கடந்த ஆட்சியில், அரசியல் காரணங்களால் உயிராபத்தை எதிர்நோக்கி நாட்டை விட்டு வெளியேறிய அனைவரும் மீள வந்து செயற்படுவதனை உறுதி செய்வதே, தமது முக்கிய பணிகளில் ஒன்று என வாக்குறுதி அளித்தே மைத்ரி -ரணில் அரசு பதவிக்கு வந்தது. அத்துடன் மகிந்தா நாட்டு மக்களிற்கு மறுத்த ஜனநாயகத்தை மீள உறுதி செய்வதும் தனது முக்கிய பணி எனவும் உறுதி அளித்திருந்தது.
ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் தேர்தலை வெல்வதற்காக வழங்கப்பட்ட பொய்கள் என்பது உறுதியாகியுள்ளது. இந்நாட்டில் ஊழல் பேர்வழிகள், கொலைகாரர்கள், நாட்டைக் கொள்ளை அடித்தவர்கள், உலகப்பயங்கரவாதிகள், சர்வதேசக் காவற்துறையான இன்ரபோலினால் தேடப்படுபவர்கள் என அனைத்து கிரிமினல்களும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள்.
தனது பிரஜாவுரிமையை மீளக் கோரியதற்காகவும், அரசியல் செய்யும் உரிமையினை உத்தரவாதப்படுத்துமாறு கோரியதற்காகவும், இலங்கைப் பிரஜை குமார் குணரத்தினத்திற்கு ஓராண்டு கால சிறைத்தண்டனையையும், 50,000 ரூபா அபராதமும் விதித்து இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் நீதிமன்றம் தீர்ப்பு எழுதியுள்ளது. மேற்படி அரசியற் பழிவாங்கலுக்கு ஆளாக்கப்பட்ட தோழர். குமார் குணரத்தினம், தீர்ப்பு வழங்கபட முன்பு, 24. பங்குனி 2016 அன்று கேகாலை நீதி மன்றத்தில் வழங்கிய சாட்சிய உரை: