பல்வேறு அவலங்களுக்கு மத்தியில் ஏங்கித் தவிக்கும் மக்களே, வேதனையிலும் விரக்தியிலும் மூழ்கியுள்ள மக்களே, ஒன்றுமே நடக்கவில்லை என்பதை போன்று அடுத்தநாள் எல்லாவற்றையும் மறந்துவிடும் மக்களே! இது எமது கண்ணில் படாத அல்லது நாங்களாகவே மறந்துவிட்ட எமது தோழர்களினதும் தோழிகளினதும் பரிதாப நிலையாகும்.
மஸ்கெலியாவைச் சேர்ந்த வசந்தகுமாரின் மனைவி பீ.கே. தர்ஷனீ தோட்டத் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை பராமரிக்கப் போதாமையால் வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாக சவூதிக்கு செல்ல தீர்மானித்தார். நாளொன்றிற்கு 600 ரூபா சம்பளத்திற்கு கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களின் வாழ்வில் சொத்து சுகம் என்ற வார்த்தை எட்டிக் கூட பார்ப்பதில்லையல்லவா. இந்த நிலைதான் தர்ஷனிக்கும். ஒரு பிள்ளையின் தாயான தர்ஷனீ அடிமைத் தொழிலுக்குச் சென்று சீல் வைக்கப்பட்ட பெட்டியில் வெறும் எலும்புக் கூடாக இந்நாட்டிற்கு வர நேருமென்று குடும்பத்தவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதுதான் நடந்தது. தான் கர்ப்பமுற்றிருந்த சமயத்தி;ல் கணவன் பட்ட கடனை திருப்பிச் செலுத்த முடியாமையாலும், தோட்டத் தொழிலாளியான அவரது கணவருக்கு கிடைக்கும் சொச்ச சம்பளத்தைக் கொண்டு குடும்ப செலவீனங்களை பூர்த்திசெய்ய முடியாமையினாலும் குடும்பத்தை சுமப்பதற்கு ஓரளவாவது ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அவர் பணிப்பெண்ணாக சவூதிக்குச் சென்றார்.