Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

லலித் - குகன் எங்கே? லலித்தின் தந்தை மீண்டும் கேட்கின்றார்.

முன்னிலை சோசலிசக் கட்சியானது,   மனித உரிமை செயற்பாட்டாளர்கள் லலித் மற்றும் குகன் இருவரும் டிசம்பர் மாதம் 2011 இல் யாழ்ப்பாணத்தில் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது குறித்து  மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்  திரும்ப முடிவு செய்துள்ளது.

காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை செய்யும் திணைக்களத்தால் கடத்தியவர்களை அடையாளம் காண முடியாது இருப்பதாக கூறுவதால், விசாரணை பல தடவைகள் தாமதம் ஆவதாக குற்றவியல் போலீஸார் தெரிவித்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டில் இவர்கள் கடத்தப்பட்ட சில நாட்களின் பின்னர் அன்றைய அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் ஊடகவியலாளர்கள் இதுகுறித்து கேள்வியெழுப்பியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்திருந்த அவர் லலித் மற்றும் குகன் ஆகியோர் சட்டவிரோதமாக கடத்தப்படவில்லை என்றும் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அவர்கள் கடந்த தடவை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தோன்றி "அக்கால கட்டத்தில் லலித் மற்றும் குகன் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து கிடைக்கப் பெற்ற அறிக்கையொன்றை ஆதாரமாகக் கொண்டே தான் அவ்வாறு தெரிவித்ததாகவும்,  லலித் மற்றும் குகன் ஆகியோர் பாதுகாப்புத் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தது உண்மை என்றும் அதற்குப் பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும்" அவர் தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சரின் நீதிமன்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பிக்க வேண்டும் என லலித்தின் தந்தையுடன் இணைந்து முன்னிலை சோசலிச கட்சி மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கையினை முன்வைக்கவுள்ளனர்.

லலித் - குகன் இருவருக்கும் என்ன நடந்தது என்ற சரியான தகவல் கிடைக்கும் வரை குகனின் குடும்பத்தினருடன் இணைந்து லலித்தின் தந்தை ஆறுமகம் வீரராஜ் அவர்கள் போராடப்போவதாக அறிவித்துள்ளார்.

லலித்-குகன் பாதுகாப்பு அமைச்சினால் கடத்தப்பட்டது உண்மை! கெஹலிய சாட்சியம்