பாடுபடத் தொடங்கி வருடங்கள் 200 தோட்டத் தொழிலாளர் எமக்கு வீட்டு முகவரி இல்லை
போராட அணிவகுப்போம்.
நாங்கள் இன்றுவரை 45 சதுர அடிக்கும் குறைவான லைன் அறைகளிலேயே வாழ்கின்றோம். எமது முந்தைய தலைமுறையினர் அனைவரும் இங்குதான் பிறந்தார்கள், இந்த லைன் அறைகளிலேயே மடிந்தார்கள். எமது பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் இப்படித்தான் வாழ வேண்டுமா? இன்னும் எத்தனை தலைமுறைகள் இப்படியே வாழ வேண்டும்.
புகையிரதப் பாதைகளை அமைத்ததும், நெடுஞ்சாலைகளை அமைத்ததும் எமது மூதாதையரின் கரங்களே. அவர்கள் சிந்திய இரத்தம், வியர்வை, கண்ணீரினால் ஆயிரக்கணக்கான கோப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், இரப்பர் தோட்டங்கள் செழித்து வளர்ந்தன. அந்தத் தோட்டங்களுக்கு உரிமையுடைய கம்பனிகளின் துரைமார்களுக்கு கொழும்பில் கட்டப்பட்ட மாளிகை போன்ற வீடுகள் உள்ளன. உல்லாச வாகனங்கள் உள்ளன. அது மட்டுமல்ல, எமது வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த அமைச்சர் மற்றும் பிரதானிகளின் சுகபோக வாழ்விற்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், வீடு கட்டிக்கொள்ள எமக்கு ஒரு காணித்துண்டும் கிடையாது. குடியிருக்க வீடு கிடையாது. தண்ணீர் கிடையாது. கழிவறைகள் கிடையாது. போக்குவரத்து வசதிகள் இல்லை. பிள்ளைகளுக்கு படிக்க வசதியில்லை. போசாக்கின்மையால் நோய்களுக்கும் குறைவில்லை.