக்கின்றனர். போராட்ட நிதியாதரங்களை தங்கள் தனிப்பட்ட சொத்தாக்கிக் கொண்டனர். இவர்களே இன்று தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகவும், மக்களை ஓடுக்கும் தலைமையாகவும் தொடருகின்றனர்.
அதேநேரம் போராட்டத்தில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள், வறுமையிலும், எந்த போக்கிடமுமின்றி அனாதையாக்கப்பட்டு இருக்கின்றனர். தம் உறவுகளை தியாகம் செய்துவிட்டு குடும்பங்கள், வாழ வழியற்று கிடக்கின்றனர். காணாமலாக்கப்பட்ட குடும்பங்கள் வீதி வீதியாக அலைகின்றனர். யுத்தம் பலியெடுக்கவும் - பலிகொடுக்கப்பட்டதுமான சமூகம், தன்னைத்தான் இழந்து நிற்கின்றது. அங்கவீனமானவர்களின் வாழ்வியல் சொல்லிமாளாது. தாய் தந்தை இழந்த குழந்தைகள், மனிதத் தன்மையற்ற அனாதை விடுதிகளின் துன்பங்கள் - துயரங்களுடன் பரிதாபிக்கின்றனர். தங்கள் வாழ்வுத் துணையை இழந்த பெண்கள், பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். கையேந்துவதை படம் பிடித்துக் காட்டுவதன் மூலம், நடைப்பிணமாகின்றவர்களின் துயரம் சொல்லிமாளாது. அவலங்கள், துயரங்கள் பலருக்கு பணம் சம்பாதிக்கவும், ஏமாற்றிப் பிழைக்கவும், பிரபலமாகவும் உதவுகின்றது, தேர்தல் அரசியல் செய்யவும், பணம் திரட்டிப் பிழைக்கவும், சமூகம் மீது அதிகாரம் செய்யவும், மதம் மாற்றவும், மக்களை மதமயமாக்கவும், மத அடிப்படை வாதங்களை திணிக்கவும், பாலியல் ரீதியாக வன்முறைக்குள்ளாக்கவும், உழைப்பைச் சுரண்டவும், படம் பிடித்து தங்களை உதவிபுரியும் மனிதாபிமானிகளாகக் காட்டிக்கொள்ளவுமே, எழுதுவதன் மூலம் சமூக வலைத்தளத்தில் பிழைக்கவும், தமிழக உணர்ச்சி அரசியல் செய்யவும் .. உதவுகின்றது. இதுதான் யுத்தத்தின் பின்னான 10 வருட அரசியலாக, மனிதாபிமானமாக - சமூகத்தின் குறுக்கு நெடுக்கான வெட்டுமுகமாக இருக்கின்றது.
இன முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் - அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்டவராக மக்களை அணிதிரட்டவும் மறுத்து, அவர்களை ஒடுக்கும் அரசியல் மூலம் எப்படி ஒடுக்க முனைகின்றனரோ, அதேபோல் கொல்லப்பட்ட மக்களின் தியாகங்களை அங்கீகரிக்க மறுக்கின்றனர். மக்களை ஒடுக்கும் தங்கள் இருப்புக்கு ஏற்ப அஞ்சலிகளை அங்கீகரிக்கும் இயக்க - இனவாத – தேர்தல் அரசிலுக்கு அப்பால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பொது அஞ்சலிகளையும், நினைவுகளையும் மறுக்கின்றனர்.
மக்களை ஒடுக்கும் அரசியலைக் கொண்ட தரப்பிடம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அஞ்சலியைக் கோருவது என்பதும், அப்படி செய்வதாக நடிப்;பதை நம்புவதும் என்பது, எம்மை நாம் ஏமாற்றிக் கொள்வதே. இதைத் தாண்டி ஓடுக்கப்பட்ட மக்களுக்கான அஞ்சலியை முன்னெடுத்துவிட முடியாது. ஒடுக்கப்பட்ட அரசியல் மூலம் தான், ஓடுக்கப்பட்ட மக்களுக்கும் - போராளிகளுக்கும் அஞ்சலியைச் செலுத்த முடியும்.
மக்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபட்டு மகிழச்;சியான வாழ்வுக்காக தங்களை அர்ப்பணித்தவர்களின் உணர்வுகளை, எமதாக்கிக் கொண்டு வாழ்வதும் - போராடுவதுமே உண்மையான அஞ்சலிகளாக, நினைவுகளாக இருக்க முடியும்.